மீளமைக்கப்பட்ட மதியுரைக்குழு அறிக்கை மார்ச் 8 வெளியாகும்-நாக த அரசு செயற்குழு


நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை அமைப்பதற்கான செயற்குழுவின் மதியுரைக்குழு பெப்ரவரிமாதம் 19, 20 ஆம் திகதிகளில் அமெரிக்காவின் நியுயோர்க் நகரில் சந்திப்பினைமேற்கொண்டது. எமக்கு மக்களிடமிருந்து கிடைக்கப் பெற்றிருந்த சிந்தனைககைளையும் பிரதிபலிக்கும் வகையில் மீளமைக்கப்பட்ட மதியுரைக்குழுவின் அறிக்கை மார்ச் மாதம் 8 ம் திகதி வெளியிடப்படும்.

ஊடக அறிக்கை:-


நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை அமைப்பதற்கான செயற்குழுவின் மதியுரைக்குழு பெப்ரவரிமாதம் 19, 20 ஆம் திகதிகளில் அமெரிக்காவின் நியுயோர்க் நகரில் சந்திப்பினை

மேற்கொண்டது. இச் சந்திப்பில் பொதுமக்களுக்கு வெளியிடப்பட்டிருந்த மதியுரைக்குழுவின் அறிக்கை தொடர்பாக கிடைக்கப்பெற்ற கருத்துக்களின் பரிசீலனையை மதியுரைக்குழு நிறைவுசெய்து கொண்டது.

இவ்விரு நாட்களிலும் மேற்கொள்ளப்பட்ட அமர்வுகளில் மக்களிடமிருந்து கிடைக்கப் பெற்றிருந்த அனைத்துக் கருத்துக்ளையும் மதியுரைக் குழு கவனமாகப் பரிசீலனை செய்தது. இக் கருத்துக்கள் பல்வேறு வழிவகைகளினூடாகப் பெறப்பட்டிருந்தன. செயற்குழுவுக்கு நேரடியாக அனுப்பபப்பட்டும், ஊடகங்களில் பிரசுரிக்கப்பட்டும் – ஒலி, ஒளிபரப்பு செய்யப்பட்டும், உலகின் பல பாகங்களிலும் நடத்தப்பட்ட பொதுக்கூட்டங்களில் வெளிப்படுத்தப்பட்டும், எமது இணையத்தளத்தினூடாக அனுப்பப்பட்டும், மதியுரைக்குழு உறுப்பினர்களுக்கும் நாடுவாரியான செயற்பாட்டுக் குழுக்களுக்கும் நேரடியாக வழங்கப்பட்டும் இருந்த அனைத்துக் கருத்துக்களும் பக்குவமாகத் தொகுத்துச் சேகரிக்கப்பட்டிருந்தன.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தொடர்பான தமது சிந்தனைகளையும் ஆலோசனைகளையும் வழங்குவதற்காக உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் எடுத்துக் கொண்டிருந்த அக்கறையை மதியுரைக்குழு மிகவும் மனமுவந்து பாராட்டுகிறது. வழங்கப்பட்டிருந்த கருத்துக்கள் கொண்டிருந்த முழுமைத்தன்மைக்கும் சிந்தனைத்திறனுக்கும் மதியுரைக்குழு மதிப்பளிக்கிறது. கேள்விகளாக, எண்ணங்களாக, விமர்சனங்களாக, ஆலோசனைகளாக முன்வைக்கப்பட்டிருந்த கருத்துக்களை மதியுரைக்குழு விவாதித்து ஆழ்ந்த சிந்தனைக்குட்படுத்திக் கொண்டது. எமக்கு மக்களிடமிருந்து கிடைக்கப் பெற்றிருந்த சிந்தனைககைளையும் பிரதிபலிக்கும் வகையில் மீளமைக்கப்பட்ட மதியுரைக்குழுவின் அறிக்கை மார்ச் மாதம் 8 ஆம் திகதி வெளியிடப்படும்.

இடம்பெயர்ந்து வாழும் மக்களுடன் மனிதாபிமான மற்றும் மனித உரிமை அமைப்புக்கள் தங்கு தடையற்ற தொடர்பினைப் பேணிக் கொள்வதற்கான வழிவகைகளை உறுதிப்படுத்துமாறு அனைத்துலகச் சமூகத்தினை மதியுரைக்குழு இச் சந்தர்பத்தில் மீளக் கோருகிறது. சிறிலங்கா அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட இனஅழிப்பு (Genocide), போர் மற்றும் மனிதத்துவத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பான விசாரணைகளை ஆரம்பிக்குமாறும் அனைத்துலகச் சமூகத்தினை மதியுரைக்குழு மீள வலியுறுத்துகிறது. இனஅழிப்பு, போர் மற்றும் மனிதத்துவத்திற்கு எதிரான குற்றங்களுடன் தொடர்புபட்டவர்களை பொதுமையான நியாயாதிக்க (universal jurisdiction) அடிப்படையில் தமது உள்நாட்டு நீதிமன்றங்களில் தண்டிக்க நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும் எனவும் நாகரீக நாடுகளை மதியுரைக்குழு கோருகிறது.

விசுவநாதன் ருத்ரகுமாரன்

Comments