பாதுகாப்பு வலயத்தில் சிக்கியுள்ள மக்களுக்குதவ அமெரிக்க கடற்படை தயார் நிலையில்

இலங்கையில் பாதுகாப்பு வலயத்தில் சிக்கியுள்ள மக்களை அங்கிருந்து வெளியேற்றுவது மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கு அமெரிக்க கடற்படையினர் தயார் நிலையில் உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இரண்டு மூன்று மாதங்களுக்கு தமது மதிப்பீட்டு குழு இலங்கைக்கு விஜயம் செய்து நிலைமைகளை ஆராய்ந்ததுடன் அது தொடர்பான அறிக்கையை அமெரிக்க அரசாங்கத்திடம் வழங்கியிருப்பதாக அமெ. பசுபிக் பிராந்திய கட்டளைத் தளபதி அட்மிரல் திமேத்தி ஜே கீட்டிங் தெரிவித்துள்ளார்.

இந்த இரண்டு தெரிவுகள் குறித்து இலங்கையில் உள்ள தமது தூதுவர் ஊடாக ராஜாங்க திணைக்களத்திற்கு அறிக்கையினை வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த இரண்டில் ஏதேனும் ஒன்றை மேற்கொள்ளும் நிலைப்பாட்டில் அமெரிக்க கடற்படையினர் உள்ளனர்.

இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் சுரேஸ் மேத்தாவின் அழைப்பை ஏற்று இந்தியா சென்றுள்ள கீட்டிங், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன், வெளிவிவகார செயலாளர் சிவ்சங்கர் மேனன் ஆகியோரை சந்தித்துள்ளார்.

இதன்போது அமெரிக்கக் கடற்படையினருக்கும் இந்திய கடற்படையினருக்கும் இடையில் உள்ள நீண்டகால உறவுகள் மற்றும் உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. சீனா இந்து சமுத்திரத்தில் தனது துறைமுகங்களை அபிவிருத்தி செய்துள்ளதுடன் தனது கப்பல்களுக்கான வசதிகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளதாக அமெரிக்க அட்மிரல் குறிப்பிட்டுள்ளார்.

Comments