நாடு கடந்த தமிழீழ அரசின் தேர்தல் குறித்த ஊடக அறிக்கை

நாடு கடந்த தமிழீழ அரசினை அமைப்பதற்காக நேர்மையான முறையில் தேர்தலை நடத்துவது தொடர்பாக பல்வேறு விடயங்களை உள்ளடக்கிய தனது அறிக்கையின் முதலாவது வரைபை நாடு கடந்த தமிழீழ அரசு அமைப்பதற்கான செயற்குழுவின் மதியுரைக்குழு நிறைவு செய்துள்ளது.

இது குறித்து நாடு கடந்த தமிழீழ அரசு அமைப்பதற்கான செயற்குழு வெளியிட்டுள்ள அறிக்கை:

நாடு கடந்த தமிழீழ அரசினை அமைப்பதற்கான உருவாக்கக்குழுவுக்கான மதியுரைக்குழு டிசம்பர் 3- 6 வரையிலான திகதிகளில் தனது சந்திப்பினை லண்டன் மாநகரில் மேற்கொண்டது.

நாடு கடந்த தமிழீழ அரசினை அமைப்பதற்காக நேர்மையான முறையில் தேர்தலை நடத்துவது தொடர்பாக பல்வேறு விடயங்களை உள்ளடக்கிய தனது அறிக்கையின் முதலாவது வரைபை இச் சந்திப்பில் மதியுரைக்குழு நிறைவு செய்தது.

புலத்துத் தமிழ் மக்கள் மத்தியிலிருந்து முன்வெக்கப்பட்டிருந்த பல்வேறு கேள்விகள், கருத்துக்கள், ஆலோசனைகள் இவ் வரைபில் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன.

அடித்தளமாக அமைய வேண்டிய வழிகாட்டிக் கோட்பாடுகள், அறிக்கை வெளியிடப்படும் நாளிலிருந்து தேர்தல்கள் நடைபெற்று நாடு கடந்த தமிழீழ அரசு அமையும் நாள் வரையிலான காலப்பகுதியில் மதியுரைக்குழுவின் செயற்பாடுகள் மற்றும் ஈமத் தமிழ் மக்களின் நலன்களை முன்னெடுத்துச் செல்லக்கூடிய அறிஞர் குழாம் ஒன்று ஒழுங்கமைக்கப்படல் ஆகியன உள்ளடங்கியிருந்தன.

மதியுரைக்குழு, நாடு கடந்த தமிழீழ அரசினை அமைப்பதற்கான பிரித்தானியச் செயற்பாட்டுக்குழுவினருடனும் சந்திப்பினை மேற்கொண்டு செயற்திட்டத்தை முன்நோக்கி நகர்த்துவது தொடர்பாகக் கருத்துப்பரிமாற்றங்களையும் நிகழ்த்தியது.

மேலும், லண்டன் மாநகரில் வாழும் ஈழத் தமிழ் மக்களின் பிரதிநிதிகளுடன் சந்திப்பினை மேற்கொள்ளும் வாய்ப்பும் மதியுரைக்குழுவுக்குக் கிடைத்தது.

இலங்கையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பான மனிதாபிபான நெருக்கடிகளைக் கவனத்திற் கொண்ட மதியுரைக்குழு, யுத்தத்தால் பாதிக்கப்பட்டு தமது பெற்றோரைப் பிரிந்து தடுப்பு முகாம்களில் வாடும் பிள்ளைகளை பெற்றோரோடு ஒன்று சேர்ப்பது, அவர்களுக்குக் கிடைக்கக்கூடிய அனைத்துலக பாதுபாப்பு ஏற்பாடுகள் போன்றவற்றிற்கான வழிவகைகளை ஆழ்ந்து ஆராய்ந்தது. இவ்வாறு தடுப்பு முகாம்களில் வாடும் பெற்றோரைப் பிரிந்த பிள்ளைகளின் தகவல்களை மதியுரைக்குழு தொடர்ச்சியாகச் சேகரித்து ஆவணப்படுத்தி வருகிறது.

யுத்தத்தால் பாதிக்கப்பட்டு இடம் பெயர்ந்த மக்களுடன் மனிதாபிமான மற்றும் மனித உரிமை அமைப்புக்கள் தங்கு தடையில்லாத தொடர்பைப் பேணிப் பணியாற்றக்கூடிய சூழலை உருவாக்குமாறு அனைத்துலக சமூகத்தினை மதியுரைக்குழு இச் சந்தர்ப்பத்தில் கோருகிறது.

இம் மக்கள் மீளக்குடியமரும் போது அவர்களது பாதுகாப்பு மற்றும் ஏனைய நலன்கள் குறித்தும் அவர்களின அடிப்படை மனித உரிமைகள் மீறப்படாது பாதுகாக்கப்படுவது உட்பட ஏனைய தேவைகள் உரிய முறையில் பூர்த்தி செய்யப்படுகின்றனவா என்பது குறித்தும் மனிதாபிமான மற்றும் மனித உரிமை அமைப்புக்கள் கண்காணிப்பு செய்ய அனுமதிக்கப்படுவதனையும் அனைத்துலக சமூகம் உறுதிப்படுத்த வேண்டும்.

மக்கள் தடுப்பு முகாம்களிலிருந்து நிரந்தரமாக விடுவிக்கப்படுவதனையும், இவ்வாறு விடுவிக்கப்பட்ட மக்கள் புதிய இடங்களில் விசாரணை, மீள் கைது போன்ற துன்புறுத்தல்களுக்கு உள்ளாகாமல் இருக்கக்கூடிய உத்தரவாதங்கள் வழங்கப்படுவதனையும் அனைத்துலக சமூகம் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் மதியுரைக்குழு கோருகிறது.

நாடு கடந்த தமிழீழ அரசினை அமைப்பதற்கான முயற்சியில் தனது பங்களிப்பை தொடர்ந்தும் வழங்குவதில் மதியுரைக்குழு தனது முழுமையானபற்றுறுதியை வெளிப்படுத்துகிறது.

நாடு கடந்த தமிழீழ அரசினை உருவாக்கவதற்கான பரிந்துரைகளை உள்ளடக்கிய அறிக்கை தொடர்பான வேலைகள் வகுக்கப்பட்டு இந்த திட்டத்திற்கு அமைவாக முன்னேறி வருவதனையும், 2010 ஆம் ஆண்டு ஜனவரி முதல் வாரம் இவ் அறிக்கை மக்கள் முன் வைக்கப்படும் என்பதனையும் மதியுரைக்குழு மகிழ்வுடன் அறியத் தருகிறது.

வி. உருத்ரகுமாரன்



Comments