புலம்பெயர் நாடுகளில் தீவிரமடையும் போராட்டங்கள்: நெருக்கடியில் சிறிலங்கா அரசு

புலம்பெயர் நாடுகளில் தமிழ் மக்கள் தற்போது தீவிரமாக மேற்கொண்டு வரும் போராட்டங்களினால் சிறிலங்கா அரசாங்கத்துக்கு பல வழிகளிலும் நெருக்கடிகள் தோன்றியிருப்பதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருக்கின்றது.

இது தொடர்பாக அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

பிரித்தானியாவில் உள்ள தேம்ஸ் பௌத்த நிலையத்தில் ஒழுங்கு செய்யப்பட்ட சிங்கள சித்திரை புதுவருட கொண்டாட்ட நிகழ்வுகளுக்கு பிரித்தானிய காவல்துறையினர் பாதுகாப்புக்களை வழங்க மறுத்ததனால் கைவிடப்பட்டுள்ளன.

இக்கொண்டாட்டங்களில் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ரஜபக்சவின் சகோதரரும் துறைமுகங்கள் மற்றும் வானூர்தித்துறை அமைச்சருமான சமல் ராஜபக்ச கலந்து கொள்ளவிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே கனடாவில் நடைபெறும் தமிழ் மக்களின் பேரணிகளை தடுத்து நிறுத்துமாறும் தமிழர்களின் தேசியக் கொடியினை அகற்றுமாறும் கனடாவில் உள்ள சிறிலங்கா தூதரகம் விடுத்திருந்த கோரிக்கையை கனடிய வெளிவிவகார அமைச்சர் லோறன்ஸ் கனன் நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

போராட்டங்களை தடுக்கும் உரிமை எனக்கு இல்லை. கனடாவில் மக்கள் ஆர்ப்பாட்டம் செய்ய முடியும்; நாம் ஜனநாயக நாட்டில் வாழ்கின்றோம்; மக்கள் தமது கருத்துக்களையும் உணர்வுகளையும் வெளியிட இங்கு எவருக்கும் உரிமை உண்டு என்று கனன் தெரிவித்திருந்ததாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments