கனடா தழுவிய வரலாற்றுத் தேர்தல், கனடிய தமிழ் மக்கள் ஆணை - "தமிழீழமே தீர்வு" என 99.82 சதவீத மக்கள் தீர்ப்பு

வட்டுக்கோட்டைத் தீர்மானத்துக்காக கனடியத் தமிழ் மக்களிடையே, நேற்று 19-12-2009 சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 9 மணி வரை நடத்தப்பட்ட வாக்குக்கணிப்பு மொத்தமாக 48,583 வாக்காளர்கள் வரலாறாகி தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர்.


அதில் வட்டுக்கோட்டைத் தீர்மானத்துக்கு ஆதரவாக ‘ஆம்' என்று 48,481 வாக்குகளும், எதிராக ‘இல்லை' என்று 85 வாக்குகளும் அளிக்கப்பட்டன. அத்துடன் 17 வாக்குகள் செல்லுபடியற்றவையாக தேர்தல் நிறுவனத்தினால் நிராகரிக்கப்பட்டன. இதன் பிரகாரம் 99.82 வீதமான மக்களால் வட்டுக்கோட்டைத் தீர்மானம் ‘ஆம்' என்று வாக்களிக்கப்பட்டதால் வாக்களிப்பில் ‘ஆம்' வெற்றி பெற்றதாக தேர்தல் நிறுவனத்தினால் உத்தியோகபூர்வ முடிவாக அறிவிக்கப்பட்டது.


தேர்தலை நடத்திய ES&S என்ற நிறுவனம் 40 ஆண்டுகளாக சனாதிபதித் தேர்தல் முதற்கொண்டு பல்வேறு தேர்தல்களை நடத்தி பெயர்பெற்ற வட அமெரிக்க தேர்தல் நிறுவனம் என்பது குறிப்பிடத் தக்கது. நேர்த்தியான தொழிநுட்பத்துடன் கூடிய இலத்திரனியல் வாக்களிப்பு இயந்திரங்கள் மூலம் நடத்தப்பட்ட தேர்தலாகையால், தேர்தல் முடிந்த சில நிமிட நேரங்களிலேயே முடிவுகள் வெளிவர ஆரம்பித்தன.


கனடாவில் எந்த ஒரு சமூகமும் முனையாத முன்முயற்சியாக சனநாயக ரீதியாக அமைந்த இவ்வாக்குக்கணிப்பை கனடிய தேசிய ஊடகங்கள் பலவும் முதன்மையாகவும் தொடர்ச்சியாகவும் ஒலி - ஒளி பரப்பியமை முக்கிய விடயமாகக் நோக்கத்தக்கது.

தொகுதிவாரியான தேர்தல் பற்றிய முழு விபரம் பின்னர் அறியத் தரப்படும்.

Comments