ஈழத்தமிழர்கள் என்ன செய்ய வேண்டும் - ஒரு கருத்துக் கணிப்பு



அமெரிக்காவில் இருந்து இயங்கும் தமிழர்களுக்கான ஒபாமா என்னும் அரசியல் அமைப்பு ஈழத்தமிழர்கள் இனியென்ன செய்ய வேண்டும் என்பதற்கான ஒரு கருத்துக் கணிப்பை புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களிடையே இன்று முதல் தொடங்கி உள்ளது. நாடுகடந்த அரசாங்கம் என்றால் என்ன?

புகலிட அரசாங்கம் என்றால் என்ன?

இவை புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு எவ்வாறு தொடர்புடையதாகின்றன?

என்னும் கேள்விகளுக்கான இக்கருத்துகணிப்பு இன்றுமுதல் (14-10-2009) அடுத்தமாதம் 4ம் நாள் (04-11-2009) வரை நடாத்தப்படுகின்றனது.

அதில் தங்கள் கேள்விகளுக்கான விளக்கத்தையும் அவர்கள் முன்வைத்துள்ளார்கள்.

அவ்விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
நாடுகடந்த அரசாங்கம் என்பது (தற்காலிக அரசு எனவும் அழைக்கப்படுகிறது), ஒரு நாட்டில் பழைய ஆட்சிமுறை முடிவுக்கு வந்த பின் புதிய அரசாங்கம் பதவியேற்கும் வரை நாட்டில் உரிய சூழலை உருவாக்கச் செயல்படும் குறுகியகால அரசாங்கமாகும்.

இரஷ்யாவில், 1917-ம் ஆண்டில் ஜார் மன்னர்களின் ஆட்சி முடிவுக்கு வந்த பின் உருவான இடைக்கால அரசு மற்றும் எரிதிரிய மக்களால் எத்தியோப்பிய ஆட்சியை ஆயுதப்போராட்டம் மூலம் வெற்றிகரமாகத் தகர்த்தெறிந்து நிரந்தர ஆட்சியை ஏற்படுத்துமுன் உருவாக்கப்பட்ட எரித்திரிய இடைக்கால அரசு ஆகிய இரண்டையும் இங்கு முன்னுதாரணங்களாகக் குறிப்பிடலாம். இடைக்கால அரசுகள் அந்தந்த நாடுகளின் நிலப்பரப்புக்குள்ளேயே இயங்குகின்றன.

புகலிட அரசு என்பது எதிரி நாட்டின் ஆக்கிரமிப்பு அல்லது புரட்சியினால் பதவி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் தாய்நாட்டிற்கு வெளியே இயங்கும் அரசைக் குறிப்பதாகும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கடைசி போலந்து அரசானது ஜெர்மனி மற்றும் இரஷ்யாவினால் 1939-ல் தாக்கப்பட்டு பின்னர் 1990 வரை இரஷ்யா நிறுவிய கைப்பாவை அரசினால் அதிகாரம் பறிக்கப்பட்டதால் நாடு கடந்து இயங்கிய போலந்து அரசை எடுத்துக்காட்டாகக் கூறலாம்.

நாடு கடந்து இயங்கிய போலந்து அரசின் நோக்கமானது அரசாங்கத்தின் சட்டத்திற்குட்பட்ட தன்மையைப் பாதுகாத்து அடுத்த சட்டப்பூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்படும் அரசிற்குக் கையளிப்பதேயாகும். அந்த நோக்கத்தை புகலிட அரசு வெற்றிகரமாக நிறைவேற்றியது.

நாடு கடந்த அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கும் நாடு ஒன்று தேவை: போலாந்தின் புகலிட அரசாங்கம் 1990 வரை பிரிட்டனில் இயங்கி வந்தது.

தமிழர்களின் நிலை எரித்திரியர்களின் நிலையைப் போன்றது ஏனென்றால் கொடூரமான அடக்குமுறை அரசிற்கு எதிர்த்து நாம் போராடினோம். எரித்திரியர்களுக்கும் நமக்கும் உள்ள வேறுபாடு என்னவென்றால் அவர்களைப் போல் நமது நிலப்பகுதி நம் கட்டுப்பாட்டில் இல்லை.

மக்களாட்சி முறையில் எதிர்காலத்தில் அமையும் என நாம் எதிர்பார்க்கும் தமிழர்களின் அரசாங்கத்திற்கு சட்டப்பூர்வமான அங்கீகாரத்தைப் பெற்றுத் தருவதே நமது நோக்கமாகையால் நம் நிலை போலாந்தின் புகலிட அரசினை ஒத்தது.

கீழுள்ள இணைப்புகளில் ஏதேனும் ஒன்றின் மேல் அழுத்தி கருத்துக்கணிப்பில் நீங்கள் பங்கெடுக்கலாம்:


In English




Comments