'மக்கள் பாதுகாப்பு வலயம்' மீது பாரிய தாக்குதலுக்கு சிறிலங்கா படைகள் தயார்: போர் ஊர்திகளும் பீரங்கிகளும் முன்னரங்கிற்கு நகர்த்தப்படுகின்றன

இரண்டு நாள் போர் நிறுத்தத்தை அறிவித்த சிறிலங்கா அரசாங்கம், அதனை நடைமுறைப்படுத்துவதற்குப் பதிலாக தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியிருக்கும் அதேவேளையில், மக்கள் பாதுகாப்பு வலயத்தின் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஒன்றை மேற்கொள்வதற்கான தயாரிப்புப் பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபட்டு வருவதாக வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மக்கள் பாதுகாப்பு வலயத்துக்குள் பாரிய வலிந்த தாக்குதல் நடவடிக்கை ஒன்றை தொடங்குவதற்கான ஒரு முன்னோடியாகத்தான் அந்தப் பகுதியில் உள்ள பொதுமக்களின் வதிவிடங்களை நோக்கி பெருமளவு எறிகணைத் தாக்குதல்கள் படையினரால் நேற்று முன்நாள் இரவு முதல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இவ்வாறு எறிகணைத் தாக்குதல்கள் நடத்தப்படும் அதேவேளையில், பெருந்தொகையான பேருந்துகள், இராணுவ கவச வாகனங்கள், கனரக வாகனங்கள் மற்றும் இராணுவத் தாங்கிகள் போன்றன 'மக்கள் பாதுகாப்பு வலயம்' அமைந்திருக்கும் பகுதிகளை நோக்கி நேற்று நகர்த்தப்பட்டிருப்பதாக புதினத்தின் வன்னிச் செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

பாதுகாப்பு வலயப் பகுதிகளை நோக்கி பெருமெடுப்பிலான தாக்குதல் நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டு அதற்குள் பிரவேசிப்பதற்கு வசதியாகவே இவ்வாறு இராணுவ வாகனங்கள் பெருமளவுக்கு நகர்த்தப்பட்டுள்ளன. இதனைவிட பெருந்தொகையான படையினரும் இந்தப் பகுதிகளை நோக்கி அனுப்பப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னணிக் காவலரண்கள் மீதான பாரிய தாக்குதல் நடவடிக்கை ஒன்றை மேற்கொள்வதற்கு தேவையான தயாரிப்புக்களுக்காகவே

இரண்டு நாட்களுக்கு தாக்குதலை மட்டுப்படுத்துவது என்ற அறிவித்தலை சிறிலங்கா அரசாங்கம் வெளியிட்டதா என்ற கேள்வியை இராணுவ ஆய்வாளர்கள் எழுப்பியிருக்கின்றனர்.

Comments