தாக்குதல்களை எந்த சூழ்நிலையிலும் நிறுத்தப்போவதில்லை: கோத்தபாய திட்டவட்டமாக அறிவிப்பு

வன்னிப் பகுதியில் சிறிலங்கா படையினர் மேற்கொண்டு வரும் தாக்குதல் நடவடிக்கைகளை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நிறுத்தப்போவதில்லை என சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச திட்டவட்டமாக அறிவித்திருக்கின்றார்.

"போர் நடவடிக்கைகளை இடைநிறுத்த வேண்டும் என எந்ளவுக்குத்தான் உள்நாட்டு மற்றும் அனைத்துலக அழுத்தங்கள் வந்தாலும் கூட, பயங்கரவாதம் முழுமையாக அழித்தொழிக்கப்படும் வரையில் தாக்குதல் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை," எனவும் அவர் தெரிவித்திருக்கின்றார்.

இரண்டு நாட்களுக்கு தாக்குதல் நடவடிக்கைகளை மட்டுப்படுத்துமாறு அரச தலைவர் மகிந்த ராஜபக்ச படையினருக்கு அறிவித்திருப்பதாக வெளியான செய்திகள் தொடர்பாகக் கேட்ட போதே கோத்தபாய ராஜபக்ச இவ்வாறு கூறியிருக்கின்றார்.

கோத்தபாயவின் இந்தக் கருத்துக்கள் பிரபல சிங்கள தொலைக்காட்சிச் சேவையான 'தெரண'வின் செய்திச் சேவையில் இன்று திங்கட்கிழமை ஒளிபரப்பப்பட்டது.

இன்றும், நாளையும் இரண்டு நாட்களுக்கு தாக்குதல்கள் இடைநிறுத்தப்படும் என அரசாங்கம் அறிவித்திருந்த போதிலும் நேற்று நள்ளிரவு முதல் கடுமையான தாக்குதல்கள் வன்னியில் மக்கள் வசிக்கும் பாதுகாப்பு வலயப் பகுதிகளை நோக்கி நடத்தப்பட்டிருக்கின்றது கவனிக்கத்தக்கது.

இதேவேளையில் தாக்குதல்களை இடைநிறுத்துவது என்ற அரசாங்கத்தின் தீர்மானத்தை இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவும் ஏற்றுக்கொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இருந்தபோதிலும் அனைத்துலக ரீதியாக உருவாகியிருக்கும் அழுத்தங்களைச் சமாளிப்பதற்காகவும், அனைத்துலக ரீதியான பிரச்சாரங்களுக்காகவுமே இவ்வாறான தாக்குதல் நிறுத்த அறிவித்தலை சிறிலங்கா அரசாங்கம் வெளியிட்டிருந்தது என்பது தற்போது புலனாகின்றது என அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Comments