பூகோள அரசியல் மாற்றங்களும் தமிழ் மக்களின் போராட்டங்களும்

இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை, ஐ.நா.வின் பாதுகாப்புச் சபை வரை கொண்டு செல்லப்பட்டுள்ளது. வன்னி அவலங்களுக்கும், புலம் பெயர் தமிழ் மக்கள் நிகழ்த்தும் இடைவிடாத போராட்டங்களும் ஐ.நா.வின் வாசல் கதவினை தட்ட ஆரம்பித்துள்ளதெனக் கருதலாம்.

இதனைத் தடுப்பதற்கு, தன்னாலான சகல முயற்சிகளையும் இலங்கை அரசு மேற்கொள்வதைக் காணலாம். ஆனாலும், புதிய உலக ஒழுங்கில், அதிலும் பொருளாதார வீழ்ச்சியினை எதிர்கொண்டிருக்கும் இவ்வேளையில், வல்லரசுகளின் பார்வை, சொந்த வீட்டுப் பிரச்சினைகளில் நிலைகொண்டுள்ளது.

அமெரிக்காவினால் உருவாக்கப்பட்டிருக்கும், சர்வதேசம் சார்ந்த இப்பொருளாதாரச் சீரழிவினை, புதிய ஒபாமா அரசாங்கம், எவ்வாறு எதிர்கொண்டு தீர்க்கப்போகிறது என்பது குறித்தே உலகம் அக்கறை கொள்கிறது.

சீனாவின் அபரிமிதமான பொருளாதார, படைத்துறை வளர்ச்சி ஒரு புறமாகவும், ஐரோப்பிய பிராந்தியத்தில் ரஷ்யா கிளப்பும் புதிய சிக்கல்கள் மறுபுறமாகவும், அமெரிக்க நிலைப்பாட்டில் தளம்பலை ஏற்படுத்துகிறது.

சோவியத்தின் உடைவோடு, விரிவடைந்த ஐ÷ராப்பிய ஒன்றிய நாடுகளில், குறிப்பாக கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் அமெரிக்கத் தலைமைக்கு எதிரான போக்குகள் முளைவிட தொடங்கியுள்ளது. புதிதாக இணைந்த, இந்த நிதிவளம் குறைந்த கிழக்கு ஐரோப்பிய நாடுகள், பொருளாதாரச் சீரழிவால் அதிகம் பாதிப்படைகின்றன.

ரஷ்யா வழங்கும் எரிவாயுவிற்கான பணத்தினைச் செலுத்த முடியாத, வங்குரோத்து நிலையில் புதிய கிழக்கு ஐரோப்பிய நாடுகள் உள்ள நிலைமை இப்படியே நீடித்தால், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இந்நாடுகள் விலகிச் செல்லும் ஆபத்து ஏற்படலாம்.

பொருளாதாரத் தற்காப்பு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள வளமிக்க பிரான்ஸ், ஜேர்மனி போன்ற தேசங்கள், கிழக்கு ஐரோப்பியாவிலுள்ள தமது பாரிய தொழிற்சாலைகளை மூடும் நிலைக்கு வந்துள்ளன.

ஆனாலும், ஒன்றியத்தினுள் இணைந்தால், தமது வாழ்வு வளம் பெறுமெனக் கண்ட கனவு, உடைந்துநொறுங்குவதை, இப்புதிய தேசங்கள் உணரத்தொடங்கியுள்ளன.

ஒபாமா அரசானது, ரஷ்யாவுடன் மேற்கொள்ளும் தந்திரோபாய நகர்வுகளால் போலந்தும், செக் குடியரசும் பதற்றமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நாடுகளிலேயே, ரஷ்யாவிற்கெதிரான ஏவுகணைப் பாதுகாப்பு பொறிமுறையினை நிறுவ அமெரிக்கா முனைவதாக தெரிவிக்கப்பட்டது. இந்தத் தளத்தை அமைப்பதற்கு இடமளித்து, நிதி உதவிகளைப் பெறலாமென்கிற நோக்கமும், புஷ் காலத்தில் பெரும் கனவாக இவர்களுக்கு இருந்தது.ஏவுகணைத் தள விவகாரத்தை, பேரம் பேசும் சக்தியாக மாற்றும் புதிய அமெரிக்க ஆட்சியாளர்கள், ஈரானுக்கு வழங்கும் அனுசக்தி விரிவாக்க உதவிகளை நிறுத்தச் சொல்லி ரஷ்யாவிடம் வலியுறுத்துகிறார்கள்.

இந்நிலையில் ரஷ்யா, ஈரான், துருக்கி என்கிற மூன்று கேந்திர மையங்களை வைத்து அமெரிக்கா நடாத்தும் காய் நகர்த்தல்களில், பழைய ஜோர்ஜ் புஷ் காலத்து உறவுகள் ஒரங்கட்டுப்படுவதை புரிந்து கொள்ளலாம்.
தற்போதைய நெருக்கடியான பொருளாதார நிலைமையக் கருத்தில் கொண்டு, புதிய நண்பர்களை அணிசேர்க்கும் காரியத்தில், அமெரிக்க ஈடுபட விரும்பவில்லையென்பது புரியப்படுகிறது.

பொருளாதார சிதைவினை எதிர்கொள்ளும் அதேவேளை, ஐரோப்பாவில் ரஷ்யாவையும், ஆசியாவில் சீனாவையும் கண்காணிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் அமெரிக்கா இருப்பது தவிர்க்க முடியாததொன்றாகிவிட்டது.
அதேவேளை ஆசியப் பிராந்தியத்தில் வேகமாக வளர்ந்துவரும் சீன அணு ஆயுத வல்லரசின், ஆதிக்கப் பரம்பலை தடுத்து நிறுத்த அமெரிக்கா முயல்வதை கவனிக்கலாம்.

ஹிலாரி கிளின்டன் பதவியேற்ற கையோடு மேற்கொண்ட முதல் விஜயம் ஆசியாவிற்கு என்பதை குறித்துக் கொள்ள வேண்டும். அதிலும் ஆசிய நாணய நிதியத்தை உருவாக்க, தீவிரமாகச் செயற்படும் சீனா, ஜப்பான், தென்கொரியா மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகளுக்கே அவர் பயணம் செய்தார்.
தன்னையும் ஒரு தடவை வந்துபார்த்து,பாகிஸ்தானிற்கு கடுப் பேற்றுவாரென்று காத்திருந்த இந்தியாவிற்கும் அவர் செல்லவில்லை.

சீனாவிற்கெதிராக இந்தியாவை சகல வழிகளிலும் வளர்த்துவிட வேண்டுமென்பதே ஜோர்ஜ் புஷ்ஷின் இராஜதந்திர உத்தி. ஆனாலும், தற்போதைய ஆட்சியாளரின் கேந்திர நல உத்திகள் மாறுபட்டவை. அதாவது சீனாவிற்கெதிராக இன்னுமொருவரை வளர்ப்பதை விட, சீனாவின் கூட்டணிக்குள் குழப்பத்தை உருவாக்கி, அதை பலவீனமாக்கலாமென்பதை ஒபாமா அரசின் புதிய உலக கோட்பாட்டுத் தந்திரம்.

கடந்த எட்டு வருடகால புஷ்ஷின் ஆட்சியில் அமெரிக்காவின் கேந்திர நலச் சமன்பாட்டில் இந்தியாவிற்கு ஒரு தனிப்பெருமைமிக்க இடமொன்று இருந்தது.
வளர்ந்து வரும் நாடாகவும், அணு ஆயுத வல்லரசாகவும் இந்தியா திகழ்வதால், உலக கேந்திர வலுச்சமநிலையில் அதற்கொரு முக்கியத்துவம் இருப்பதாக முன்னைய அமெரிக்க ஆட்சியாளர் கருதினர்.

ஆனாலும், தற்போது, அமெரிக்க இந்திய அணுசக்தி ஒப்பந்த பேச்சுவார்த்தைகளில், வி÷சட தூதுவராகத் தொழிற்பட்ட, இந்திய பிரதம மந்திரியின் பிரதிநிதி சியாம் சரண், சீனா அமெரிக்கா கேந்திரக் கூட்டிற்குள் இணைய வேண்டுமென இந்தியாவை வலியுறுத்துகிறார்.

தற்போதைய நிலையில், இந்தியாவிடமிருந்து அமெரிக்கா எதிர்பார்க்கும் அவசர உதவியானது, பாகிஸ்தானுடன் இந்தியா மோதல் தவிர்ப்பினை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதாக மட்டுமே இருக்க முடியும்.

இந்திய எல்லைகளில் குவிக்கப்பட்டுள்ள பாகிஸ்தானிய இராணுவத்தினர் வட மேற்கு பகுதிகளில் அதிகம் தேவைப்படுவதால், அச்சூழலை உருவாக்கும் நிலையினை ஏற்படுத்த இந்திய உதவி அமெரிக்காவிற்கு அவசியம். அமெரிக்காவின் இத்தகைய சுயநலதந்திரங்களைப் புரிந்து கொள்ளும் இந்தியா தனது எல்லைகளில் பதட்ட சூழலைத் தனிய விடாமல் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது.

தலிபான்கள் மீது நேட்டோ தொடுக்கும் இராணுவ நடவடிக்கைகளில், சீனாவையும் இணைத்துக் கொள்ள, அமெரிக்கா முனைகின்றது என்கிற செய்தியும் இந்திய செவிகளில் விழுகின்றது.

உலகப் பொருளாதார முடக்கத்தை நிமிர்த்த, சீனாவினை நோக்கி நகரும் அமெரிக்க போக்குகளையிட்டு ஜப்பானும் எச்சரிக்கையோடு கூடிய கவலை கொள்கிறது.

அதேவேளை, சீனாவின் சர்வதேசப் பிரசன்னமானது, ஆபிரிக்காவிலிருந்து இலத்தீன் அமெரிக்க நாடுகள் வரை விரிவடைந்து செல்வதைக் காணலாம்.
சர்வதேச நாடுகள் யாவற்றிலும் பார்க்க, அதிக தொகையான இரண்டு ரில்லியன் அமெரிக்க (கூணூடிடூடூடிணிண) டொலர்களின் தனது நாணயக் கையிருப்பாகக் கொண்ட ஒரே நாடு சீனாவாகும். அமெரிக்காவின் ஒரு ரில்லியன் டொலர் கடனை தானே ஏற்றுக் கொண்டு, அதற்கு மாற்றீடாக அமெரிக்க திறைசேரி முறி (கூணூஞுச்ண்தணூதூ ஆணிணஞீ) பத்திரத்தை பெற்றுக் கொண்டு அந்நாட்டிற்கு உதவி புரிந்த ஒரே நாடும் சீனாதான்.

ஆனாலும், பொருளாதாரப் பின்னடைவினால், அமெரிக்க டொலரின் நாணயப்பெறுமதி வீழ்ச்சியடைவதையிட்டு சீனா கவலை கொள்கிறது.
டொலர் நாணய மதிப்பிறக்கத்தால், "2' ரில்லியன் சேமிப்பும் அதேவேளை திறைசேரி முறிப் பத்திரத்தின் பெறுமதியும் வீழ்ச்சியடையும். ஆகவே டொலரின் சர்வதேச ஆதிக்கத்தை உடைக்க வேண்டிய தேவைகருதி,
நாணய மதிப்பிறக்கத்தால் தனது முதலீடுகளும், நாணயக் கையிருப்பும் பாதிக்கப்படுவதாகக் கூறி சர்வதேச நாணய நிதியத்தின் மீது அழுத்தங்களை பிரயோகிக்க ஆரம்பித்துள் ளது சீனா.

"அமெரிக்க டொலர் என்று குறிப்பிடாமல், புதிய சர்வதேச நாணயமொன்றினால் சர்வதேச நாணய நிதியத்திலுள்ள பன்னாட்டு நாணயக் கையிருப்பு, பிரதியீடு செய்யப்பட வேண்டுமென, சீன மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்த கருத்தினை கவனிக்க வேண்டும்.

வருகிற ஏப்ரல் மாதம், இரண்டாம் திகதி லண்டனில் கூட்டப்படவிருக்கும் ஜீ 20 (எ20) ஒருநாள் உச்சிமாநாட்டில் இவ்விவகாரம், குறிப்பாக தற்போதைய நிதிக்கட்டமைப்பினை மறு சீரமைத்தல் பற்றி சீனா தனது இறுக்கமான நிலைப்பாட்டினை வலியுறுத்த விருக்கின்றது.

அதாவது சர்வதேச நாணயச் சந்தைப் புழக்கத்தில் ஆதிக்கம் செலுத்தும் டொலர், யூரோ, ஸ்ரேலிங் பவுன்ஸ் மற்றும் ஜப்பானிய "யென்' போன்றவற்றோடு "சீன "யுவனையும் (ஙுதச்ண) இணைத்துக் கொள்ள வேண்டுமென சீனா எதிர்பார்க்கிறது.

பன்னாட்டுப் பொருளாதார முடக்கம், சகல வல்லரசாளர்கள் மீதும் தாக்கத்தை ஏற்படுத்துவதால், பிராந்திய அணி சேர்விற்கான முக்கியத்துவம் குறைவடைந்து, சந்தைப் பங்கிடுதலிற்கான போட்டி, இவர்களிடையே மேலோங்கி வருவதை அவதானிக்கலாம்.

அதன் பிரதிபலிப்பாகவே, சர்வதேச
நாணயம் குறித்த கேள்விகள் முன்வைக்கப்படுவதனை நோக்கலாம். அமெரிக்க டொலரின் ஆதிக்கத்தை உடைக்காமல், சந்தைகளை பங்கு பிரித்தும் பலனில்லை என்பதனை சீனா உணரத் தொடங்கியுள்ளது.

ஜீ 20 மாநாட்டினூடாக, தமக்குச் சாதகமான மாற்றங்கள் உருவாகாவிட்டால், சர்வதேச நாணய நிதியத்திற்கெதிரான ஆசிய நாணய நிதியமொ ன்றை தனது தலைமையில் சீனா உருவாக்கும் நிலை ஏற்படலாம்.

சீனாவின் இத்தகைய மூலோபாயத்தை புரிந்து கொள்ளும் சர்வதேச நாணய நிதியம் (ஐMஊ) சில சமரச சமிக்ஞைகளை ஜீ20 மாநாட்டிற்கு முன்பாகவே வெளியிடத் தொடங்கியுள்ளது.

ஆகவே, இத்தகைய பொருளாதார இழுபறி நிலையில், கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நிலைகளைத் தக்க வைக்கும் முனைப்பில், சீனா, ரஷ்யா போன்று அமெரிக்கா தற்போது ஈடுபடுமாவென்று தெரியவில்லை.அமெரிக்க பெண்டகன் விடுத்த வழமையான ஆண்டறிக்கையில், சீனாவின் இராணுவப் பல விரிவாக்கத்தையிட்டு பல கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

சீனாவின் இராணுவ ஆதிக்க எல்லை விரிவாக்கம், ஆசிய பசுபிக் பிராந்தியத்திற்கு அப்பால் நீண்டு செல்லும் சாத்தியப்பாடுகள் அதிகரிப்பதாக, அமெரிக்கா கொள்ளும் கவலையும் அந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இந்த வாரம் ஐ.நா. பாதுகாப்புச் சபையில், ஏனைய விவகாரங்கள் என்கிற நிகழ்ச்சி நிரலின் கீழ் விவாதிக்கப்பட்ட இலங்கைப் பிரசிசனை ரஷ்யா சீனாவினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

"வீட்டோ அதிகாரம் கொண்ட சீனா, ரஷ்யா, அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் பிரித்தானிய வினையும், மெக்சிக்கோ, ஆஸ்திரியா, கொஸ்ட்டாரிகா, ஜப்பான் உகண்டா, துருக்கி, வியட்னாம் லிபியா குரோசியா, புர்கினா பெசோ போன்ற தற்காலிக உறுப்பு நாடுகளையும் கொண்ட 154 நாடுகளடங்கிய பாதுகாப்புச் சபையில் 9 நாடுகளின் ஆதரவு இருந்தால் மட்டுமே, இலங்கை விவகாரம் முதன்மையான நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்படும். அதற்கான வாய்ப்புக்கள் தற்போது மிகக் குறைவாகவே காணப்படுகிறது.

அவ்வாறு இருப்பினும், மேற்குலக வீட்டோ அதிகார வாசிகளால் இப்பிரச்சினை பாதுகாப்புச் சபையில் கொண்டுவரப்பட்டு, தீர்மானமொன்று முன்மொழியப்பட்டால், "சீனா' தனது "வீட்டோ' அதிகாரத்தை, ஏழாவது தடவையாகப் பிரயோகித்து, அதனைத் தடுத்து நிறுத்த முற்படலாம்.

ஏற்கனவே ஐ.நா. சபையில் உறுப்புரிமை கோரி, பங்களாதேஷ் விண்ணப்பித்த போது, 1972 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25ஆம் திகதி,
தனது வீட்டோ அஸ்திரத்தை "சீனா' பயன்படுத்தி, அவ்விண்ணப்பத்தை தடுத்த வரலாறும் உண்டு.

அதாவது 27 ஆவது சரத்தின் பிரகாரம், சர்வதேச அமைதிக்கு ஆபத்து இல்லாத விடயங்கள் தொடர்பாக பாதுகாப்புச் சபையில் விவாதிக்கத் தேவையில்லையென்பதே சீனாவின் நிலைப்பாடு.

இத்தகைய இறுக்கமான சூழ்நிலையை உடைத்துக் கொண்டு, தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் அழிவினை தடுத்து நிறுத்த, மேற்குலக நாடுகள், பாரிய இராஜதந்திர முன்னகர்வுகளை ஐ.நா. பாதுகாப்புச் சபையில் மேற்கொள்ளுமாவென்று தெரியவில்லை.அமெரிக்கா தூதுவர் றொபேட் ஓ பிளேக் நேர்காணலொன்றில் குறிப்பிடப்பட்ட விடயங்கள், இந்த சந்தேகங்களைத் தோற்றுவிக்கின்றன.

ஆகவே, புலம்பெயர் நாடுகளில், தமிழ் மக்களால் மேற்கொள்ளப்படும் போராட்டங்களில் பண்பு ரீதியான மாற்றங்கள் பல இணைக்கப்
பட வேண்டிய தேவையினை, உலகின் புதிய போக்குகள் உணர்த்துகின்றன.
"வணங்காமண்' என்கிற கப்பலின் முல்லைத்தீவு நோக்கிய மனிதாபிமானப் பயணம், புதிய வாசல்களை திறக்கக்கூடிய ஏது நிலைகளை உள்ளடக்கிய பண்பினை கொண்டிருப்பதாகக் கணிப்பிடலாம். இதுபோன்ற பல கப்பல் பயணங்கள் சர்வதேச அழுத்தங்களை அதிகரிக்கக் கூடிய வாய்ப்பினை உருவாக்கும். தீர்மானங்களை விட, விரைவு படுத்தப்படும் செயற்பாடுகளே, வல்லரசுகளுக்கிடையே விரிவடையும் முரண்பாடுகளை அதிகரிக்கும்.

- இதயச்சந்திரன்-

Comments