தேவை அவதானம்!

ஐ.நா. மனித உரிமைக் குழுவின் பத்தாவது கூட்டத் தொடர் தற்போது ஜெனிவாவில் நடைபெற்று வரும் நிலையில் சிறி லங்காவி;ல் தமிழ் மக்களுக்கு எதிராக நடைபெற்று வரும் இனப்படுகொலை மனித உரிமை மீறல்கள் பற்றி பல்வேறு மட்டங்களில் பிரஸ்தாபிக்கப்பட்டு வருகின்றது. கூட்டத் தொடரின் ஆரம்ப நாட்களில் அமைச்சர் மட்டத்திலான கலந்துரையாடல் நடைபெற்ற போது மேற்குலக நாடுகளின் அமைச்சர்கள் தமிழ் மக்களின் அவலம் பற்றி ஆதாரங்களுடன் முன்வைத்த போதிலும் சிறி லங்காப் பிரதிநிதிகள் அவற்றை வலுவாக மறுத்துள்ளனர்.

எனினும், பின்னர் அரச சார்பற்ற நிறுவனங்களுடன் சந்திப்பை நடாத்திய மனித உரிமைகள் ஆணையாளர் கலாநிதி நவநீதம்பிள்ளை சிறி லங்கா அரசைக் காரசாரமாகக் கண்டித்தார். தவறைச் செய்பவர்கள் அவற்றை மற்றவர்கள் எளிதில் மறந்து விடுவார்கள் என நினைத்தால் எனது விடயத்தில் இது நடக்காது என மிகவும் கண்டிப்புடன் அவர் கூறினார்.

இதே சமயம் தமிழ் மக்களை சிங்கள அரசு துன்புறுத்துவதைத் தடுக்கும் நோக்குடன் இவ்விடயத்தை ஐ.நா. பாதுகாப்புச் சபையில் தீர்மானமொன்றைக் கொண்டு வர மெக்சிக்கோ முயன்ற போது ரஸ்யா அதனைத் தடுத்து விட்டதாகவும் செய்திகள் வெளி வந்திருந்தன.

இது தவிர வன்னி மக்களைப் பாதுகாப்பது தொடர்பில் அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் திருமதி ஹிலாரி கிளின்ரனும் இந்திய வெளியுறவுச் செயலாளர் சிவ் சங்கர் மேனனும் சந்தித்து உரையாடியதாக மற்றொரு செய்தி வெளியாகியுள்ளது. இதில் என்ன விடயங்கள் பேசப்பட்டது என விலாவாரியாகத் தெரியா விட்டாலும் கூட தமிழ் மக்களின் விவகாரமே பேசப்பட்டிருக்கும் என ஊகிக்கலாம்.

ஆக மொத்தம் உலகெங்கும் பரந்து வாழும் ஒட்டு மொத்தத் தமிழ் மக்களின் உழைப்பினாலும் அவர்களது நண்பர்களின் முயற்சியாலும் தவிர்க்க முடியாதபடி ஈழத் தமிழ் மக்களின் விவகாரம் இன்று சர்வதேச சமூகத்தின் நாட்குறிப்பில் இடம்பிடித்து விட்டது. தமிழ் மக்களின் அவலம் பற்றிக் கதைக்கும் அவர்கள் தவிர்க்க முடியாமல் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு தொடர்பாகவும் - விரும்பியோ விரும்பாமலோ - கதைக்கும் நிலை உருவாகியுள்ளது. இந்தச் சூழலை தமிழ் மக்கள் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

சர்வதேச அரங்கிலே அனைத்துச் சக்திகளுமே தத்தமெக்கென ஒரு நிகழ்ச்சித் திட்டத்தை வைத்திருக்கின்றமை ஒன்றும் இரகசியமான விடயமல்ல. எனவே, அவை ஒவ்வொன்றும் தமது நலன் சார்ந்தே இந்த விடயத்தினை அணுக முயலும்.

ஆனால், அதேவேளை இந்த விவகாரத்தில் அணுகுபவர்களை நாம் எமது நிகழ்ச்சித் திட்டத்திற்கு ஏற்ப மாற்ற வேண்டிய கடமை எமக்கு உள்ளது.

தமிழ் மக்கள் எதனை எதிர்பார்க்கிறார்கள் என்பதை உலகிற்குப் பல தடவைகளில் நாம் ஒருமித்த குரலில் கூறியிருக்கின்றோம். இருந்தாலும் கூட அதனை மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கூறுவதில் தவறில்லை. கூறப்படவும் வேண்டும். ஏனெனில் மாறி வரும் களச்சூழலில் தமிழ் மக்களின் எதிர்பார்ப்பும் மாறியிருக்கலாம் என நினைப்பதற்கு இடமுண்டு அல்லவா?

அதேவேளை, இதனை எவ்வாறு செயற்படுத்துவது என்பதில் எமக்கிடையே ஒருங்கிணைந்த வேலைத்திட்டம் தேவை. வெண்ணெய் திரண்டு வரும் வேளையில் தாழியை உடைத்து விட பல சக்திகள் காத்திருக்கும் நிலையில் எமது பல தசாப்த கால முயற்சி பலனின்றிப் போய் விடாமல் பார்த்துக் கொள்வது அவசியம்.

Comments