தடுப்பு காவலில் உள்ளவர்களை படுகொலை செய்வதை மனித சமூகம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது: பிலிப் அல்ஸ்ரன்

போர் எவ்வாறு மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற விபரங்களை ஜெனீவா சட்டங்களும், ஏனைய விதிகளும் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளன. பல நூற்றாண்டுகளாக, எது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது என்றால் தடுப்புக்காவலில் உள்ளவர்களை படுகொலை செய்வது தான் என ஐக்கிய நாடுகள் சபையின் நீதிக்குப் புறம்பான படுகொலைகள் விவகார சிறப்பு பிரதிநிதி பிலிப் அல்ஸ்ரன் த லக்பிம வாரஏட்டுக்கு வழங்கி நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

பேரினவாத சிங்கள சகதிக்குள் மூழ்கியுள்ள இந்த வார ஏடு அப்பாவி தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்களை மறைக்கும் நோக்கத்துடன் திட்டமிடப்பட்டு தந்திரமாக கேட்ட கேள்விகளும் (கேள்விகளை அவதானமாக வாசியுங்கள் அதற்குள் ஒளிந்துள்ள இனவாதம் உங்களுக்கு விளங்கும்) அதற்கு அல்ஸ்ரன் அளித்த பதில்களும் வருமாறு:

கேள்வி: சனல்-4 தொலைக்காட்சி நிறுவனம் ஒளிபரப்பிய காணொளி உண்மையானது என்பதை சிறீலங்கா அரசு தொடர்ந்து மறுத்து வருகின்றனது. ஆனால் அது தொடர்பில் விசாரணைகள் ஆரபிக்கப்பட வேண்டும் என்பதை நீங்கள் ஏன் வலியுறுத்தி வருகிறீர்கள்?

பதில்: காணொளி பொய்யானது என்பது தொடர்பில் எந்த ஆதாரங்களும் இல்லை. எனவே குற்றம் சுமத்தப்பட்டது போல அது மிகவும் பாரதூரமான மனித உரிமை மீறலாகும் என்பதற்கு அது காத்திரமான சான்று. இந்த சூழ்நிலைகளில் அரசோ அல்லது சிறப்பு பிரதிநிதியோ அதனை விசாரணை செய்ய வேண்டியது கடமை.

கேள்வி: சுயாதீன நிபுணர்களின் அறிக்கை வெளிவந்த நேரம் தேர்தல் பரப்புரைகளின் காலத்தில் நிகழ்ந்துள்ளது. அது சிறீலங்காவின் அரச தலைவருக்கு பல நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளது தொடர்பாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் என்ன கருதுகிறீர்கள்?

பதில்: நாம் நியமித்த மூன்று ஆய்வாளர்களும் தமது பணிகளை நிறைவுசெய்த நேரத்திலேயே அறிக்கை வெளிவந்துள்ளது. அதன் பின்னரே நான் அறிக்கையை வெளியிட்டுள்ளேன். அறிக்கையை வெளியிடுவதை தவிர்ப்பது அரசியல் ரீதியாக சில சார்புநிலைகளை எடுப்பதற்கு சமனானது அல்லது அரசியல் காரணங்களுக்காக யாதர்த்தமான காலத்தை தவிர்ப்பதாகவே அது இருந்திருக்கும்.

கேள்வி: ஏன் அதனை விரைவாக ஊடகங்களுக்கு வெளியிட்டீர்கள்? விசாணைகள் தொடர்பாக கொழும்புக்கு தொழில்நுட்ப அறிக்கை கிடைத்த மறுநாள் காலை அது நியூயோர்க்கில் வெளியிடப்பட்டுள்ளது. அவற்றிற்கு இடையிலான கால அவகாசம் குறைவு. அதனை ஆராய்வதற்கு சிறீலங்கா அரசிற்கு நேரம் போதவில்லை என சிறீலங்கா அரசின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது?

பதில்: எமது அறிக்கையை ஆராய்வதற்கு அரசிற்கு 24 மணிநேரத்தை வழங்கியிருந்தோம். அவர்கள் அதனை செய்திருந்தனர். நாம் அரசிற்கு வழங்கிய கால அவகாசம் என்பது எமது அறிக்கைக்கு பதில் தரும் காலமல்ல நாம் எதனை கூறப்போகின்றோம் என்பது தொடர்பாக அரசு அறிந்து கொள்வதற்கே அது வழங்கப்பட்டது.

அரசு தனது விளங்கங்களை தெரிவிப்பதற்கோ அல்லது ஆதாரங்களை சேகரிப்பதற்கோ இது தருணமல்ல. அந்த காணொளி பொய்யானது என்பதை அரசு முன்னரே தெரிவித்திருந்தது. இந்த புதிய அறிக்கை தொடர்பிலும் அது தனது முன்னைய முடிவையே தெரிவித்துள்ளது.

கேள்வி: சுயாதீன விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என நீங்கள் கோரிக்கை விடுக்கும் போது அதனை மேற்கொள்ளப்போவது யார் என்பது தொடர்பில் நினைவில் கொண்டிருந்தீர்களா? எவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை நீங்கள் பரிந்துரை செய்யப்போகிறீர்கள்?

பதில்: அந்த விபரங்களை நான் இங்கு கூறப்போவதில்லை. அது அரசிற்கும் அனைத்துல சமூகத்திற்கும் இடையிலான பிரச்சனை. விசாரணைகள் சுயாதீனமானதாகவும், ஆக்கபூர்வமானதாகவும் அமைய வேண்டும் என்பதுடன், குறிப்பிட்டவர்கள் விசாரணசெய்யப்பட வேண்டும் என்பதை உறுதிப்படுத்த வேண்டியது தான் இங்கு உள்ள எல்லை.

கேள்வி:உங்களின் அறிக்கை ஆக்கபூர்வமானது என்பதை பான் கீ மூன் ஏற்றுக்கொண்டுள்ளாரா?

பதில்: நான் சுயாதீன நிபுணர். எனவே நான் செயலாளர் நாயகத்துடனோ அல்லது அவரின் அலுவலகத்தில் உள்ளவர்களுடனோ தொடர்பு கொள்ளவில்லை.

கேள்வி: இந்த விசாரணைகளில் சிறீலங்காவை இழுப்பதால் என்ன நன்மை ஏற்படும்?

பதில்: போரின் இறுதி நாட்களில் அதிகளவிலான மனித உரிமை மீறல்களை மேற்கொண்டதாக சிறீலங்கா அரசு மீது அதிகளவிலான குற்றச்சாட்டுக்கள் உள்ளன. எனினும் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ளன என்பதை அரசு மறுத்து வருகின்றது. இந்த நிலமைகளில் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பதன் மூலமே அரசு தனது நிலையை உணர்த்த முடியும்.

கேள்வி: விசாரணைகள் தொடர்பான கோரிக்கைகளை சிறீலங்கா அரசு தொடர்ந்து நிராகரித்தால் என்ன விளைவுகள் எற்படும்?

பதில்: அது தொடர்பில் நான் கருத்துக்களை தெரிவிக்க விரும்பவில்லை.

கேள்வி: சிறீலங்கா தொடர்ந்து விசாரணைகள் தொடர்பான கோரிக்கைகளை நிராகரித்தால் அது இயற்கையாகவே அழிந்து போகாதா?

பதில்: அவ்வாறு இருக்கலாம்.

கேள்வி: ஒரு பயங்கரவாத இயக்கத்தை தோற்கடித்தது தொடர்பில் சிறீலங்கா மக்கள் மகிழ்ச்சி அடைகின்றனர். ஆனால் சில ஐரோப்பிய நாடுகளும், நீங்களும் அதனை ஏன் போர் குற்றம், விசாரணைகள் என்ற கோணத்தில் பார்க்கிறீர்கள்?

பதில்: பயங்கரவாதத்தின் மீதான போர் தொடர்பில் அமெரிக்கர்களும் இதனைத் தான் கூறுகின்றனர். ஆனால் குவாந்தனமோ சிறை போன்றவற்றை பெரும் போர் நடைபெற்ற தடையங்களுக்குள் மறைக்க முடியாது.

ஐக்கிய நாடுகள் சபையில் சமர்ப்பித்த அறிக்கைகளில் நான் விடுதலைப்புலிகளை விமர்சித்திருந்தேன். புலம்பெயர் நாடுகளில் இருந்து செல்லும் உதவிகளை தடுக்குமாறு நான் கோரிக்கை விடுத்திருந்தேன்.

ஆனால் ஆயுதக்குழுக்களை தோற்கடிக்கும் போது மேற்கொள்ளப்படும் பாரிய மனித உரிமை மீறல்களை நாம் கண்டுகொள்ள மாட்டோம் என்பதற்கான அர்த்தங்கள் அல்ல அவை.

கேள்வி: சக்தி வாய்ந்த நாடுகளை விட சிறிய நாடுகளை தண்டிப்பது சுலபம் என்பதனால் தான் நீங்கள் சிறீலங்காவை தேர்ந்தெடுத்தீர்களா?

பதில்: அமெரிக்காவுக்கு எதிராகவே நான் அறிக்கைகளை விடுத்திருந்தேன். மற்றுமொரு அறிக்கையை இஸ்ரேலுக்கு எதிராக விடுத்திருந்தேன் (லெபனான் போர் தொடர்பானது), பிரேசில், கொலம்பியா, கென்யா போன்ற மேலும் பல சக்திவாய்ந்த நாடுகளுக்கு எதிராக கூட நான் அறிக்கைகளை வெளியிட்டிருந்ததுண்டு.

கேள்வி: போரில் இரு தரப்பிலும் உயிரிழப்புக்கள் ஏற்படுவது இயற்கையானது இல்லையா? உங்களின் எதிரியை கொல்வதற்கு ஏதாவது ஏற்றுக்கொள்ளப்பட்ட வழிமுறைகள் உண்டா?

பதில்: இது தொடர்பான விபரங்களை ஜெனீவா சட்டங்களும், ஏனைய விதிகளும் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளன. பல நூற்றாண்டுகளாக, எது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது என்றால் தடுப்புக்காவலில் உள்ளவர்களை படுகொலை செய்வது தான்.

கேள்வி: நீங்கள் சமாப்பித்த அறிக்கையில் பல ஏற்றுக்கொள்ள முடியாதவை என்று அரசு கூறிவருகின்றது. அதனை நிபுணர்கள் விளக்கவில்லை. உதாரணமாக, காணொளியின் இறுதிப்பகுதியான 17 ஆவது காட்சி, சில நபர்களின் அசைவுகள், காணொளி பதிவு செய்யப்பட்ட காலம், ஜுலை 17 2009, அப்போது போர் நிறைவடைந்து விட்டது. இவற்றின் மூலம் அந்த காணொளி பொய்யானது என்று நாம் கூறலாமா?

பதில்: நீங்கள் தெரிவித்த இந்த மூன்று காரணிகளையும் நானும் அவதானித்திருந்தேன். ஆனால் காணொளி பொய்யானது என்பதை இந்த காரணிகளின் மூலம் உறுதிப்படுத்த முடியாது என்பதை நான் எனது அறிக்கையில் தெளிவாக குறிப்பிட்டிருந்தேன். அதற்கு சிறந்த வழி என்னவென்றால் அது தொடர்பாக சுயாதீனமானதும், காத்திரமானதுமான விசாரணைகள் மேற்கொள்ளப்படுவது தான். அதனை தான் நான் கோரியிருந்தேன்.

கேள்வி: சிறீலங்கா அரசு மீது சுயாதீன விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என நீங்கள் கூறுவதற்கு அனைத்துலக அழுத்தங்கள் ஏதாவது காரணமாக உள்ளனவா?

பதில்: பல சந்தர்ப்பங்களில் பல நாடுகள் தொடர்பில் நான் இவ்வாறான விசாரணைகளுக்கான அறிவித்தல்களை விடுத்திருந்தேன்.

கேள்வி: விடுதலைப்புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்ட போரில் என்ன நடைபெற்றது என்பது தொடர்பான விசாரணைகளுக்கான அவசியம் என்ன? போரின் முடிவு நியாயப்படுத்தப்படவில்லையா? விடுதலைப்புலிகளிடம் இருந்து பல ஆயிரம் மக்கள் மீட்கப்பட்டுள்ளனர் அல்லவா?

பதில்: கொடூரமான வழிகள் கடைப்பிடிக்கப்படாது போர் வெல்லப்பட்டிந்ததாக கருதினால் இது ஒரு துன்பமான எதிர்விளைவு. ஆனால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது. எல்லா வன்முறைகள், மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதாபிமான விதிகளின் மீறல்களுக்குமான நீதியை காண்பதற்கான ஒரு வழி இது.

நன்றி – ஈழம் இ நியூஸ்

Comments