ஜோன் ஹோம்ஸின் கூற்றுக்கு தமிழ் புத்திஜீவிகள் கண்டனம்


முழுமையாக ஊடக சுநத்திரத்தையும் ஜனநாயக செயல்பாடுகளையும் தடை செய்துள்ள ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் பரப்புரைகளை மட்டும் கருத்தில் கொண்டு ஐக்கிய நாடுகள் சபை போன்ற அமைப்புகள் செயல்படுவதை கண்டிக்க வேண்டும் என தமிழ் புத்தி ஜீவிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்

தமிழீழ விடுதலைப்புலிகள் மீது அனைத்துலக அழுத்தங்களை ஏற்படுத்தும் நோக்கில் அவர்கள் மக்களை மனித கேடயங்களாக பயன்படுத்தி வருவதாக ஸ்ரீலங்கா அரசாங்கம் தெரவித்து வரும் குற்றச்சாட்டுகளை ஐக்கிய நாடுகள் சபை உள்வாங்கி அதன் அடிப்படையில் கருத்து வெளியிடுவதை தடை செய்யும் வகையில் புலம் பெயர் தமிழர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்

வன்னியில் அப்பாவி மக்கள் மீது மிலேச்சத்தனமாக தாக்குதல் நடத்தி தினமும் நூற்றுக் கணக்கான பொதுமக்கள் கொன்று குவிக்கும் ஸ்ரீலங்கா அரசாங்கத்தை கண்டிப்பதற்கு கூட ஐக்கிய நாடுகள் சபையால் முடியாதுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

நேரடி யுத்த முனைகளில் கூட தடை செய்யப்பட்ட கனரக ஆயுதங்கள் மற்றும் இரசாயன குண்டுகளை அப்பாவிகள் மீது வீசும் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் செயல்பாடுகளை கட்டுப்படுத்த முடியாத அல்லது அது குறித்து கண்டனம் கூட வெளியிட முடியாத ஜோன் ஹோம்ஸ் போன்றவர்கள் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் பேச்சாளர்கள் போல் செயல்பட்டு விடுதலைப் புலிகளை ஆயுதங்களை களையுமாறு கோருவது விசனமளிப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

ஐக்கிய நாடுகள் சபையானது தனது கையாலகாத்தனத்தை மூடி மறைப்பதற்காக விடுதலைப் புலிகள் மீது குற்றச்hட்டுகளை முன்வைத்து தம்மை தற்காத்துக் கொள்ள முயல்கின்றது இதனை அனைத்துலகத்திற்கும் அதன் மக்களுக்கும் புரிய வைக்க வேண்டியது அவசியமாகின்றது.

மக்களுக்கு மனிதநேய பணிகளை வழங்குவதற்கு ஏற்படுத்தப்பட்ட ஐக்கிய நாடுகளின் அனைத்து அமைப்புகளையும் வன்னியில் இருந்து வெளியேற்றியுள்ள அரசாங்கம் தனது யுத்த நிகழச்சி நிரலுக்கு அமைவாக செயல்படுத்தி வரும் அரச சார்பு பரப்புரை வலையமைப்பின் தகவல்களின் அடிப்படையில் ஐநாவின் செயலாளர் பான் கீ மூன் மற்றும் ஜோன் ஹோம்ஸ் போன்றவர்கள் வெளிப்படுத்தும் கருத்துக்களுக்கு எதிராக புலம் பெயர் தமிழர்கள் தமது கடுமையான கண்டனங்களையும் எதிர்ப்பினையும் உடனடியாக பதிவு செய்ய வேண்டும் என்றும் இதனை தொடர அனமதிப்பது அனைத்துலக ரீதியில் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை மலினப்படுத்தி விடும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்

குறிப்பாக ஒரு பக்ச் சார்பான கருத்துக்களையும் ஸ்ரீலங்கா அரசு நிலைப்பட்ட வாதங்களையும் முன்வைக்கும் பி.பி.சி போன்ற ஊடக வலையமைப்புகளுக்கு வன்னியின் உண்மை நிலையினை தெளிவு படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக ஐநாவின் முக்கிய அதிகாரிகளுக்கு தொடர்ச்சியான மின்னஞ்சல்கள் மற்றும் நேரடி தபால்களை அனுப்பி அவர்களின் ஸ்ரீலங்கா அரச சார்ப்பு போக்கினையும் கருத்து நிலைப்பாட்டையும் மாற்ற வேண்டியது புலம் பெயர் தமிழர்களின் முக்கிய பணி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments