வன்னிப் படுகொலைகளை தடுத்து நிறுத்துமாறு சர்வதேச சமூகத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு அவசர வேண்டுகோள்

வன்னியில் அரங்கேறிக் கொண்டிருக்கும் மனிதப்படுகொலைகளை தடுத்து நிறுத்துமாறு சர்வதேச சமூகத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு அவசர வேண்டுகோள் விடுக்கின்றது. இன்றைய தினம் ஸ்ரீலங்கா இராணுத்தினர் மேற்கொண்ட தாக்குதல்கள் காரணமாக ஒரே நாளில் மட்டும் 1400 வரையான பொது மக்கள் கொல்லப்பட்டும் 1500 ற்கும் அதிகமான பொது மக்கள் படுகாயம் அடைந்தும் உள்ளதுடன் 15000 திற்கும் அதிகமான பொது மக்கள் சிறைப்பிடிக்கப்பட்டும் உள்ளனர்.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள வன்னிப் பகுதியில் அரசாங்கத்தினால் ஒரு தலைப்பட்சமாக அறிவிக்கப்பட்டுள்ள மக்கள் பாதுகாப்பு வலயங்களுக்குள் தங்கியுள்ள சுமார் 300,000 மக்களுக்குத் தேவையான உணவு மருந்துப் பொருட்களை எடுத்துச் செல்வதற்கு கடந்த நான்கு மாதங்களாக இலங்கை அரசாங்கம் தடை விதித்துள்ள நிலையில் மக்கள் பட்டினிச் சாவை எதிர்நோக்கி வருகின்றனர்.

உணவு மருந்து தடைசெய்யப்பட்டுள்ள நிலையிலும் கூட இங்கு வாழும் மக்கள் அங்கிருந்து வெளியேறாத நிலையில் அந்த மக்களின் விருப்பத்திற்கு மாறாக அவர்களை பலவந்தமாக வெளியேற்றும் நோக்கில் அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வலயப் பகுதிக்குள் வாழும் பொது மக்களை இலக்குவைத்து இராணுவம் எறிகணைத் தாக்குதல்கள், துப்பாக்கிச் பிரயோககங்கள், விமானத் தாக்குதல்கள், கொத்துக் குண்டுத் தாக்குதல்கள், இரசாயன ஆயுத தாக்குதல்கள் என்பவற்றினை நடாத்திவருகின்றது. இவ்வாறான தாக்குதல்கள் காரணமாக தினமும் 100 வரையான பொதுமக்கள் கொலை செய்யப்பட்டும் 200 பேர் வரையில் காயமடைந்த வண்ணமும் உள்ளனர்.

இவ்வாறான நிலையில் பொது மக்கள் தங்கியிருந்த பாதுகாப்பு வலயப்பகுதிகள் மீது ஆட்டிலறித் தாக்குதல்களையும் மோட்டார் தாக்குதல்களையும் டாங்கிகளின் மூலமான தாக்குதல்களையும் நடாத்தியபடி இன்றய தினம் அதிகாலை முதல் ஸ்ரீலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட பாரியளவிலான இராணுவ நடவடிக்கையின் போது இன்றய தினம் மட்டும் 1400 வரையான பொது மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் சுமார் 1500ற்கும் அதிகமான பொது மக்கள் படுகாயமடைந்துள்ளனர். முள்ளிவாய்க்கால் மற்றும் பொக்கணைப்பகுதிகளை கைப்பற்றிய படையினர் அங்கு பெருமளவான பொதுமக்களை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளதாகவும் சம்பவத்தினை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்தவர்களை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்ல முடியாதளவுக்கு பொது மக்களை இலக்குவைத்து இராணுவத்தினர் எறிகணைத் தாக்குதல்களையும் கனரக ஆயுதங்கள் மூலமான தாக்குதல்களையும் நடாத்திக் கொண்டிருப்பதனால் காயமடைந்தவர்களை அப்படியே விட்டுவிட்டு மக்கள் சிதறி ஓடிவருகின்றனர்.

ஐநா சபையின் மனிதாபிமானச் சட்டங்களையும் போரியல் விதிகளையும் மீறி பொது மக்கள் மீது இராணுவத்தினர் மேற்கொண்ட இந்த பாரிய இராணுவ நடவடிக்கை மூலம் சுமார் 15000 திற்கும் அதிகமான பொது மக்களை இராணுவம் சிறைப்பிடித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. தமிழ் மக்களை இனப்படுகொலை செய்து இலங்கையில் இருந்து தமிழ் மக்களை முற்றாக துடைத்தழிக்கும் நோக்கில் இலங்கை அரசாங்கப்படைகள் மேற்கொண்டுவரும் மனிதாபிமானமற்ற இனப் படுகொலையினை தமிழ் தேசியக் கூட்டமைப்பு மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றது.

குடந்த நான்கு மாதகாலப் பகுதியில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் சென்றுள்ள சுமார் 60000 வரையான தமிழ் மக்கள் தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டு கிரமமான பாலியல் வல்லுறவுகளுக்கும் சித்திரவதைகளுக்கும் படுகொலைகளுக்கும் உள்ளாக்கப்பட்டு வரும் நிலையில் இன்றய தினம் இராணுவத்தினரால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள பொது மக்களின் நிலை தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு மிகவும் அச்சம் அடைகின்றது.

இந் நிலையில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் இருந்து வெளியேறாது இன்னமும் தங்கியுள்ள சுமார் 250,000 திற்கும் அதிகமான பொது மக்கள் மீது இலங்கை இராணுவம் கனரக ஆயுதங்களையும் இரசாயன ஆயுதங்களையும் பயன்படுத்தி தாக்குதல் நடாத்தி அவர்களை படுகொலை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. இவ்விடயத்தில் சர்வதேச சமூகம் தொடர்ந்தும் மெத்தனப் போக்கை கடைப்பிடிக்காது உடனடியாகதலையிட்டு மனிதப் படுகொலைகளையும், மனிதப் பேரவலத்தினையும் தடுத்து நிறுத்தவும் மிகவும் அவசரமான மருத்துவ உதவிகளையும் உணவுப் பொருட்களையும் அனுப்பி வைக்கவும் அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் போர் நிறுத்தம் ஒன்றினை ஏற்படுத்தவும் உடன் நடவடிக்கை எடுக்கும் படியும் மிகவும் அவசரமாக வேண்டுகின்றோம்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு
பாராளுமன்றக் குழு
20-04-2009

Comments