நாடு கடந்த அரசே போராட்டத்தை முன்னெடுக்கும்

நாடு கடந்த தமிழீழ அரசு பற்றி சென்ற முறை எழுதியிருந்தேன்.

புறநிலை அரசுக்கும் நாடு கடந்த அரசுக்கும் உள்ள வேறுபாட்டை விளக்கும் நோக்கோடு அக் கட்டுரையை வரைந்திருந்தேன். பலர் நாடு கடந்த அரசு பற்றி பிழையான முறையில் விளங்கிக் கொண்டிருக்கின்றார்கள். சில ஊடகங்கள் “நாடு கடந்த அரசு” என்பதை “கடல் கடந்த அரசு” என்று சொல்கின்றன. இது மிகத் தவறானது.

ஆயினும் தற்பொழுது “நாடு கடந்த அரசு” பற்றிய ஓரளவு புரிதல் மக்களிடம் ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. நாடு கடந்த அரசை அமைப்பதற்கான முன்னேற்பாடுகளை செய்வதற்கு நியமிக்கப்பட்டுள்ள குழுவின் தலைவரான திரு உருத்திரகுமார் அவர்கள் “நாடு கடந்த அரசு” பற்றிய விளக்கத்தை பல இடங்களில் கொடுத்து வருகின்றார். “புற நிலை அரசு” மற்றும் “நாடு கடந்த அரசு” இரண்டுக்குமான வேறுபாடுகள் ஓரளவு மக்களுக்கு புரியத் தொடங்கியிருக்கிறது.

இந்த நிலையில் “நாடு கடந்த அரசு” பற்றி மேலும் சில விடயங்களை சொல்வது நல்லது என்று நினைக்கின்றேன். ஓரேடியாக போட்டு உடைப்பது போன்று சொல்வது என்றால் நாடு கடந்த அரசுக்கும் இலங்கைத்தீவில் உள்ள தமிழர் தாயகத்திற்கும் நேரடியான சட்டரீதியான சம்பந்தம் கிடையாது. தமிழீழத் தாயகம் வேறு. நாடு கடந்த அரசு வேறு. தமிழீழத் தாயகம் தமிழீழத்தில் வாழும் மக்களுடையது. நாடு கடந்த அரசோ புலம்பெயர்ந்து வாழும் மக்களுடையது.

தமிழீழ மக்கள் தனியானதொரு அரசியல் பாதையையும் இலக்கையும் தேர்ந்தெடுக்கலாம். நாடு கடந்த அரசு வேறொரு பாதையையும் இலட்சியத்தையும் கொண்டிருக்கலாம். இதிலே எவ்வித பிரச்சனையும் ஏற்படப் போவது இல்லை. இதை மேலும் தெளிவாகச் சொல்வது என்றால், தமிழீழ மக்கள் ஐக்கிய இலங்கையை ஏற்றுக் கொண்டு தமிழீழத்தை கைவிட்டாலும் கூட, நாடு கடந்த தமிழீழ அரசு தொடர்ந்தும் இயங்கலாம். அதற்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை.

என்றைக்கு தமிழீழ மக்கள் இந்த நாடு கடந்த அரசுக்கான தேர்தலில் பங்கு கொண்டு தமது பிரதிநிதிகளை நாடு கடந்த அரசின் பாராளுமன்றத்திற்கு அனுப்பிகின்றார்களோ, அன்றைக்கே நாடு கடந்த அரசு தமிழீழ மக்களையும் சட்டரீதியாக பிரதிநிதித்துவம் செய்யும்.

நாடு கடந்த அரசு என்பது ஒரு தனியான அரசு. புலம்பெயர்ந்து வாழும் மக்களை, அவர்கள் வாழும் நாடுகளை கடந்து பிரதிநிதித்துவம் செய்யும் அரசு. இந்த அரசும் தமிழீழத் தாயகமும் வௌ;வேறானவை அதே வேளை புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களினால் நாடு கடந்த அரசு உருவாக்கப்படுவதினால், உலகம் எங்கும் வாழும் தமிழர்களின் உரிமைக்காக குரல் கொடுக்கும் தார்மீக கடமையையும் உரிமையையும் இந்த நாடு கடந்த அரசு கொண்டிருக்கும். இது ஒரு மிக முக்கியமான விடயம். உலகில் எங்காவது ஒரு நாட்டில் தமிழர்கள் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டால், அவர்களின் விடுதலைக்கான உதவிகளை நாடு கடந்த அரசு செய்யும்.

அந்த வகையில் இன்றைக்கு பெரும் இனவழிப்பை மேற்கொண்டிருக்கும் சிறிலங்காவை உலக அரங்கில் அம்பலப்படுத்தி தமிழீழ மக்களுக்கு நீதியை பெற்றுக் கொடுக்கும் கடமையை நாடு கடந்த அரசு கொண்டிருக்கின்றது. தமிழீழ மக்கள் எந்த வடிவில் போராட்டத்தை தொடர்ந்தாலும், அதற்கான அனைத்து வகையான உதவிகளை வழங்க வேண்டிய கடமையையும் நாடு கடந்த அரசு கொண்டிருக்கின்றது.

அரேபிய மொழியை பேசும் பாலஸ்தீன மக்களுக்கு மற்றைய அரபு நாடுகள் உதவி புரிந்ததைப் போன்று இதை விளங்கிக் கொள்ளலாம்.

“நாடு கடந்த அரசு” ஒரு தனியான அரசு என்பதால் அது ஒரு தனியான கொடியைக் கொண்டிருக்கும் என்பதையும் இங்கே சொல்ல வேண்டும். புலிக் கொடியாக திகழ்கின்ற தமிழீழத்தின் தேசியக் கொடி நாடு கடந்த அரசின் உத்தியோகபூர்வமான கொடியாக இருக்க முடியாது. வேண்டுமென்றால் புலிக் கொடியை ஒத்ததாக ஒரு கொடியை உருவாக்கலாமே தவிர, அதே புலிக் கொடியை நாடு கடந்த அரசின் கொடியாக வைத்துக் கொள்ள முடியாது.

இதை இங்கே குறிப்பிடுவதற்கு காரணம் இருக்கின்றது. தம்மை தீவிர தமிழ் தேசியவாதிகளாக இனம் காட்டிக் கொள்கின்ற சிலர் தனிப்பட்ட நலன் சார்ந்த காரணங்களால் நாடு கடந்த அரசினை உருவாக்க முனைபவர்கள் மீது பல்வேறு அவதூறுகளை பரப்புகின்ற சம்பவங்கள் நடந்து வருகின்றன. நாளை நாடு கடந்த அரசுக்காக புதிய கொடி ஒன்றை உருவாக்க முனைகின்ற பொழுது “ஐயோ புலிக் கொடியை மாற்றுகிறார்கள்” என்று அர்த்தமற்ற முறையில் யாரும் கூக்குரல் எழுப்பி விடக் கூடாது என்கின்ற எச்சரிக்கை உணர்விலேயே இதை இங்கே கூறி வைக்கிறேன்.

நாடு கடந்த அரசு பற்றிய ஆர்வம் பல மட்டங்களில் இருந்தாலும், நாடு கடந்த அரசினை உருவாக்குகின்ற செயற்பாடுகள் இன்னமும் சரியான வேகத்தை எட்டாமல் நிற்கின்றது. திடீரெனறு ஒரு தேக்கம் ஏற்பட்டுள்ளது போன்ற நிலைமை தென்படுகின்றது. சில ஊடகங்கள் நாடு கடந்த அரசு பற்றிய செய்திகளை புறக்கணிப்பது இப்படியான தோற்றப்பட்டிற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

அதே வேளை நாடு கடந்த அரசு பற்றிய அறிவிப்பை விடுத்தவர்களும், இதை உருவாக்குவதற்கு முழு மனதோடு பாடுபட வேண்டும். மறுதரப்பை முந்த வேண்டும் என்பதற்காக மட்டும் விடுக்கப்பட்ட ஒரு அறிவிப்பாக இந்த நாடு கடந்த அரசு பற்றிய செய்திகள் அமைந்து விடக் கூடாது.

நாடு கடந்த அரசு ஒரு பன்மைத்துவம் மிக்க ஜனநாயாக கட்டமைப்பை கொண்டிருக்கும் என்பதாக சொல்லப்பட்டது. அப்படியே இது அமைய வேண்டும். ஏற்கனவே செயற்பட்ட அமைப்புகளின் மறுவடிவமாக இது இருக்கக் கூடாது. புலம்பெயர் தமிழர்களின் போராட்டத்தை புதிய வடிவில் முன்னகர்த்தும் முயற்சி உண்மையாகவே புதிய வடிவினைக் கொண்டதாக அமைய வேண்டும். வெறும் பெயர் மாற்றமாக மட்டும் இருக்கக் கூடாது.

அதிகாரங்களை இழக்க விரும்பாதவர்கள் இதற்கு எதிராக நிற்கக் கூடும். அவர்களின் கைகள் ஓங்கி விடாமல் சம்பந்தப்பட்டவர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும்.

இன்றைக்கு சில நாடுகளில் வட்டுக்கோட்டை தீர்மானத்திற்கு அங்கீகாரம் கேட்டு வாக்கெடுப்புகள் நடைபெறுகின்றன. இதனுடைய தார்ப்பரியம் புரியவில்லை. புலம்பெயர்ந்து வாழும் நாம் வட்டுக்கோட்டை தீர்மானத்தை வழிமொழிவதன் மூலம் எதை சாதிக்கப் போகின்றோம் என்று தெரியவில்லை. வட்டுக்கோட்டை தீர்மானம் பற்றி புலம்பெயர் நாடுகளில் இதுவரை நடைபெற்ற வாக்கெடுப்புகள் அரசியல் அரங்கில் சிறு சலசலப்பைக் கூட உருவாக்கவில்லை.

நாடு கடந்த அரசுக்காக நடைபெறவிருக்கும் தேர்தல்களின் முன்னோட்டமாக இந்த வாக்கெடுப்புகள் சிலரால் பார்க்கப்படுகின்றன. ஆனால் “ஆம் அல்லது இல்லை” என்னும்படியான ஒரு வாக்களிப்பு முறை வெள்ளோட்டம் விடப்படுகிறதா என்கின்ற அச்சம் எனக்குள் எழுகின்றது. நாளை நாடு கடந்த அரசில் ஜனநாயகம் புறக்கணிக்கப்பட்டு தற்போழுது செயற்படுபவர்களை மக்களின் பிரதிநிதிகளாக அங்கீகரிக்க வேண்டி “ஆம் அல்லது இல்லை” என்கின்ற இரண்டு தேர்வுகளை மட்டும் கொண்ட ஒரு தேர்தல் நடத்தப்பட்டு விடுமோ என்ற கேள்வியும் எழுகின்றது.

அப்படி இல்லாது உண்மையான ஜனநாயக முறையில் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகிறேன்.

இப்படி மக்களால் உருவாக்கப்படும் நாடு கடந்த அரசே புலம்பெயர் தமிழர்களை வழிநடத்த வேண்டும். நாடு கடந்த அரசினை விட வலிமையான ஒரு அமைப்பு புலம்பெயர் நாடுகளில் இருக்காது. நாடு கடந்த அரசுக்கு உத்தரவு போடுகின்ற அமைப்பு ஒன்றும் கிடையாது. நாடு கடந்த அரசு புலம்பெயர் தமிழர்களின் இறைமை உள்ள ஒரு கட்டமைப்பு. இதை மிஞ்சி எதுவும் இல்லை.

இன்றைக்கு முரண்பட்டுக் கொண்டிருக்கின்ற அனைவரும் நாடு கடந்த அரசின் தலைமையை ஏற்பதன் மூலம் எத்தனையோ பிரச்சனைகள் தீர்க்கப்படலாம்.

வி.சபேசன் (06.08.09)

Comments

Unknown said…
நண்பரே தங்கள் எழுத்துகள் அருமை தயவுசெய்து பாண்ட் கலர் மாற்றவும் வாசிப்பதற்கு மிகவும் சிரம்மாக இருகிறது
(word Verification எடுத்து விடவும்)
நன்றிகள் மாற்றியிருக்கின்றேன்