ஈழத் தமிழர்களுக்காக தமிழக கர்நாடக எல்லையில் கர்நாடக தமிழர்கள் மறியல்: 200 பேர் திரண்டு இந்திய அரசுக்கு எதிராக முழக்கம்

ஈழத் தமிழர்கள் இனப்படுகொலையைக் கண்டித்து கர்நாடக வாழ் தமிழர்கள் கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளியில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் ஈழத்தில் போரைத் தடுக்காத இந்திய, தமிழக அரசுகளை கண்டித்து முழக்கமிட்டனர்.

கிருஸ்ணகிரி மாவட்டம் ஓசூரை ஒட்டியுள்ள கர்நாடக எல்லைப்பகுதி அத்திப்பள்ளி. இங்கு இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10:30 நிமிடமளவில் கர்நாடக வாழ் தமிழ் இயக்கத்தின் தலைவர் ராஜன் தலைமையில் 200-க்கும் அதிகமான தமிழர்கள் திரண்டனர்.

கைகளில் ஈழத்தில் நடக்கும் கொடூரங்களை விளக்கும் பதாகைகளை பிடித்திருந்தனர். அவர்கள் சிறிலங்கா அரசைக் கண்டித்தும் ஈழத்தில் போரைத் தடுக்கத் தவறிய மத்திய, தமிழக அரசுகளைக் கண்டித்து முழக்கமிட்டனர்.


[படம்: புதினம்]


[படம்: புதினம்]


[படம்: புதினம்]


[படம்: புதினம்]

கர்நாடக பெரியார் திராவிடர் கழகம் சார்பில் குமார், கர்நாடக அண்ணல் அம்பேத்கர் இயக்கத் தலைவர் ஜெயராமன், கர்நாடக தமிழர் தேசியக் கழகம் தலைவர் அகத்தியன், கர்நாடக தாழ்த்தப்பட்ட கிறிஸ்தவ கூட்டமைப்பு சார்பில் அந்தோணி றொபேர்ட், உலகத் தமிழர் வழிகாட்டும் தளம் அமைப்பின் சார்பில் கர்நாடகத் திரைப்பட இயக்குநர் கணேசன் உள்ளிட்டோர் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டு ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக உரையாற்றினர்.

எல்லைப் பகுதியில் நின்ற கர்நாடக காவல்துறையினர் அவர்களை கலைந்து செல்லுமாறு கூறினர். இருப்பினும் போராட்டத்தில் ஈடுபட்ட கர்நாடகத் தமிழர்கள் முழக்கமிட்டுக் கொண்டே ஓசூர் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். உடனே கர்நாடக காவல்துறையினர் தடியடி நடத்தி அவர்களை கலைத்தனர்.

மேலும் இந்த மறியலில் ஈடுபட்டதாக கர்நாடக வாழ் தமிழ் இயக்கத்தின் தலைவர் ராஜன் உள்ளிட்ட 9 பேரை கர்நாடக அத்திப்பள்ளி காவல்நிலையத்தினர் கைது செய்தனர்.


[படம்: புதினம்]


[படம்: புதினம்]


[படம்: புதினம்]

Comments