"எதிரியின் எதிரி நண்பன்": இப்போது அதுவே ஆயுதம்

CowsArmyVellankulamநீண்ட பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்கட்சிகளின் பொதுவேட்பாளர் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளிக்க தயாராகிவிட்டது. இத்தேர்தல் மூலம் தமிழர் தரப்புக்கள் சாதிக்கபோவது என்ன? சரத் பொன்சேகாவிடமிருந்து தமிழ் தேசிய கூட்டமைப்பால் என்ன உத்தரவாதங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டன? அவை தொடர்பான உறுதிப்பாடுகள் எவை என்பது பற்றி இப்பத்தி ஆராய்கிறது.

தற்போது தமிழ் மக்களுடைய உடனடி பிரச்சனைகளை முன்வைத்து இரண்டு பிரதான வேட்பாளர்களுடனும் தொடர்ச்சியாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

மகிந்தவுடன் எக்காலத்திலும் உடன்படக்கூடிய சாத்தியங்கள் இல்லையென்பதை தெரிந்துகொண்ட நிலையிலும் ஆளும்கட்சியினுடைய எதிர்கால திட்டங்கள் என்பது பற்றி அவர்களுடனும் ஆராய்ந்து இறுதியாகவே சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளிக்கமுடியுமென தீர்மானித்துள்ளதாக தெரிகின்றது.

இவ்வாறான நிலைப்பாடு தொடர்பாக எம்மவர் சிலரிடம் மாற்றுக்கருத்துக்கள் உண்டு. சிறிலங்காவின் முன்னாள் இராணுவ தளபதியை ஆதரிப்பதில் சில கருத்துவேறுபாடுகள் இருக்கின்றன. இந்திய இராணுவத்தினர் இலங்கையில் நிலைகொண்டிருந்தபோது இந்திய இராணுவத்தினரை அகற்றுவதற்காக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமை எடுத்த முடிவை இங்கு ஞாபகப்படுத்தி கொள்வது நல்லது. அப்போதைய சிறிலங்கா ஆட்சி பீடத்தோடு இணைந்து முதல் எதிரியாகவிருந்த இந்திய படைகளை அகற்றுவதில் புலிகள் தமது இராசதந்திரத்தை சரியாக பயன்படுத்தியிருந்தனர்.

முன்னர் நாம் குறிப்பிட்டது போல ஒரு நாகபாம்பை அகற்றி இன்னொரு பற்கள் புடுங்கப்பட்ட நாகபாம்பை ஆட்சியில் இருத்தபோகின்றோம். ஏனென்றால் சரத் பொன்சேகாவுக்கு அவருக்கென்று ஒரு கட்சி இல்லை. பலவீனமான ஒரு ஆட்சிபீடத்தையே அவரால் அமைக்கமுடியும். சிறிலங்காவின் ஆட்சிபீடம் பலவீனமாக இருக்கும்போதே தமிழர் தரப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். இப்போது தமிழர் தரப்பின் ஆதரவை தேடி ஆளும் கட்சியும் எதிர்கட்சியும் படையெடுப்பதும் இதன் ஒரு ஆரம்பமே.

இப்போது சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளிப்பதன் மூலம் ஈழத்தமிழர்களின் உடனடி பிரச்சனைகளுக்கு என்ன உத்தரவாதங்கள் பெறப்பட்டுள்ளன? எதிர்வரவுள்ள தேர்தல் தமிழர் தரப்பால் சரியான முறையில் பயன்படுத்தப்படுகின்றதா? என்ற வினாக்கள் எழுவது வழமையானதே.

சரத் பொன்சேகாவுடனும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடனும் நடத்திய பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு காணப்பட்ட முக்கிய விடயங்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ள புலிகளின் உறுப்பினர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கல், உயர் பாதுகாப்பு வலயங்களை நீக்குதல் மற்றும் அவசரகால சட்டத்தை நீக்குதல் என்பன முக்கியமானதாகும்.

தற்போது தடுத்துவைக்கப்பட்டுள்ள விடுதலைப்புலிகளின் விடுதலைக்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்வதை தமிழர் தரப்பு உறுதிப்படுத்தியிருக்கிறது. தற்போதைய மகிந்த அரசாங்கத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் தேசிய நாடாளுமன்ற உறுப்பினரை கூட இன்னமும் விடுவிக்காமல் இருப்பதை பார்க்கிறோம். இவ்வாறான அரசை ஆட்சியில் தொடர்ந்து அமரவிட்டு விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களையோ அல்லது அதன் ஆதரவாளர்களையோ சிறையிலிருந்து வெளியில் கொண்டுவருவது என்பது சாத்தியமில்லை. அத்தோடு அவர்களின் உயிருக்கு கூட உத்தரவாதத்தை கூட பெற்றுக்கொள்ளமுடியாத நிலையே இருந்துவருகின்றது.

அத்தோடு தடுத்துவைக்கப்பட்டுள்ள முழுமையான விடுதலைப்புலிகளின் விபரங்கள் வெளியிடப்படவில்லை. யார் யார் சிறையில் இருக்கின்றார்கள் என்பது அரசாங்கத்தால் உத்தியோகபூர்வமாக சொல்லப்படவில்லை. இதனால் அவர்களின் உயிருக்கு எந்தவேளையிலும் ஆபத்து இருப்பதை புரிந்துகொள்ளமுடியும். அரசாங்கத்திற்கு சார்பாக கருத்து சொல்லுவார்கள் என அரசாங்கம் நம்பிக்கை கொள்ளும் முன்னாள் போராளிகளை மட்டுமே அரசு வெளியில் விட விரும்புகிறது. அப்படியானால் மற்றையவர்களின் நிலை என்ன?

எனவே தடுத்துவைக்கப்பட்டுள்ள போராளிகளின் விடயத்தில் முன்னேற்றகரமாக தமிழர் தரப்பால் செய்யமுடியுமாகவிருந்தால் அதனை நிச்சயம் செய்யவேண்டும் என்ற எதிர்பார்ப்பு அனைத்துமட்டங்களிலும் இருந்து வந்தது. அதனை சரியாக தமிழர் தரப்பின் பிரதிநிதிகள் பயன்படுத்தியிருப்பது ஆறுதலான விடயமே.

அடுத்ததாக உயர் பாதுகாப்பு வலயங்கள் பற்றிய விடயங்கள் மிகவும் முக்கியமானதாகும். சிறிலங்கா அரசாங்கத்தால் யாழ்ப்பாணத்திலும் திருகோணமலையிலும் தொடர்ந்தும் உயர் பாதுகாப்பு வலயங்கள் பேணப்படுவதற்கான திட்டங்களே தற்போதைய அரசிடம் உண்டு. யாழ்ப்பாணத்தில் மூன்றில் ஒரு பகுதி பிரதேசங்கள் உயர் பாதுகாப்புவலயங்களாகவே இருந்துவருகின்றன. இங்கு 30, 338 குடும்பங்கள் இருபது வருடங்களாக தமது வாழ்விடங்களுக்கு திரும்பமுடியாமல் இருந்துவருகின்றார்கள்.

அதேபோல் திருகோணமலையிலும் சம்பூரை உயர் பாதுகாப்புவலயமாக்கி 4249 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இங்கிருக்கின்ற 19 பாடசாலைகளும் தொடர்ந்தும் மூடப்பட்டேயிருக்கிறது. இதுதவிர மணலாறு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் கொக்கிளாய் போன்ற பிரதேசங்களிலிருந்து விரட்டப்பட்ட மக்கள் இருபத்தைந்து வருடங்களாக தமது சொந்த இடங்களுக்கு திரும்பமுடியாமல் இருக்கிறார்கள்.

எனவேதான் உயர்பாதுகாப்பு வலயங்கள் தொடர்பான உறுதியான பதிலை தமிழர் தரப்பு எதிர் பார்த்திருக்கவேண்டும். சாதகமான பதிலளித்த சரத் பொன்சேகா உயர் பாதுகாப்பு வலயங்களை விரைவினிலே நீ்க்குவதற்கான ஒழுங்குகளை செய்வதாக ஏற்றுக்கொண்டுள்ளார்.

அடுத்ததாக தற்போது இலங்கைத்தீவை ஆட்டிப்படைத்துவரும் அவசரகாலசட்டம் பற்றிய விடயமாகும். தற்போது கைது செய்யப்படும் தமிழர்களை நீண்ட காலமாகவே தடுத்துவைப்பதற்கு அரசுக்கு வசதிசெய்யும் சட்டமூலமே இதுவாகும். தற்போதைய நிலையில் இதனை நீக்குவதற்கு வழிசெய்வதன் மூலமே தமிழர்களது குரலை வெளியுலகிற்கு கொண்டுவரமுடியும். அவசரகால சட்டம் நீக்கப்படுவதை உறுதிப்படுத்தி அதற்கான எழுத்து மூல ஆவணங்களும் சரத் பொன்சேகாவிடமிருந்து பெறப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

தமிழ் தேசிய கூட்டமைப்பால் பெறப்பட்ட உறுதிமொழிகள் அனைத்தும் தமிழர்களது அன்றாட அவசர தேவைகளை ஒட்டியதே தவிர தமிழர்களது அடிப்படை அரசியல் உரிமைகளை நிலைநிறுத்துவதற்கான எந்தவித முன்னேற்றங்களும் இப்பேச்சுவார்த்தைகளின்போது ஏற்படவில்லை என்பதையும் அனைவரும் கவனித்துக்கொள்ளவேண்டும்.

ஒரு சாதாரண பொதுமகனுக்கு இருக்கவேண்டிய அடிப்படை உரிமைகளை நிலைநாட்டுவதற்கான பேச்சுவார்த்தைகளே நடைபெற்றன என்பதையும் தமிழர்களது தாயகம் தேசியம் தன்னாட்சி உரிமைகளை நிலைநிறுத்துவதற்கு இன்னும் நீண்ட தூரம் பயணிக்கவேண்டியிருக்கும் என்பதையும் எவரும் மறந்துவிடக்கூடாது.

தமிழர்கள் தமது உரிமைகளை பற்றி விவாதிப்பதற்கான களநிலைமையை ஏற்படுத்துவதே இன்றைய தேவையாகும். அதனை ஏற்படுத்தி தாயகத்திலுள்ள மக்களே தமது உரிமைகள் என்னவென்பதையும் அதற்கான களத்தையும் திறக்கவேண்டும். அவர்களுக்கு வலுச்சேர்க்கும் விதத்தில் புலம்பெயர் தமிழ் சமூகம் தன்னாலான பங்களிப்பை வழங்கமுடியும்.

எனவே தாயகத்தில் எமது மக்கள் சுதந்திரமாக தமது கருத்துக்களை சொல்லக்கூடிய சூழ்நிலையை முதலில் ஏற்படுத்துவோம். அவ்வாறான சுதந்திரமான சூழல் வரும்வரை அதற்கான வழிகளை திறப்பதே எம்முன்னுள்ள ஒரேதெரிவாகும்.

- கொக்கூரான்

Comments