பிரித்தானிய தமிழ் மாணவிகள் தயாரிப்பில் இனப்படுகொலையை வெளிப்படுத்தும் காணொலித் தொகுப்பு

தமிழர் தாயகத்தில் எம் உறவுகள் இனப்படுகொலைக்கு உள்ளாவதை பிரித்தானியாவில் உள்ள இளையோருக்கு வெளிப்படுத்தும் முகமாக 20 நிமிடங்களைக் கொண்ட காணொலித் தொகுப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

லண்டன் டாட்போர்ட் பெண்கள் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவிகளே இந்த காணொலித் தொகுப்பினை தயாரித்திருக்கின்றனர்.

கல்லூரி நிர்வாகத்தின் அனுமதியுடனேயே இந்த தொகுப்பு அவர்களால் தயாரிக்கப்பட்டுள்ளது.



இதில் தமிழீழ வரலாறும் சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டு வரும் இனப் படுகொலைகளும் உணர்வுபூர்வமாக விபரிக்கப்பட்டுள்ளமை பிரித்தானியா மற்றும் வெளிநாட்டு மாணவர்களின் மத்தியில் ஈழப் பிரச்சினை தொடர்பில் பெரும் ஆர்வத்தினை ஏற்படுத்தியுள்ளது.

இதனைவிட துண்டுப்பிரசுரங்கள் மூலமாகவும் பிரித்தானியாவில் உள்ள பல்லின மாணவர்கள் மத்தியில் ஈழத் தமிழர்களின் பிரச்சினை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளையும் இந்த மாணவிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழீழ வரலாறு, சிறிலங்கா அரசாங்கத்தின் இனப்படுகொலை, ஒடுக்குமுறைகளால் தமிழ் மக்கள் அனுபவிக்கும் அவலங்கள் மற்றும் புலம்பெயர்ந்த தமிழர்கள் பிரித்தானியாவில் முன்னெடுக்கும் போராட்டங்கள் என்பன தொடர்பாக இந்தப் பிரசுரங்களில் விளக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் கல்வி கற்கும் வெளிநாட்டு மாணவர்கள் பலரும் இந்தப் பிரசுரங்களை ஆர்வத்துடன் பெற்றுப் படிப்பதுடன் மற்றவர்களுக்குக் கொடுப்பதற்காகக் கொண்டுசெல்வதையும் காணக்கூடியதாக இருக்கின்றது.

தமிழர்கள் இனப் படுகொலைக்கு உள்ளாவது தொடர்பாக முதல் தடவையாக அறிந்துகொண்ட மாணவர்கள் பலர் அதனையிட்டு அதிர்சியடைந்ததுடன் பிரித்தானியாவில் நடைபெறும் போராட்டங்களில் எதிர்காலத்தில் தாமும் கலந்துகொள்ளப் போவதாகத் தெரிவித்திருக்கின்றனர்.




Comments