கே.பி. கைது தொடர்பில் கசியும் புதிய தகவல்கள்


விடுதலைப் புலிகளின் சர்வதேச செயற்பாட்டாளர் கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதன் தன்னிச்சையாக சரணடைந்தார் என இதற்கு முன்னர் சில புலனாய்வுத் தகவல்கள் வெளிவந்திருந்தன. எனினும், தற்போது மலேசிய பாதுகாப்பு அதிகாரிகளினால் கைதுசெய்யப்பட்டு, இலங்கை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக தேசிய புலனாய்வுத் துறை அதிகாரியொருவரின் மூலம் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை பாதுகாப்புத் தரப்பினர் மற்றும் புலனாய்வுத்துறையின் ஒருங்கிணைந்த குழுவினால் மேற்கொள்ளப்பட்ட தேடுதலொன்றில் ஓகஸ்ட் 06ம் திகதி கே.பி. என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன் கைதுசெய்யப்பட்டதாக ஊடகங்களில் வெளியிடப்பட்ட செய்திகள் முற்றிலும் பொய்யானது என தேசிய புலனாய்வுத்துறையின் சிரேஸ்ட அதிகாரியொருவர் Lanka News Web என்ற இணையத்தளத்திற்குத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தகவல் தருகையில், மலேசியா விசேடக் குழு (Malaysian Special Bureau – MSB) அதிகாரிகளே கே.பி.யைக் கைதுசெய்து பாங்கொக் விமான நிலையத்தில் இலங்கைப் பாதுகாப்புத் தரப்பினரிடம் ஒப்படைத்ததாக அவர் மேலும் கூறினார்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட கே.பி. தற்போது தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவர் மேஜர் ஜெனரல் கபில ஹேன்தா விதாரணவின் மேற்பார்வையில் விசாரிக்கப்பட்டு வருகிறார். மலேசிய விசேடக் குழுவினால் (MSB) கைதுசெய்யும் பாரிய திட்டத்திற்கு மலேசியாவின் இலங்கைக்கான பிரதி உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் உதய பெரேரா பெரும் பங்கெடுப்பை மேற்கொண்டுள்ளார்.

மலேசியாவில் விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் குறித்து ஆராய்ந்து, அந்நாட்டு பாதுகாப்புத் தரப்பினரை அறிவுறுத்துவதற்காக பாதுகாப்பு அமைச்சினால் மலேசியாவில் இலங்கைக்கான உயர்ஸ்தானிகரலாயத்திற்கு அனுப்பப்பட்ட மேஜர் ஜெனரல் உதய பெரேரா, தமக்கு வழங்கப்பட்ட பொறுப்பை முழுமையாக நிறைவேற்றியுள்ளார்.

உதய பெரேரா மலேசியாவில் பணியமர்த்தப்பட்ட நாள் முதல், விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளை கண்காணித்து அதுகுறித்து மலேசிய பாதுகாப்புத் தரப்பினர் மற்றும் புலனாய்வுப் பிரவினர் ஆகியோருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

கே.பி. போன்ற விடுதலைப் புலிகளின் தலைவர் ஒருவர் மலேசியாவில் வாழ்வது, அந்நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் என உதய பெரேரா தொடர்ந்தும் மலேசிய அரசாங்கத்திற்கு வலியுறுத்தி வந்துள்ளார். இந்த நிலையிலேயே கே.பி. குறித்து அதிகூடிய கவனம் செலுத்த மலேசிய விசேடக் குழு ஆரம்பித்துள்ளது.

அதன்பின்னர், கே.பியை இலங்கையிடம் ஒப்படைக்குமாறு அரச தலைவர் மட்டத்தில் மலேசிய தலைவர்களிடம் வேண்டுகோளொன்றை விடுக்குமாறு MSB அதிகாரிகள் பிரதி உயர்ஸ்தானிகரிடம் தெரிவித்துள்ளனர். இதனடிப்படையில், ஜூலை மாத இறுதியில், சிங்கப்புரில் நடைபெற்ற வெளிவிவகார அமைச்சர்களின் விசேட கூட்டத்தின் போது, கே.பி.யை கைதுசெய்து இலங்கையிடம் கையளிக்குமாறு வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம மலேசிய வெளிவிவகார அமைச்சரிடம் எழுத்துமூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இராஜதந்திர ரீதியாக இரு நாடுகளுக்குமிடையே இவ்வாறான இணக்கப்பாடு காணப்பட்ட சந்தர்ப்பத்தில் கே.பி. மலேசியா சென்றிருந்ததை இலங்கையின் புலனாய்வுத் துறையினர் உறுதிசெய்துள்ளனர். விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாணத் தளபதி ராம் மற்றும் நகுலன் ஆகியோருடன் கே.பி. தொலைபேசி அழைப்புக்களை மேற்கொண்டதன் மூலமே கே.பி மலேசியா சென்றமையை இலங்கைப் புலனாய்வுத் துறையினர் உறுதிசெய்துள்ளனர். இந்தச் சந்தர்ப்பத்தில் ராம் மற்றும் நகுலன் ஆகியோர் பாதுகாப்புத் தரப்பினரால் கைதுசெய்யப்பட்ட விடயம் வெளியிடப்படாததன் காரணமாக கே.பி.யும் இதுகுறித்து அறியாதிருந்துள்ளார். இதன் காரணமாகவே, கே.பி. இவர்களுடன் தொலைபேசியில் தொடர்புகளை மேற்கொள்ள முயற்சித்துள்ளார்.

இந்த தொலைபேசி அழைப்பை அடிப்படையாக வைத்து மேற்கொண்ட விசாரணைகளின் மூலம் கே.பி.யின் செய்மதி தொலைபேசி இலக்கத்தைத் பெற்றுக்கொண்ட பாதுகாப்புத் தரப்பினர், இதுகுறித்து ஆராயுமாறு அமெரிக்க மற்றும் மலேசிய தொலைத்தொடர்பு நிபுணர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

இதனிடையே, கே.பி. செனல் 4 தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வி, மலேசியாவிலிருந்தே வழங்கப்பட்டதை MSB அதிகாரிகள் உறுதிசெய்துள்ளனர்.

இந்தத் தகவல்களுக்கமைய கே.பி. தங்கியிருந்த, மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் உள்ள ‘ரியுன்’ விடுதியை முற்றுகையிட்ட MSB அதிகாரிகள், கே.பி.யின் சாரதி அப்புவை கைதுசெய்துள்ளனர். இந்தச் சந்தர்ப்பத்தில் கே.பி. வேறிருவருடன் கலந்துரையாடிக் கொண்டிருந்துள்ளார். இதற்கிடையே, MSBஅதிகாரிகள் அவசரமாக ஒருமுறை “வெளியே வாருங்கள்” என அப்பு வைப் பயன்படுத்தி கே.பி.யின் தொலைபேசிக்கு தகவலொன்றை வழங்கிப்பட்டதை அடுத்து விடுதியைவிட்டு வெளியே சென்ற கே.பி. கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்த முற்றுகையின் போது எந்தவொரு இலங்கை பாதுகாப்பு அதிகாரியும் பங்கேற்கவில்லை. கே.பி. கைதுசெய்யப்பட்டதை அடுத்து MSB அதிகாரிகள் இதுகுறித்து பிரதி உயர்ஸ்தானிகருக்கு தகவலளித்துள்ளனர். இதனையடுத்து இலங்கை மற்றும் மலேசிய பாதுகாப்பு அதிகாரிகள் விரிவாக கலந்துரையாடியதன் பின்னர், தாய்லாந்து பாங்கொக் விமான நிலையத்தில் இலங்கை பாதுகாப்பு அதிகாரிகளிடம் கே.பி.யை ஒப்படைப்பதென இணக்கம் காணப்பட்டது.

இதுதொடர்பாக தாய்லாந்து அரசாங்கத்திற்கு தகவலளித்துள்ள மலேசிய பாதுகாப்புத் தரப்பினர், இலங்கை அரசாங்கத்தினால் தேடப்படும் சந்தேக நபரொருவரை பாங்கொக் விமான நிலையத்தில் ஒப்படைப்பதாகக் கூறியுள்ளனர். குறித்த சந்தேக நபர் கே.பி. என தாய்லாந்து அரசாங்கத்திடம் இனங்காட்டிக் கொள்வதைத் தவிர்ப்பதற்கு இலங்கை மற்றும் மலேசிய பாதுகாப்புத் தரப்பினர் இணக்கம் கண்டுள்ளனர்.

இதனடிப்படையில், ஓகஸ்ட் 6ம் திகதி, இலங்கை விமானப்படையினரால் பயன்படுத்தப்படும் விமானமொன்றின் மூலம் பாங்கொக் விமான நிலையத்திற்குச் சென்ற இலங்கையின் இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் மற்றும் விமானப்படை அதிகாரிகள் சிலர் எவ்விதத் தடங்கல்களும் இன்றி கே.பி.யை இலங்கைக்கு கொண்டுவந்துள்ளனர்.

இவ்வாறு இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட கே.பி.யிடம் தேசிய புலனாய்வுப் பிரிவினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஊடகங்களினால் சித்தரிக்கப்பட்டதைப்போன்று கே.பி. ஒரு பெரிய தலைவர் அல்லவெனவும், அவர் அறிந்திருக்கும் தகவல்கள் வரையறையானவை எனவும் Lanka News Web என்ற இணையத்தளத்திற்கு தகவலளித்த அந்த அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.

Comments