இன்றைய எறிகணைத் தாக்குதலில் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கப் பணியாளரும் பலி

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள 'மக்கள் பாதுகாப்பு வலய' பகுதியில் இன்று சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் பணியாளர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக செஞ்சிலுவைச் சங்கம் அறிக்கை ஒன்றினை இன்று புதன்கிழமை மாலை வெளியிட்டுள்ளது.

கடற்கரையோரமாகவுள்ள அம்பலவன்பொக்கனை என்ற இடத்தில் தனது குடும்பத்தினருக்காக குடிநீர் எடுத்துவரச் சென்றிருந்த போதே சிறிலங்கா படையினர் ஏவிய எறிகணைக்கு அவர் இலக்கானதாகவும், சம்பவ இடத்திலேயே அவர் கொல்லப்பட்டதாகவும் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.

அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் உள்ளூர் பணியாளரான சின்னத்துரை குகதாசன் என்பவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். திருமணமான இவருக்கு மூன்று பிள்ளைகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வன்னியில் அண்மைக்காலத்தில் கொல்லப்பட்டுள்ள அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் இரண்டாவது பணியாளர் இவர் என்பது கவனிக்கத்தக்கது.

Comments