பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலை: போராட தயாராகுமாறு பழ.நெடுமாறன் அழைப்பு

ஈழத் தமிழர் படுகொலையை கண்டித்து போராட தயாராகுமாறு இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் தமிழக மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பாக இன்று வெள்ளிக்கிழமை பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இந்தியாவில் தேர்தலுக்குப் பின் அரசு மாற்றம் ஏற்படுவதற்கு முன்பாகவும் அமெரிக்க அரச தலைவர் ஒபாமாவின் எச்சரிக்கையைத் தொடர்ந்து நடவடிக்கை எடுப்பதற்கு முன்னரும் தமிழர்களை முற்றாக அழித்துவிட முடிவு செய்து கொத்துக் குண்டுகளையும் இரசாயனக் குண்டுகளையும் வீசி பல்லாயிரக்கணக்கான மக்களை சிங்கள இராணுவம் படுகொலை செய்துள்ளது.

அதைவிட பல மடங்கு அதிகமானோர் படுகாயத்துடன் மருத்துவ உதவியில்லாமல் கொஞ்சம் கொஞ்சமாகச் செத்துக் கொண்டிருக்கிறார்கள். இச்செய்திகள் நமது நெஞ்சங்களைப் பிழிகின்றன.

இந்த கொடுமையைத் தடுத்து நிறுத்த முன்வராமல் இந்திய அரசு வேடிக்கை பார்க்கிறது. எனவே தமிழக மக்ள் ஒன்று திரண்டு கொந்தளித்துப் போராடத் தயாராகுமாறு வேண்டிக்கொள்கிறேன். மற்ற தலைவர்களையும் அமைப்புகளையும் கலந்து ஆலோசித்து நாளைப் போராட்டத் திட்டத்தை அறிவிக்கிறேன் என்றார் அவர்.

Comments