சிறிலங்கா அரசின் தமிழ் மக்கள் மீதான மருத்துவ ரீதியான படுகொலைகள் தொடர்கின்றன!

சிறீலங்கா அரசின் மருத்துவ ரீதியான இனப்படுகொலை வவுனியாவில் மறைமுகமாக நடந்தேறிக்கொண்டிருக்கின்றது. வவுனியாவில் உள்ள தடுப்பு முகாம்களில் மக்களுக்கு மருத்துவ சுகாதார வசதிகள் இல்லாததினால் வயோதிபர்கள் குழந்தைகள் நாள்தோறும் இறந்துகொண்டிருக்கின்றார்கள்.

அண்மையில் வவுனியாவில் பொய்துவரும் பருவ மழையினால் மக்களின் சுகாதாரம் சீர்குலைக்கப்பட்டுள்ளது. முள்ளிவாய்காலில் மக்களை பட்டினிபோட்ட சிறீலங்கா அரசு, அங்கிருந்து மீண்ட மக்களை அவர்களது உடல் பலவீனத்தைகூட கண்டுகொள்ளவில்லை.

உடல் நலிந்த மக்கள் அதிலிருந்து மீள்வதற்கு சத்துணவுகள் கூட வழங்காத நிலையில் தடுப்பு முகாமில் சுகாதார சீர்கேடினால் நோய்வாய்பட்ட வயோதிபர்கள் வவுனியா பொது மருத்துவ மனைக்கும், செட்டிகுளம் பொது மருத்துவ மனைக்கும் எடுத்துச் செல்லப்பட்டு அனாதரவான நிலையில் வயோதிபர்கள் இறந்துள்ளார்கள்.

தடுப்பு முகாம்களில் உள்ள உறவினர்கள், இவர்களின் உடலை எடுத்து உரியமுறையில் அடக்கம் செய்யக்கூட அங்குள்ள சிறீலங்கா படையினர் அனுமதிக்கவில்லை. இன்நிலையில்தான் கர்பவதி தாய்மாரின் நிலை மிகமோசமடைந்துள்ளது. தடுப்பு முகாம் வாழ்கையினை ஆறுமாதமாக கழித்த கர்பவதிகள், சத்துணவு, குடிநீர்வசதி இன்மையால் உடல் நலிவடைந்த நிலையில் பிரசவத்திற்காக வவுனியாவில் உள்ள அரச மருத்து வமனைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டு, அங்கு அதிகரித்த நோயாளர்களின் எண்ணிக்கையினால் மருத்துவமனையில் சீரான பராமரிப்பு இன்மையால் பிரசவத்தின்போது குழந்தை இறந்தும், பிரசவத்தின் பின் குழந்தை இறந்த நிகழ்வுகளும் நடந்தேறியுள்ளன.

தடுப்பு முகாமில் உள்ள கர்பம் தரித்த இளம் பெண்களின் கர்பை ஊசிமூலம் கரைக்கும் நடவடிக்கையிலும் சிறீலங்கா அரச மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளனர். தமிழ்மக்களுக்கு தெரியாமலே சிறிலங்கா அரசு தமிழின அழிப்பினை மறைமுகமாக மேற்கொண்டுவருகின்றது.

அண்மைய நான்கு வாரத்தில் 20க்கு மேற்பட்ட வயோதிபர்கள் இறந்துள்ளதுடன் 40 வரையான குழந்தைகள் இறந்துள்ளன. இவ்வாறு மருத்துவமனைகளில் இறந்தவர்களில் சிலரின் உடலங்கள் உரிமை கோராத நிலையில் ஒரு மாதகாலத்திற்கு பிரேத அறையில் வைக்கப்பட்டு பின்பு மருத்துவமனையினரால் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உறவினர்களுக்கு தெரியாமல் மீள்குடியேற்றம் என்ற பெயரில் மக்கள் மீண்டும் முகாம்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளமையினால் மருத்துவமனைகளில் நோயாளர்கள் அனாதைகளாக காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments