நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் யுத்தக்குற்றம் தொடர்பக அறிக்கை

முன்னாள் சிறீலங்கா இராணுவத்தளபதி ஐனரல் சரத் பொன்சேகா அண்மையில் விடுதலைப் புலிகளின் சமாதானத் தூதுவர்களான திரு நடேசன் திரு புலித்தேவன் ஆகியோரின் கொலை தொடர்பாக விடுத்த அறிவிப்பின் அடிப்படையில் நாடுகடந்த தமிழீழ அரசானது: சர்வதேசக் குற்றவியல் நீதிமன்ற வழக்குத் தொடுப்பாளரான லுயிஸ் மொரினோ ஒக்கம்போ விடுதலைப் புலிகளின் தலைவர்கள் படுகொலை செய்யப்பட்ட குறித்த சம்பவத்தினை

மட்டுமல்லாது சனவரி 2009 முதல் மே 2009 வரையிலான இறுதியுத்தத்தின் போது சிறீலங்கா ஆயுதப்படைகளின் நடவடிக்கைகள் தொடர்பாக விசாரணை செய்ய ஆரம்பிக்க வேண்டுமெனவும், ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் அவர்கள் இந்தப் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் என்பனவற்றினை ஐ நா பாதுகாப்புச்சபையின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டுமெனவும், சர்வதேச நீதிமன்ற பிரகடனத்தின் பங்குதரார்களான நாடுகள் இந்த விடயத்தினை சர்வதேச நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்ல வேண்டுமெனவும், அறைகூவல் விடுகின்றது.

கடந்த மே மாதத்தில் புலிகள் இயக்கத்தின் தலைவர்கள் ஆயுதங்களை கீழே வைத்து யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவர முற்பட்டவேளையில், அவர்களைக் கொல்லுமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயா ராஐபக்ச உத்தரவிட்டதாக சிறிலங்காவிலிருந்து வெளியாகும் சண்டே லீடர் பத்திரிகையில் டிசம்பர் 13 வெளிவந்த நேர்காணலொன்றில் ஓய்வுபெற்ற ஐனரல் சரத் பொன்சேகா குறிப்பிட்டிருந்தார். முதலில் வெள்ளைக் கொடியுடன் இராணுவத்தினரிடம் செல்லுமாறு தெரிவித்தல் பெற்ற இரு புலிகள் இயக்கத் தலைவர்களையும் கொல்லுமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளரான சனாதிபதியின் சகோதரர் நேரடியாக இராணுவ தளபதிகளுக்குப் பணித்தமையை அரசாங்க ஊடக செய்தியாளர்களின் மூலம் தான் அறிந்து கொண்டதாக அவர் தெரிவித்தார்.


சரத் பொன்சேகா தனது கூற்றினைப் பின்னர் மறுத்தபோதும் சண்டே லீடர் நேர்காணல், மனித உரிமைகள் அமைப்புகளது அறிக்கைகள், அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தினது அறிக்கை, இது தொடர்பான சர்வதேச அமைப்புக்கள் விசாரணையைத் தொடங்க வேண்டிய கட்டாயத்தை
வலியுறுத்துகின்றன.

மனித உரிமைகள் தொடர்பான உள்நாட்டு விசாரணைகள் விடயத்தில் சிறிலங்கா இதுவரை நடந்துகொண்ட முறையும்

(1977, 1983 இனப் படுகொலை,

1981ம் ஆண்டு யாழ்ப்பாண நுரலக எரிப்பு,

1996ம் ஆண்டு செம்மணி படு கொலைகள்,

1996 கிருசாந்தி படுகொலை,

2006ம் ஆண்டு பிரான்ஸ் உதவிப் பணியாளர்கள்),

அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் வருடாந்த மனித உரிமைகள் அறிக்கையில் சிறிலங்காவில் தண்டனைகள் தவிர்க்கப்படுவது எவ்வாறு பிரச்சனையாகவே உள்ளதாகத் தொடர்ச்சியாகவும் மீண்டும் மீண்டும் கூறப்பட்டு வருவதும் சிறிலங்காவில் உள்நாட்டு விசாரணையைக் கோருவதனை கேலிக் கூத்தாக்குகின்றது.

உள்நாட்டு விசாரணைகள் பயனற்றவையாக அமையுமென்று தெரிந்தால் சர்வதேச விசாரணைக்கு முன்னோடியாக உள்நாட்டு விசாரணை நடாத்தப்பட வேண்டியது
அவசியமில்லை என்பது நன்கு நிறுவப்பட்ட சட்டக் கோட்பாடுகளிலொன்றாகும்.

சர்வதேச சமூகம் இந்த விடயத்தில் செயற்படாமால் இருப்பது உலகளாவிய தமிழ் சமூகத்தினரிடம் நிலவும் ஏமாற்றப்பட்ட உணர்வினை மேலும் ஆழப்படுத்தும். சர்வதேச சமூகத்தின் செயற்படாத் தன்மையானது சர்வதேச நிறுவனங்களின் நம்பகத் தன்மையைப் பாதிப்பதுடன் நீதிசார்ந்த ஆட்சி மீதான நம்பிக்கையை இழக்கவும் பண்ணும். மேலும் சர்வதேச ஒழுங்குமுறையற்ற அரசுகள் மற்றும் சர்வாதிகார ஆட்சியாளர்கள் சகல மனிதாபிமானச் சட்டங்களையும் தங்கள் கைகளில் எடுப்பதையும் இது ஊக்குவிக்கும்.

விசுவநாதன் ருத்ரகுமாரன்
இணைப்பாளர்

Comments