துயரத்தின் விளிம்பில் அல்லலுறும் வன்னி மக்கள்

தமிழரை சிங்களப் பேரினவாதிகள் இன அழிப்புச் செய்கின்றனர். இதற்கு வல்லாதிக்கம் கொண்ட சில நாடுகள் துணை போகின்றன. இதனை எமது மக்கள் நன்கறிவார்கள். அதே போன்று இயற்கையும் துன்பப் படுத்துவதை எமது உறவுகள் நன்கறிவார்கள். பலவழிகளிலும் துயர்படும் தமிழ் இனத்தின் துயர் துடைக்க தமிழரே போராட வேண்டியுள்ளது. இந்த பத்தியெழுத்துள் புதிதாக ஒன்றும் செல்லுவதற்கில்லை ஏற்கனவே நாம் பார்த்ததும் கேட்டதும் என்ற தகவல்கள்தான் இதற்குள் செல்ல வெண்டியுள்ளது.

வன்னிப் பெரு நிலப்பரப்பின் கிழக்கில் குறுகிய நிலப்பரப்பிற்குள் ஒதுக்கப்பட்டுள்ள மக்களைப் பலி எடுக்கும் கொடூரச் செயல்களை சிங்களப் பேரினவாதிகள் இடைவிடாது தொடராகச் செய்கின்றனர். இந்த நிலைமைகளில் நாளாந்தம் மக்கள் அழிக்கப்படும் செய்திகளே வந்த வண்ணம் உள்ளன. பாலகர்களையும் சிதறடித்து கொன்று குவிக்கின்றனர். எம்மை உலகில் யாரும் கேட்க முடியாது என்பதற்கு அமைவாகத்தான் சிங்களப் பேரிணவாதிகள் தமிழ் மக்களை கொன்றழிக்கின்றனர்.

சிங்களப் பேரினவாதிகள் இன அழிப்பைச் செய்யும் ஏககாலத்தில் வன்னி பெரு நிலப்பரப்பிற்குள் சூறாவளியும் அடித்துள்ளது. அண்மைக் காலமாக சுடடெரிக்கும் வெயிலில் வதங்கிய மக்களுக்கு குளிரூட்ட வந்தது போன்று கடும் மழை பெய்துள்ளமை அவலமாகவே உள்ளது.

இருப்பிடங்களை விட்டுத் தொடராக அலைந்து ஒதுங்கிய மக்களுக்கு சீரான வாழ்விடம் அமைக்கவும் வழியில்லை இருக்கும் பொருட்களை வைத்து சிறிய கூடாரங்களை அமைத்திருந்திருந்தவர்களுக்கும் குண்டு மழையினால் அவலமே ஏற்பட்டுள்ள இந்த நிலைமையில்தான் மழையின் கடும் சீற்றத்தினால் மக்கள் செல்லொணாத் துன்பங்களை வன்னியில் அனுபவித்து வருகின்றனர்.

வான் தாக்குதல்களுக்கும், ஆட்டிலரித் தாக்குதல்களுக்கும் அஞ்சி பதுங்குழிகளில் மக்கள் புக முடியாதளவிற்கு மழை வெள்ளம் பதுங்கு குழிகளை நிரப்பியுள்ளதால் குண்டுத் தாக்குதல்களினால் கொல்லப்படும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.

வன்னிக்குள் படையினரின் பிடிக்குள் சிக்குண்ட மக்களின் நிலைமைகள் மிகவும் மோசமாக உள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பிட்ட தொகை மக்களை வவுனியாவிற்கு கொண்டு வந்து தங்க வைத்துள்ள சிறி லங்காப் படையினர் இங்குள்ளவர்களை ஆண்கள் பெண்களாக தரம் பிரித்து படுமோசமான நிலையில் உடல் உள ரீதியாக துண்புறுத்துகின்றனர்.

13 இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு அடிப்படை வசதிகள் பூர்த்தி செய்யப்படாத குறையும் உள்ளது. பெரும் தொகையான மக்கள் பாடசாலை மைதானங்களில் கூடாரங்களுக்குள் வாழ வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளனர். இவர்களும் கடும் மழையினால் மிகமோசமாக பாதிக்கப் பட்டுள்ளதைக் காணக் கூடியாதாகவுள்ளது.

இப்படி பாதிக்கப்பட்டுள்ள மக்களை வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட பார்வையிட படைத் தரப்பினர் அனுமதி வழங்க மறுத்துவிட்டனர். வவுனியா காமினி மாகா வித்தியாலயத்தில் தங்கியிருக்கும் மக்களை வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் பார்ப்பதற்கு சென்றிருந்த போது ஐந்து நிமிடத்துக்குள் முகாமை விட்டு படையினர் வெளியேற்றியுள்ளனர்.

அப்பாவி மக்களை மிகமோசமான நிலையில் நடத்தும் சிறி லங்காப் படையினர் மக்களை மீட்பதற்காகவே தமது யுத்தம் இடம்பெறுவதாக வெளி உலகிற்கு பறைசாற்றி வருகின்றமை யாவரும் அறிந்ததே. இது ஒரு புறமிருக்க இரவு நேரங்களில் முகாம்களை அண்மித்துள்ள பகுதிகளில் இருந்து பெண்களில் அவலக் குரல் கேட்பதாகவும், ஆண்கள் சித்திரவதைக்கு உள்ளாக்கப் படுவதாகவும் தெரிய வருகின்றது.

முகாம்களுக்குள் படையினரால் முடக்கப்பட்டு உள்ளவர்களில் பலர் காணமல் போயுள்ளதாக அண்மைக்கால தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் படையினரால் வண்புணர்விற்கு உள்ளாக்கப்பட்ட பல இளம் பெண்கள் அச்சம் காரணமாக தமக்கு இடம்பெற்ற கொடுமைகளை சொல்லாமல் மூடிமறைத்தும் வருகின்றனர்.

மேலும் சித்திரவதைகளுக்கு உள்ளாகும் ஆண்கள் பலர் கொல்லப்பட்டு புதைக்கப் படுவதாகவும் வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பலபத்தாண்டு காலமாக போராடிய தமிழர் இனி எந்த நிலையை எடுத்தாலும் சிங்களப் பேரினவாதிகள் நினைத்ததைச் செய்வார்கள். எனவே, விலை கொடுப்பிற்கு முடிவும் விடிவும் வேண்டும் என்ற தமிழரின் உறுதி இலக்கை எட்டும்.

பசியாலும் படுகொலையாலும் அன்றாடம் துயர்படும் மக்கள் எத்தனை துயர் வந்தாலும் எம் மண்ணைவிட்டும் ஓடோம் என்ற உறுதிப்பாட்டுடன் உள்ளனர். இவர்களின் இந்த உறுதியான திடமான நம்பிக்கைதான் அனைவரையும் மலைக்க வைத்துள்ளது.

மரணம் எமக்கு புதியதல்ல பழக்கப்பட்டவைதான் என்று சொல்லும் அளவிற்கு வன்னி மக்களின் அவலம் தொடரும் நிலையில் பாலகர்கள் கூட இன்று சிதைந்த உடல்களையும் இரத்தக் கறைகளையும் கண்டு அஞ்சாத நிலைக்கு இந்த சிங்கள பேரினவாதத்தின் இன அழிப்பு யுத்தம் மாற்றியுள்ளது.

எல்லாத் துன்பங்களும் எமக்கே என்றிராது எமக்கு மட்டும் ஏன் துன்பம் தொடராய்த் தொடர வேண்டும் என்று கேள்வி கேட்டு புது வீச்சுடன் உலகத் தமிழ் இனமே பேரெழுச்சி கொண்டால்தான் தமிழரின் நிரந்தரப் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும். அப்போதே எமது எல்லாத் துன்பங்களும் களைந்தெடுக்கப்படும்.

- கனகரவி -
நன்றி: நிலவரம்

Comments