போர்நிறுத்தமும், மனிதநேய உதவிகளுமே, மக்களுக்கான உடனடித் தேவை - தமிழீழ விடுதலைப் புலிகள்

போர்நிறுத்தமும், மனிதநேய உதவிகளுமே, மக்களுக்கான உடனடித் தேவைகள் என்று, தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து ஊடகச் செவ்வியை வழங்கியிருக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளின் பன்னாட்டு உறவுச் செயலுரித்தாளர் செல்வராஜா பத்மநாதன், தற்போதைய காலகட்டத்தில் சிறீலங்கா அரசாங்கத்தின் மீது போதிய அழுத்தங்களை பிரயோகித்து, போர்நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கும், யுத்த வலயங்களுக்கு போதிய அளவு உணவையும், மருந்தையும் அனுப்பி வைப்பதற்கும், உலக சமூகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

தற்போதைய சூழலில் மனிதநேய பிரதிபலிப்புக்கள் முக்கிய படிமுறையாக அமைந்தாலும், நீண்டகால நோக்கிலும், அடிப்படையான விடயங்களாகவும் விளங்கும் மக்களின் மெய்யான அபிலாசைகளை பூர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவது இன்றியமையாதது என்றும், செ.பத்மநாதன் சுட்டிக் காட்டியுள்ளார்.

யுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணமும், ஆசுவாசமும் கிடைக்க வேண்டும் என்ற முற்றுமுழுதான மனிதநேயக் கண்ணோட்டத்துடன், போர்நிறுத்தத்தை தமது விடுதலை இயக்கம் வலியுறுத்தி வருவதோடு, போர்நிறுத்த காலத்தில் தமது படை பலத்தை தமிழீழ விடுதலைப் புலிகள் கட்டியெழுப்பியதாக கூறப்படுவது கற்பனை என்றும், ஆறாண்டு கால போர்நிறுத்தத்தின் பொழுது, படை பலத்தைப் பெருக்கும் நடவடிக்கையில் சிறீலங்கா அரசாங்கம் ஈடுபட்டதையும், செ.பத்மநாதன் நினைவூட்டியுள்ளார்.

பலவீனமான நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இருப்பதாகக் கருதுவதும், தமிழீழ விடுதலைப் புலிகளை முடிந்து போன சக்தியாக எண்ணி நம்பிக்கை கொள்வதும் தவறு என்றும், சூழலுக்கு ஏற்ப வடிவம் எடுக்கக்கூடிய பலமான அமைப்பாக தமது விடுதலை இயக்கம் விளங்குவதாகவும், செ.பத்மநாதன் சுட்டிக் காட்டியுள்ளார்.

யுத்தத்தின் மூலம் மட்டுமே மக்களின் அரசியல் அபிலாசைகளை ஈட்ட முடியும் என்று கருதும் அமைப்பாக, தமது விடுதலை இயக்கம் விளங்கவில்லை என்றும், அரசியல் தீர்வின் மீது தமது விடுதலை இயக்கம் நம்பிக்கை கொண்டுள்ள அதேவேளை, இவ்வாறான அரசியல் தீர்வுக்கு உகந்த புறச்சூழல் நிலவுவது இன்றியமையாதது என்றும், செ.பத்மநாதன் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான பின்புலத்திலேயே அர்த்தபூர்வமான பேச்சுக்கள் இடம்பெற முடியும் என்பதோடு, இதற்கான புறச்சூழலை ஊக்குவிப்பதற்கும், உரிய அங்கீகாரத்துடன், தமது விடுதலை இயக்கமும், சிறீலங்கா அரசாங்கமும் சமதரப்பாக பேசுவதற்கும், ஆக்கபூர்வமான பணிகளில் உலக சமூகம் ஈடுபட வேண்டும் என்றும், தமிழீழ விடுதலைப் புலிகளின் பன்னாட்டு உறவுச் செயலுரித்தாளர் அழைப்பு விடுத்துள்ளார்.

Comments