சுனாமியால் பாதிக்கப்பட்ட பேபி- 81 குழந்தை ஏமாற்றப்பட்டுள்ளதா?

2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதியை கடற்கரையோரத்தை அண்டியிருந்த எவருமே எளிதில் மறந்துவிடமாட்டார்கள். இந்திய கடலோரம் இருந்த 226,000 பேரைப் பலிகொண்டது இந்த சுனாமி. இந்த மாதத்துடன் இந்த பேரனர்த்தம் நிகழ்ந்து ஐந்து ஆண்டுகள் முடிகின்றன. இவ்வேளையில் இந்த அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பேபி 81 எனப்படும் குழந்தையை வைத்து பெருந்தொகை பணம் சம்பாதித்துள்ளதாக அறியக்கிடைத்துள்ளது. முதலில் பேபி 81 என அழைக்கப்படும் அபிலாஷ் என்ற குழந்தை யார் என்று தெரிந்து கொள்ள:

இவ்வனர்த்தம் நடந்த 26-ஆம் திகதி மாலை குப்பைக்குள் இருந்து அனாதரவான நிலையில் கண்டெடுக்கப்பட்ட ஒரு குழந்தை பொதுமக்களினால் கல்முனை வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டிருந்தது. குழந்தையை முதலில் ஒருவரும் உரிமைகோராத பட்சத்தில் கல்முனை வைத்தியசாலையின் அனுமதி இலக்கமான 81 ஐயே இதற்கு பெயராக வைத்து பேபி -81 என அழைக்கப்பட்டது அக்குழந்தை. 4 மாதக் குழந்தையாக வைத்தியசாலையில் பராமரிக்கப்பட்டு வந்த இந்த குழந்தைக்கு பலர் கிட்டத்தட்ட 9 பேர் உரிமை கோரியிருந்தனர். இதேவேளை குழந்தையின் உண்மையான பெற்றோர் காயம் அடைந்திருந்தபோதும் மகன் இருப்பதறிந்து கல்முனைக்கு ஓடிவந்தனர். ஆனால் அவர்களும் கைதுசெய்து வைக்கப்பட்டிருந்தனர். இறுதியில் பேபி-81 இன் தகப்பனாரான முருகுப்பிள்ளை ஜெயராஜ் மரபணு சோதனைக்கு உட்படுத்தப்பட்டு தன்னை நிரூபித்த பின்னரே குழந்தை கையளிக்கப்பட்டது. இது நடந்தது சுனாமி தாக்கி 6 வாரங்களின் பின்னாகும். இந்த பேபி-81 இன் உண்மைப்பெயர் அபுலாஷ் என்பதாகும்.

இதையடுத்து அமெரிக்காவில் உள்ள "ABC TV" நிறுவனம் விடுத்த அழைப்பின் பேரில் 4 மாத குழந்தை "அபிலாஷ்" தனது பெற்றோர்களுடன் நியூ யோர்க் பயணமாகி அங்கு 13நாட்கள் தங்கியிருந்தான். அத்துடன் அவர்கள் அந்த தொலைக்காட்சி நிறுவனத்தால் நடாத்தப்படும் "Good Morning America" எனும் நிகழ்ச்சியிலும் பங்குபற்றினார்கள். இந்த வாய்ப்பு குறித்து முதலில் கூறிய ஜெயராஜ் "நான் ஒருபோதும் என் வாழ்க்கையில் கனவில் கூட காணாத விஷயம் இது" என்றார். ஆனால் உண்மையில் நடந்ததோ வேறு. இப்போது ஐந்து வயதாகியுள்ள மகன் அபிலாஷை அணைத்தபடி, அமெரிக்கா சென்று வந்தபோது அனைவரும் தங்களை பெருமையாகப் பார்த்தனர் என்றும் ஆனால் தமது வாழ்க்கையில் ஒருவித மாறுதலும் ஏற்படவில்லை என்கிறார் ஜெயராஜ். திரும்ப திரும்ப ஒரே கதையைச் சொல்லத்தேவையில்லை என்ற அவர் தம்மை அமெரிக்காவுக்கு அழைத்த ஏ.பி.சி டி.வி கூட மேற்படி நிகழ்ச்சியில் தாம் தோன்றியதற்காக மகனின் எதிர்காலத்துக்காக பணம் தரவில்லை என்கிறார்.

இதேவேளை அமெரிக்காவின் பிளாக் ரிபெல் மோட்டார் சைக்கிள் கிளப் என்ற இசைக் குழு தமது 2007 இசை ஆல்பத்துக்கு குழந்தை அபிலாஷ் அழைக்கப்படும் விதமான பேபி 81 என பெயர் வைத்ததால், வெளியிட்டு முதல் வாரத்திலேயே அந்த இசை குறுந்தகடுகள் 14,000 நகல்களுக்கு மேல் விற்பனையாகின. அனைத்து ஊடகங்களுக்கும் அபிலாஷின் படம் ஒரு விளம்பரப் படம்போல அமைந்து விட்டது, இந்த விளம்பரத்தால் தமக்கு எதுவித பலனுமே இல்லை என்கிறார் ஜெயராஜ். இந்த பிரபலத்தால் உண்மையில் ஜெயராஜ் குடும்பத்துக்கு கிடைக்கவேண்டிய நிவாரண உதவிகள் கூட உள்ளூரில் கிடைக்கவில்லையாம். ஏனெனில் தொண்டு நிறுவனங்களும் ஜெயராஜ் குடும்பத்துக்கு அமெரிக்க நிறுவனம் உதவி செய்திருக்கக் கூடும் என நம்புகிறதாம்.

தமது மகனின் அபிலாஷ் என்ற பெயர் மருகி பேபி 81 என்ற பெயர் பிரபலமாகுவதும் இத்தம்பதியருக்கு பிடிக்கவில்லை. தமது அனைத்து மனக்காயங்களையும் மறப்பதற்காக இவர்கள் இப்போது கல்முனையை விட்டு வெளியேறி மட்டக்களப்புக்கு சென்றுவிட்டனர். சுனாமியால் பாதித்த குடும்பங்களுக்கு அரசாங்கம் புதுவீடுகள் கட்டிக்கொடுத்தபோதும், துரதிர்ஷ்டவசமாக அபிலாஷ் குடும்பமோ தமது உறவினரின் கட்டிமுடிக்கப்படாத ஒரு வீட்டில் வாழ்ந்து வருகின்றனர்.

2004 ம் ஆண்டு ஏற்பட்ட ஆழிப்பேரலை நடந்து சுமார் 5 வருடங்கள் பூர்த்தியாகும் நிலையில் அத் தாக்கத்தால் உயிரிழந்த அனைத்துத் தமிழ் உறவுகளுக்கும் அதிர்வு இணையம் தனது அஞ்சலியைத் தெரிவித்து நிற்பதுடன், உறவுகளை இழந்த உறவினர்களுடன் துயரையும் பகிர்ந்துகொள்கிறது.

Comments