வன்னியில் சிறுவர் பராமரிப்பு நிலையம் மீது படையினர் தாக்குதல்: 40 பொதுமக்கள் படுகொலை; 100 சிறுவர்கள் உட்பட 258 பேர் காயம்

வன்னியில் பாதுகாப்பு வலயப் பகுதியில் பொக்கணை பிரதேசத்தில் உள்ள சிறுவர் பராமரிப்பு நிலையம், பால்மா விநியோக நிலையம் ஆகியவற்றின் மீது இன்று சிறிலங்கா படையினர் நடத்திய தாக்குதல்களில் 40 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 100 சிறுவர்கள் உட்பட 258 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இன்று சிறிலங்கா படையினர் நடத்திய கண்மூடித்தனமான ஆட்லறி, கனரக துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்களிலேயே குறித்த இழப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிந்திய தகவல்களின்படி கொல்லப்பட்ட பொதுமக்களின் 25 சடலங்கள் மாத்தளன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் அவற்றில் 13 சடலங்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன்.

இதேவேளை இன்று புதன்கிழமை உட்பட கடந்த மூன்று நாட்களில் வன்னிப் பாதுகாப்பு வலயப் பகுதிகளில் சிறிலங்கா படையினரால் 100 க்கு அதிகமான பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 422 க்கு அதிகமான பொதுமக்கள் காயமடைந்துமள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றில் கடந்த திங்கட்கிழமை 43 பேர் கொல்லப்பட்டும் 102 பேர் காயமடைந்துள்ளதாகவும் நேற்று செவ்வாய்க்கிழமை 21 பேர் கொல்லப்பட்டும், 62 பேர் காயமடைந்துள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவர்கள் தெரிவித்துள்ளன.

அத்துடன் உயிரிழந்த பொதுமக்களின் பெயர் விபரங்கள் கிடைக்கப்பெறவில்லை.

எனினும் இந்தத் தரவுகளின் அடிப்படையில் வைத்து ஆராய்ந்து பார்க்குமிடத்து இன்றைய சிறிலங்கா படையினரின் தாக்குதல்களில் உயிரிழந்த, படுகாயமடைந்தவர்களின் எண்ணிக்கை இங்கு குறிப்பிட்ட தொகையை விட அதிகமாக இருக்கலாம் என எண்ணத்தோன்றுகிறது.

Comments