யுவனின் இன்னிசை நிகழ்வை புறக்கணிக்க கனேடிய தமிழ் இளைஞர்கள் வேண்டுகோள்!

கனடாவில் எதிர்வரும் 25ம் திகதி நடைபெறவிருக்கும் யுவன் சங்கர்ராஜா மற்றும் அவரது குழுவின் இசைநிகழ்ச்சியை புறக்கணிக்குமாறு கனேடிய தமிழ் இளைஞர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தாயக மக்களுக்காக என்ற போர்வையில் தமது சுய லாபத்தை அடிப்படையாக கொண்டு செயற்ப்படும் தனிநபர்களின் தன்னிச்சையான போக்கு கனேடிய தமிழ் சமூகத்தின் மத்தியில் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதன் தொடர்ச்சியாகவே கனேடிய தமிழ் இளைஞர்கள் இந்நிகழ்வைப்புறக்கணிக்குமாறு கனேடிய தமிழ் சமூகத்திடமும் இசைப்பிரியர்களிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

எதிர்வரும் ஏப்பிரல் 25ம் திகதி இசைநிகழ்ச்சி குறிப்பிட்டது போல நடைபெறும் என தெரிவித்துள்ள ஏற்ப்பாட்டாளர்கள், இசை நிகழ்ச்சி குறித்து தெரிவிக்கையில் மன அழுத்தத்திலிருக்கும் மக்களுக்கு ஒரு ஆறுதல் தேவை என்றும் நிகழ்வில் கிடைக்கும் லாபத்தில் ஒரு பகுதி தாயக மக்களுக்கு அனுப்பப்படும் என்று தெரிவித்தனர்.

ஆனால் இந்தியாவில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் நிகழ்வின் ஏற்பாட்டாளரும் தமழோசை வானொலியின் நிர்வாகியுமான சிறி அவர்கள் தாம் இட்ட முதலை பெற வேண்டும் என்பதற்காகவே இந்நிகழ்வை நடாத்த வேண்டியுள்ளது எனத் தெரிவித்ததுடன் இப்போதைய ஈழத்தின் சூழல் மாற்றமடையும் எனத் தெரிவித்த போதும் இது தொடர்பான தமிழக பத்திரிகையாளர்களின் கேள்விக்களுக்கு மழுப்பலான பதிலை வழங்கி விடை பெற்றார்.

அதே போல மின்னஞ்சல் ஊடக இது தொடர்பாக ஊடகங்களால் முன்வைக்கப்பட்ட ஆதங்கங்கள் அனைத்தும் உதாசீனம் செய்யப்பட்டு பொறுப்பற்ற வகையில் பதிலளிக்கபட்டமை இளைஞர்கள் மத்தியில் விசனத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.

தாயக மக்கள் தினம் தினம் செத்து மடிகையில் இசை நிகழ்ச்சி தேவையா? என்று ஒவ்வொரு தமிழனும் சிந்திக்க வேண்டிய நிலையில் இருக்கின்றனர். அங்கே தமிழர்கள் தங்கள் உயிர்களை கொடுத்து தமிழீழம் குருதியில் நனைந்து கொண்டிருக்கையில் இங்கு இப்படியான இசை நிகழ்ச்சிகள் தேவையா?

இந்நிகழ்ச்சியை இளைஞர்கள் புறக்கணிக்க வேண்டும். இந்நிகழ்வு முற்று முழுதாக இளைஞர்களை நம்பியே நடாத்தப்படுவதால் இனமான முள்ள, இதயமுள்ள எந்த இளைஞனும் இந்நிகழ்வில் பங்கு பற்ற மாட்டான். என்று கனேடிய தமிழ் இளைஞர்கள் மேலும் தெரிவித்தனர்.


இத தொடர்பாக தாம் மக்களை நேரடியாகவும் தொலை பேசி மூலமும் அணுகி தனிப்பட்ட ரீதியில் புறக்கணிப்புக்கு ஆதரவு கோரப் போவதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

கனேடிய தமிழ் ஊடகங்களோ, இங்கு செயலாற்றிக் கொண்டிருக்கும் தமிழ் அமைப்புக்களோ இந்நிகழ்வு பற்றி அக்கறைப்படவில்லை. அவர்களின் பொது வேலைத்திட்டஙகள் எவை என்று மக்களுக்கோ இளைஞர்களுக்கோ புரியவில்லை. வீதியில் பல லட்சம் மக்கள் திரண்டு வந்து நின்றது யுவன் சங்கர்ராஜாவின் இசை நிகழ்ச்சிளை காணவா? என்று கோள்வி எழுப்பினர்.

இதே நேரம், இந்நிகழ்வு தாயக மக்கள் எம் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு விழப்போகும் சாவு மணி என்றும் குறுகிய நிலப்பரப்புக்குள் இருக்கும் மக்கள் நிமிர்ந்து பார்ப்பது உலகை அல்ல உலகில் வாழும் தமிழரை என்று கனேடிய தமிழர்கள் மத்தியில் பரவலாக பேசப்படுகின்ற போதும் நிகழ்வு பற்றி நேரடியாக அதை புறக்ககணிக்க போவதாக அறிவிக்கும் துணிவு எந்த அமைப்புக்கும் இல்லை என்பது வேதனையான விடயமாகும்.

தமிழ் மக்களின் வேதனையை விளையாட்டாய் எடுக்கும் ஈழத்தமிழர்ளுக்கு மட்டுமல்ல எம் சொந்தங்களின் நிலையறிந்தும் நிகழ்வில் பங்கு பற்றும் யுவன்சங்கர்ராஜாவுக்கும் எமது எதிர்ப்பை காட்டும் வகையில் இந்நிகழ்வை புறக்கணிப்போம்.

Comments