உறுதிமொழியை மீறி சிறிலங்கா இராணுவம் தாக்குதல்: விடுதலைப்புலிகள்

தமிழர்களுக்கு எதிராக கனரக ஆயுதங்கள், விமான தாக்குதல் போன்றவை நடத்தப்பட மாட்டாது என்று சிறிலங்கா அரசும், இராணுவமும் வாக்குறுதி அளித்த சில மணி நேரங்களிலேயே அது மீறப்பட்டு, 2 போர் விமானங்கள் குண்டு வீசித் தாக்கியதாக விடுதலைப் புலிகள் கூறியுள்ளனர்.

முள்ளிவாய்க்கால் பகுதியில், 2 போர் விமானங்கள் சரமாரியாக குண்டுகளை வீசித் தாக்கியுள்ளதாக விடுதலைப் புலிகள் அமைப்பின் அமைதிச் செயலக இயக்குநர் புலிதேவன் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், இன்று பிற்பகல் 12.50 மணியளவில் (போர் நிறுத்தம் மேற்கொள்ளப்படுவதாக இலங்கை அரசு தெரிவித்திருப்பதாக கூறி கருணாநிதி உண்ணாவிரதத்தை முடித்த நேரம் 12.30 மணி) முள்ளிவாய்க்கால் பகுதியில் மக்கள் உள்ள இடங்களைக் குறி வைத்து இரண்டு போர் விமானங்கள் குண்டு வீசித் தாக்கின.

அதேபோல, 1.10 மணிக்கு இன்னொரு முறை விமானத் தாக்குதல் நடத்தப்பட்டது.

கனரக ஆயுதங்கள், விமான தாக்குதல்களை நடத்த மாட்டோம் என அறிவித்த இலங்கை அரசு அதை மீறும் வகையிலும், உலக சமுதாயத்தையும், குறிப்பாக தமிழக மக்களையும் ஏமாற்றும் வகையில் விமானத் தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

மேலும், பாதுகாப்பு வளையப் பகுதியில், சிறிலங்கா இராணுவம் தொடர்ந்து எறிகணைகளை வீசித் தாக்கி வருகின்றன. வலைஞர்மடப் பகுதியிலும் தாக்குதல் தொடருகிறது என்று கூறியுள்ளார்.

Comments