எதிரியின் நண்பன் எனக்கும் நண்பன் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை இது

இதையே தலைவர் பின்பற்றி இந்தியாவின் எதிரிகளோடு -சீனா ,பாக்கிஸ்தான் என்று நட்பு வைத்திருந்திருதால் ஈழத்தை எப்போதோ பெற்றிருக்கலாம்

இனியாவது தமிழர்கள் பின்பற்றுவார்களா ??


இலங்கைக்கும் மேற்குலகத்திற்கும் இடையிலான இராஜதந்திர மோதல்கள் நேரடியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நிலையை எட்டியுள்ளன. கடந்த வாரம் இலங்கை தொடர்பாக அனைத்துலக மட்டத்தில் பல இராஜதந்திர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், பல முக்கிய அதிகாரிகளும் இலங்கைக்கு அவசர விஜயங்களை மேற்கொண்டிருந்தனர்.

இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு ஒன்றை முன்øவக்கும் என்ற நம்பிக்கையை தற்போது மேற்குலக சமூகம் மெல்ல மெல்ல இழந்து வருகிறது.

மேலும் அங்கு தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகள் அனைத்தும் மறுக்கப்பட்டுள்ளன என்பதை 280,000 மக்கள் முகாம்களில் தடுத்துவைக்கப் பட்டுள்ள சம்பவம் அனைத்துலக சமூகத்திற்கு இலகுவாக எடுத்துக்காட் டியுள்ளது. எனவே தமிழ் மக்களுக்கு தேவையான காத்திரமான ஓர் அரசியல் தீர்வின் முக்கியத்துவத்தை மேற்குலகம் உணர்ந்து கொண்டுள்ளது.

கடந்த வாரம் ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகாரங்களுக்கான தலைவர் லின் பெஸ்கோவின் விஜயமும் மனிதாபிமான நெருக்கடிகளுக்கு அப்பால் அரசியல் தீர்வின் முக்கியத்துவத்தையே அதிகம் வலியுறுத்தி உள்ளதாக கருதப்படுகின்றது.

பெஸ்கோவின் இலங்கை விஜயத்திற்கு பின்னர் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் விவகாரங்களுக்கான பிரதிநிதி வோல்டர் கெலின் கடந்த புதன்கிழமை (23) இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டார்.
கெலின் கடந்த ஏப்ரல் மாதமும், கடந்த வருடமும் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

சுவிற்சர்லாந்து பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான கெலின் மனித உரிமைகள் தொடர்பான கற்கைநெறியில் நிபுணத்துவம் பெற்றவர். ஐக்கிய நாடுகள் சபையின் இந்த நகர்வுகளுக்கு அப்பால் அமெரிக்காவும் தனது நடவடிக்கைகளை அதிகரித்துள்ளது. இலங்கையில் நடைபெற்ற போர் தொடர்பான விரிவான அறிக்கை அமெரிக்காவின் காங்கிரஸ் சபையில் கடந்த திங்கட்கிழமை போரியல் குற்றங்களுக்கான தூதுவர் ஸ்ரீபன் ராப்பினால் சமர்ப்பிக்கப்படவிருந்த போதும் அது சில தினங்கள் பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த அறிக்கை அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுக்கும் அனுப்பப்படவுள்ளது. நாம் மிகவும் முக்கியமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம் என்பதை இலங்கை அரசு உணர்ந்துகொள்ள வேண்டும் என ஸ்ரீபன் தெரிவித்துள்ளார். போர் குற்ற விசாரணைகளையே அவர்கள் முதன்மைப்படுத்த முற்பட்டு வருகின்றனர்.

ஸ்ரீபன் ராப் பின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டால் அது இலங்கை மீதான போர்க் குற்ற விசாரணைகளை நோக்கி அமெரிக்காவை தள்ளும் என்றே பலரும் கருதுகின்றனர்.இலங்கை மீது பொருளாதார தடைகளும் ஏற்படுத்தப்படலாம், ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையானது இலங்கைக்கு வழங்கப்படுவதைத் தடுப்பதற்கு பிரித்தானியா, ஜேர்மனி, பிரான்ஸ் உட்பட பல ஐரோப்பிய நாடுகள் முயன்று வருகின்றன.

இலங்கை விவகாரத்தில் தலையிடுமாறு கடந்த வார இறுதி நாட்களில் 17 அனைத்துலக மனிதாபிமான அமைப்புகள் ஐக்கிய நாடுகள் சபைக்கு கடிதமும் அனுப்பியிருந்தன. அதனைத் தொடர்ந்து நியூ யோர்க்கில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபை கூட்டத்திலும், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் இலங்கை தொடர்பான விவகாரங்கள் முக்கிய இடத்தை பிடித்திருந்தன.

இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம், மறுவாழ்வு மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை இலங்கைக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்கூட்டத்தில் பேசும் போது கடந்த புதன்கிழமை தெரிவித்திருந்தார்.

இடம்பெயர்ந்த மக்கள் அனைவரும் எதிர்வரும் ஜனவரி மாதத்திற்கு முன்னர் மீளக்குடியமர்த்தப் படுவார்கள் என இலங்கை அரசு தெரிவித்துள்ள உறுதி மொழியை பற்றிப்பிடிக் கவும் ஐ.நா. திட்டமிட் டுள்ளது.

இடம்பெயர்ந்த மக்கள் தொடர்பான உறுதிமொழிகளை இலங்கை அரசு தொடர்ச்சியாக மீறிவருவதாகவும், ஏமாற்றி வருவதாகவும் சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்திய பணிப்பாளர் பிராட் அடம்ஸ் தெரிவித்துள்ளார்.

ஐ.நா, உதவி வழங்கும் நாடுகள் மற்றும் இலங்øகயுடன் உறவுகளைப் பேணும் நாடுகள் என்பன உறுதியான நடவடிக்கை ஒன்றை வலியுறுத்த வேண்டும் எனவும், போலியான வாக்குறுதிகளை வழங்கி அவர்களை மீண்டும் இலங்கை அரசாங்கம் முட்டாள் ஆக்குவதைத் தவிர்க்க வேண்டும் எனவும் குறிப்பிட்டு அவர் கடந்த வாரம் காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

மேலும் மேற்குலகத்தின் இந்த நகர்வுகளின் தொடர்ச்சியாக இலங்கை அரச அதிகாரிகளுக் கான நுழைவு அனுமதிகளை ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தொடர்ச்சியாக நிராகரித்து வருவதும் ஆய்வாளர்கள் மத்தியில் பல வாதப்பிரதிவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பல படை அதிகாரிகளையும் அழைத்துக் கொண்டு ஐக்கிய நாடுகள் சபைக்கு செல்ல திட்டமிட்டிருந்த விஜயம் படை அதிகாரிக ளின் விஸா பல நிராகரிக்கப்பட்ட நிலையில் நிறுத்தப்பட்டதாக முன்னர் செய்திகள் வெளியாகியிருந்தன. அதனை தொடர்ந்து இலங்கையின் வெளிவிவகார செயலாளர் பாலித கொஹன்ன மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜுன ரணதுங்க ஆகியோரின் நுழைவு அனுமதிகளை பிரித்தானியா நிராகரித்திருந்தது.

இந்த நிலையில், படைத்துறையினருக் கான உலக துவிச்சக்கர வண்டியோட்டுதல் நிகழ்வில் கலந்துகொள்வதற்காக அயர்லாந்து செல்ல திட்டமிட்டிருந்த படையினரின் துவிச்சக்கர வண்டி ஓட்டும் வீரர்கள் 13 பேரின் விஸாவை இந்தியாவில் உள்ள அயர்லாந்து தூதரகம் கடந்த வாரம் நிராகரித்துள்ளமை கொழும்பில் சலசலப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது, உத்தியோகபூர்வமற்ற பயணத்தடை ஒன்றை மேற்குலக நாடுகள் குறிப்பாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் நடைமுறைப்படுத்தி வருகின்றதா என்ற கேள்வி எழுந்துள்ளது.பல நாடுகளில் நுழைவு அனுமதிகள் நிராகரிக்கப்படுவது வழமையான ஒரு விடயமாக இருக்கின்ற போதும், இலங்கையில் தொடர்ச்சியாக நிராகரிக்கப்படுவது மேற்குலகத்திற்கும் இலங்கைக்கும் இடையில் ஏற்பட்டுள்ள இராஜதந்திர உறவுகளின் விரிசலையே காட்டுவதாக தென்னிலங்கை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இலங்கை அரசின் மேற்குலகத்திற்கு எதிரான நிலைப்பாடுகளும் அதற்கு காரணம் என சிலர் வாதிடுகின்றனர். போருக்கு ஆதரவுகளை வழங்கியபடி அவுஸ்திரேலியா, அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் மேற்குலக நாடுகளுக்கு சென்று வாழலாம் என்ற கனவில் இருக்கும் தென்னிலங்கையின் நகர்ப்புற மக்களுக்கு இது கசப்பான விடயம்.

இதனிடையே, போர் நிறைவுபெற்றதும் பொருளாதாரத்தை மறுசீரமைத்துவிடலாம் என்ற இலங்கை அரசின் திட்டங்களும் நெருக்கடிகளை சந்தித்துள்ளன. உலகின் பொருளாதார தளம்பல்கள் இலங்கையின் பொருளாதார மேம்பாட்டிற்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த வருடம் இலங்கை 889 மில்லியன் டொலர் வெளிநாட்டு முதலீடுகளை பெற்றிருந்தது. ஆனால் இந்த வருடத்தில் 400 மில்லியன் டொலர் வெளிநாட்டு முதலீடுகளையே அது பெற்றுள்ளது. எனினும் எதிர்வரும் ஆண்டின் இறுதிக்குள் 2 பில்லியன் டொலர்களை (2,000 மில்லியன்) இலங்கை எதிர்பார்த்துள்ளது.

இலங்கை அரசின் 40 பில்லியன் பொருளாதாரத்தில் இது கணிசமான தொகையாகும். எனினும் உலக பொருளாதார நெருக்கடி இலங்கையின் பொருளாதாரத்தின் முக்கிய துறைகளான உல்லாசப்பயணத்துறை, ஆடை உற்பத்தித்துறை மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து பெறப்படும் வருமானங்கள் போன்றவற்றில் அதிக பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளன.

மேலும் இலங்கை மீதான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள், இடம்பெயர்ந்த மக்கள் முகாம்களில் நீண்ட காலம் தடுத்து வைக்கப் பட்டுள்ளமை போன்ற காரணிகளும் இலங்கைக்கும் செல்வந்த நாடுகளான மேற்குலகத்திற்கும் இடையிலான உறவில் விரிசல்களை ஏற்படுத்தியுள்ளன.

இலங்கை மீது அனைத்துலக மனிதா பிமான அமைப்புகளும், மேற்குலகமும் தொடர்ச் சியான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன. இந்த நெருக்கடி எதிர்வரும் மாதம் தீர்மானிக்கப்படவுள்ள ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை விவகாரத்தை பாதிக்கலாம் என்ற அச்சங்களை இலங்கைக்கு ஏற்படுத்தி யுள்ளது. வர்த்தக வரிச்சலு கையை ஐரோப்பிய ஒன்றியம் நீடிக் காது போனால் இலங்கையின் புடைவை ஏற்றுமதி 15 சதவீதம் வீழ்ச்சியடையலாம் என தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஜூலை மாதம் சர்வதேச நாணயநிதியம் 2.6 பில்லியன் டொலர்களை வழங்கியதனால் இலங்கை எதிர்கொள்ளவிருந்த பாரிய நிதி நெருக்கடி தடுக்கப்பட்டிருந்தது. எனினும் ஏழு தவணைகளில் வழங்கப்படும் இந்த நிதியின் ஒரு தொகையே இதுவரை வழங்கப்பட்டுள்ளது. அதன் அடுத்த கொடுப்பனவு எதிர்வரும் மாதம் மேற்கொள்ளப் படவுள்ளது. அனைத்துலக நாணயநிதியத்தின் செயற்பாடுகளில் மேற்குலகத்தின் பங்களிப்புகள் காத்திரமானவை. எனவே இலங்கையை தமது வழிக்குக் கொண்டுவர மேற்குலகம் அதனையும் ஒரு ஆயுதமாக பயன்படுத்தலாம் என்ற கருத்துக்களும் உண்டு.

இலங்கை அரசைப் பொறுத்தவரையில் எதிர்வரும் ஆறு மாதங்களுக்கு அதிக நிதி தேவை. ஏனெனில் அடுத்த ஆண்டின் முற்பகுதியில் அரச தலைவருக்கான தேர்தலையும், அதனை தொடர்ந்து நாடாளுமன்ற தேர்தலையும் நடத்திவிட அது திட்டமிட்டுள்ளது. இந்த தேர்தல்களுக்கு முன் தனது பொருளாதாரத்தை ஓரளவேனும் சீர் செய்துவிட இலங்கை அரசு முயன்று வருகின்றது. அதற்காகவே அவசர அவசரமாக ஈரான், லிபியா, சீனா போன்ற நாடுகளிடம் அதிக நிதிகளை பெற முற்பட்டு வருகின்றது.

ஆனால் இந்தக் காலப்பகுதியை தமக்கு சாதகமாக பயன்படுத்த மேற்குலகம் திட்டமிட்டுள்ளது போலவே அவர்களின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன. மேலும் ஐ.நா.வின் ஊடாக ஒரு நேரடியான தலையீட்டிற்கும் மேற்குலகம் முற்பட்டு வருகின்றது.மேற்குலகத்தின் இந்த நகர்விற்கு சாதகமாக புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களின் ஆதரவுகள் உள்ளமை அவர்களுக்கு அனுகூலமானதாகவே உள்ளது. இந்த நிலையில் தான் இந்தியா தற்போது இடம்பெயர்ந்த மக்கள் தொடர்பாக தனது கவனத்தை செலுத்தியுள்ளது.

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை என்பது மிகவும் இலகுவானது. அதாவது "எதிரிக்கு எதிரி நண்பன்" என்று தமிழில் ஒரு வாசகம் உண்டு. ஆனால் "எதிரிக்கு நண்பன் எனக்கு நண்பன்" என்பது தான் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையின் சுருக்கம்.

ஏன் இதனை கூறுகின்றேன் என்றால் இந்தியாவை தனது வழிக்கு கொண்டுவரு வதற்கு இலங்கை பாகிஸ்தானை பகைப்பது கிடையாது, பாகிஸ்தானிடம் ஆயுதங்களுக் கும், ஏனைய உதவிகளுக்கு ஓடுவதும், பாகிஸ்தானை அரவணைப் பதுமே இந்தியாவை இலங்கையின் நண்பனாக மாற்றியிருந்தது.

அதற்கு இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களும் சில விளக்கங்களை முன்னர் கொடுத்திருந்தனர். அதாவது நாம் ஆயுதங்களை இலங்கைக்கு வழங்காது போனால் சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் இலங்கைக்கு ஆயுதங்களை வழங்கிவிடும் என்பதே அவர்களின் வாதம்.அதே ஆயுதத்தைத் தான் தற்போது புலம்பெயர்ந்து வாழும் தமிழ் சமூகம் கையில் எடுத்துள்ளது.

அதாவது புலம்பெயர் தமிழ் சமூகத்துடன் மேற்குலகம் கொண்டுள்ள நெருக்கம் முகாம்களில் வாடும் 280,000 மக்கள் தொடர்பாக இந்தியாவை பேச வைத்துள்ளது.கடந்த நான்கு மாதமாக இந்த மக்களின் அவலங்களை திரும்பிப் பார்க்காத இந்தியா தற்போது இந்த மக்களால் இந்து சமுத்திர பூகோள உறுதித்தன்மைக்கு பாதிப்பு என புலம்புகின்றது.

இந்தியா என்றாலும் சரி இலங்கை என்றாலும் சரி இன்று அவர்களால் அணுகமுடியாத மற்றும் அசைக்க முடியாத பலம் கொண்ட சக்தியாக புலம்பெயர்ந்து வாழும் தமிழ் சமூகம் மாறியுள்ளது. இதனை யாவரும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

- வேல்ஸிலிருந்து அருஷ்

நன்றி - வீரகேசரி வாரவெளியீடு

Comments