பொதுமக்களை காக்க இலங்கை ஜனாதிபதி தவறியுள்ளார்: அமெரிக்க செனற் உறுப்பினர் ஜோன் கெரி கடிதம்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாதுகாப்பு வலயங்களில் உள்ள பொது மக்களை பாதுகாக்க தவறியுள்ளதாக அமெரிக்க சென்ற் சபை உறுப்பினர் ஜோன் கெரி தெரிவித்துள்ளார். இது இலங்கையின் சர்வதேச பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் என அவர் எச்சரித்துள்ளார். செனற் சபையின் வெளியுறவு சமூகத்தின் தலைவர் ஜோன் கெரி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு எழுதியுள்ள கடிதம் ஒன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கை இராணுவத்தினரின் எறிகணை தாக்குதல்களினால் பாதுகாப்பு வலயத்தினுள் அன்றாடம் பொதுமக்கள் கொல்லப்படுவதாக வெளியாகும் தகவல்கள் அதிகரித்துள்ளன. இவ்வாறு பொதுமக்கள் கொல்லப்படுவதனை வன்மையாக கண்டிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் அந்த பிரதேசத்தில் உள்ள பொதுமக்களுக்கு மனிதாபிமான உதவிகள் கிடைப்பதில்லை. ஊடகவியலாளர்களுக்கும் அந்த பிரதேசத்தில் அறிக்கை இடுவது தடை செய்யப்பட்டுள்ளமை கண்டனத்திற்குரியது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் மீதான அதீத வன்முறைகளை நிறுத்தி அவர்களுக்கான உதவிகளை வழங்கி பொதுமக்களின் உயிரிழப்புகளை உடனடியாக தடுக்க அரசாங்கம் முன்வர வேண்டும் என தாம் மீண்டும் வலியுறுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் ஒரு நண்பனாக இலங்கையின் தற்போதைய சூழ்நிலையில் பொதுமக்களின் நிலமைகளை அமெரிக்கா தொடர்ந்தும் அவதானித்து வரும் எனவும் ஜோன் கெரி சுட்டிக்காட்டியுள்ளார்.

Comments