எருமை மாட்டிற்கு மேல் மழைபெய்த மாதிரியாகும் ஈழ அரசியல்

மாவிலாறு முதல் முள்ளிவாய்க்கல் வரை பின்னடைவுகளைச் சந்தித்துள்ள எம்மினம் ஒரு விடுதலைப் போராட்டத்தை இழந்து தவித்து வருகிறது. இந்நிலையில் அரசியல் ஊடாக தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை வென்றெடுக்க பலரும் முயற்சி எடுக்கும் இவ்வேளையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு மூன்றாகப் பிளவுபட்டு நிற்பது, ஒருபோதும் தமிழன் ஒன்றுபட மாட்டானா என்று பலரையும் ஆறாத்துயரில் ஆழ்த்தியுள்ளது.

உண்மையில் நடந்தது என்ன?

சில காலங்களுக்கு முன்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒரு தீர்வுத் திட்டத்தை தயாரித்தது யாவரும் அறிந்ததே. அது இன்றுவரை சிதம்பர ரகசியமாகப் பாதுகாக்கப்படுகிறது. அதைக் காட்டுமாறு பல எம்.பிக்கள் கோரிக்கை விடுத்தும் அது காட்டப்படவில்லையாம். இதை முதலில் காட்டுமாறு கோரியவர் கஜேந்திரன் என்று கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து இதில் அடக்கப்பட்ட அம்சம் தொடர்பாக பலர் விவாதித்துள்ளனர். தமது ஏக பிரதிநிதி விடுதலைப் புலிகளே என்ற வாசகங்கள் முன்னைய தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பால் முன்வைக்கப்பட்டதும் நினைவிருக்கலாம்.

ஆனால் தற்போது தயாரிக்கப்பட்ட தீர்வுத்திட்டத்தில் இரட்டை ஆட்சி என்ற சொற்பதங்கள் நீக்கப்பட்டு, மாநில சுயாட்சிகள் கூட இல்லாத ஒரு ஒற்றையாட்சி முறையின் கீழ் மாகாண அலகுகளைக் கொண்ட ஆட்சிமுறை ஒன்றை தமிழ் தேசிய கூட்டமைப்பு வரைந்துள்ளது. இந்த தீர்வுத் திட்டத்தை பல எம்.பிக்கள் எதிர்க்கிறார்கள் ஆனால் கிழட்டு மாவை அதை பிடித்தபிடியாக வைத்திருக்கிறார்.

இந்த தீர்வுத் திட்டதை தமிழ் மக்களிடம் முன்வைத்து இம் முறை நாம் தேர்தலில் போட்டி இடுவோம் என கூட்டமைபில் உள்ள பல எ.பிக்கள் சம்பந்தன் ஜயாவிடம் கூறியுள்ளனர். ஆனால் அதை தாம் வெளியிட்டால் சிங்களவர்கள் குழம்பிவிடுவார்கள் என்று சம்பந்தன் கூறியுள்ளாராம்.

பழைய எம்.பிக்களுக்கு ஏன் இம்முறை இடமில்லை?

இதுவும் ஒரு சாக்கடை அரசியல் தான். யாழ்ப்பாணத்தில் பிரபல்யமான பத்திரிகையாக விளங்குவது உதயன். இதன் உரிமையாளர் வித்தியாதரன். சில வருடங்களுக்கு முன்னர் இவரை இலங்கைப் பொலிசாரும் கைது செய்தனர். தமிழ் தேசியத்தை ஆதரிப்பது போல இவர் இயங்கிவருகிறார். இவரின் தங்கையின் கணவரை யாழில் எம்.பியாக்க இவர் ஆசைப்பட, அதற்கு தன் பக்கம் இருக்கும் பலமான ஊடக்துறையை இவர் பயன்படுத்தி இருக்கிறார். வித்தியாதரனின் மைத்துனர் சரவணன். வித்தியாதரன் கொடுத்த அழுத்தம் காரணமாக சம்பந்தன் இவர் மைத்துனருக்கு யாழில் போட்டியிட பச்சைக்கொடி காட்டியுள்ளார்.

அதாவது தனது மைத்துனருக்கு சீட்டுக்கொடுக்காவிட்டல் உதயன் பத்திரிகை தமிழ் தேசிய கூட்டமைப்பை தாறுமாறாக எழுதும் என இவர் கூறியிருக்கிறார். யாழ்ப்பாணத்தில் ஒவ்வொரு கிராமம் கிராமமாகச் சென்று ஈ.பி.டி.பி யின் அச்சுறுதலுக்கு மத்தியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரச்சாரம் செய்வது கடினம். எனவே உதயன் ஆதரவு இருந்தால் அதை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என சம்பந்தன் கருதுகிறார். இதனால் 60,000 வாக்குகளுக்கு மேல் பெற்று எம்.பியான பத்மினி சிதம்பரநாதன், மற்றும் 1 லட்சம் வாக்குகளுக்கு மேல் பெற்று எம்.பியான கஜேந்திரன் போன்றோர் உதயன் பேப்பர் வித்தியாதரனுக்காக ஓரங்கட்டப்படுகிறார்கள்.

மகிந்த சரணம் கச்சாமி ! பாடும் சில எம்.பிக்கள்:

புலிகள் பலமாக இருந்த கால கட்டங்களில் அடிக்கடி கிளிநொச்சி செல்லும் சிவநாதன் கிஷோர் அவர்கள் அங்கு பல கலந்துரையாடலில் ஈடுபடுவதும் மதிய உணவு அருந்துவதும் வழக்கம். ஆனால் புலிகள் பலவீனமானதும் இவர் மகிந்த பக்கம் சாய்ந்துவிட்டார். 40,000 தமிழர்களை கொன்று குவித்த மகிந்தவை கட்டித் தழுவி ஆர்ப்பரித்தார் கிஷோர். செஞ்சோற்றுக் கடன் கூட இவருக்கு நினைவில் இல்லை. மகிந்தவின் கால்களைப் பிடித்து அரசியல் நடாத்தும் கேவலம். அத்துடன் தங்கேஸ்வரியும் சற்றும் கூச்சம் எதுவும் இன்றி மகிந்த சரணம் கச்சாமி பாடுகிறார். இலங்கையில் பணிபுரிந்த வேற்று இன வெள்ளைக்காரன் மகிந்தவை இனக் கொலையாளி எனக் கூறுகிறார், ஆனால் இவர்கள் இருவரும் மகிந்தவை தலையில் தூக்கி வைத்து ஆடுகிறார்கள், இவர்களும் ஒரு தமிழ் தாய்க்குத் தான் பிறந்தார்களா? என்ற சந்தேகமே இங்கு எழுகிறது.

எரியிற நெருப்பில் எண்ணையை வார்க்கும் புலம்பெயர் அமைப்புகள்!

இது இவ்வாறிருக்க பத்மினி, கஜேந்திரன் போன்றோரை தொடர்புகொண்ட சில முன்னணி பிரித்தானிய அமைப்புகள் அவர்களை தனிக் கட்சி ஒன்றை தொடங்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். அத்துடன் தாம் எவ்வளவு வேண்டும் என்றாலும் நிதியுதவி செய்யலாம் என இவர்கள் கூறியிருப்பதாக அதிர்வுக்கு செய்திகள் கசிந்துள்ளது. பிரிந்து நிற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பை ஒன்று சேர்த்து தமிழர்களின் பலத்தை உயர்த்துவதை விடுத்து எரியிற வீட்டில் கிடைத்தது லாபம் என பிடுங்க நினைக்கும் கூட்டம் வேறு...

கஜேந்திரன் பொன்னம்பலத்தின் கோரிக்கை நிராகரிப்பு!

இது இவ்வாறிருக்க கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கட்சிக்கு 2 ஆசனங்களை தான் தருவதாக சம்மந்தன் முன்னர் கூறியிருக்கிறார். தற்போது ஏற்பட்டிருக்கும் சிக்கலைப் போக்க தருவதாகச் சொல்லப்பட்ட அந்த 2 ஆசனங்களையும் பத்மினி, மற்றும் கஜேந்திரன் ஆகியோருக்கு கொடுக்குமாறு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சம்மந்தனிடம் கூற அதை சம்மந்தன் நிராகரித்துள்ளார். இதனையடுத்து இருவருக்குள்ளும் வாக்குவாதம் முற்றி தான் பிரிவதாக அவர் தெரிவித்துள்ளார்.

சிறிகாந்தா சிவாஜிலிங்கம் வேறு ஒரு உலகில் சஞ்சரிக்கின்றனர்!

இதனிடையே சிறிகாந்தா மற்றும் சிவாஜிலிங்கம் இருவரும் புதிதாக ஒரு கட்சியை ஆரம்பித்து சிறிகாந்தா தலைவர் எனவும் சிவாஜிலிங்கம் உபதலைவர் எனவும் அறிவித்துள்ளனர். ஏற்கனவே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட சிவாஜிலிங்கத்தை பற்றி பல விமர்சனங்கள் முன்வைக்கபட்டன. இந்நிலையில் இவர் சிறிதும் யோசிக்காமல் புதிய கட்சி ஒன்றை ஆரம்பித்துச் சென்றுள்ளார். இவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியே.

கடந்த தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் எம்.பி யாகப் போட்டியிடுமாறு புலிகள் சிலரை முன்மொழிந்தனர். அதில் அனைவரும் பெரு வாக்குகள் பெற்று எம்.பி யாகினர். ஆனால் அதில் பலரை தற்போது தமிழ் தேசிய கூட்டமைப்பு இம் முறை சேர்த்துக்கொள்ளவில்லை. மாறாக தமக்கு ஊடகத்துறையில் அனுசரணை வழங்கக்கூடிய சிலரை தமிழ் தேசிய கூட்டமைப்பு இம் முறை தேர்தலில் இறக்குகிறது.

உதாரணமாக ஐங்கரநேசன் இவர் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் போட்டியிடப் போவதாக தெரிகிறது. இவர் தினக்குரல் ஆசிரியர்களில் ஒருவர். அடுத்தது சரவணன் இவர் உதயன் பத்திரிகையின் பொறுப்பாளர்களில் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. யாழில் போட்டியிடும் இவர் போன தேர்தலில் பெருவாக்குகள் பெற்ற எம்.பிக்களை ஓரம் கட்டி அந்த வாக்குகளை தான் சூறையாட நினைக்கிறார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பில் இம் முறை போட்டியிடும் சிலர் விபரங்கள்:

சுரேஸ் பிரேமச்சந்திரன்
போ. ஐங்கரநேசன் - தினக்குரல்
சி.வி.கே. சிவஞானம்
வினாயகமூர்த்தி
ரெமாடியாஸ்
பேராசிரியர். சிவச்சந்திரன்
சரவணபவான் (சரவணன்) உதயன் பத்திரிகை
திருகோணமலை
சம்பந்தன்
துரைரட்னசிங்கம்
நாகேஸ்வரன் முன் நாள் ஈரோஸ் உறுப்பினர்
நடேசப்பிள்ளை
வவுனியா
சிவசக்தி ஆனந்தன்
செல்வம் அடைக்கலநாதன்
சூசைதாசன்

மற்றும் சிலரின் பெயர்கள் சம்பந்தன் ஐயாவுக்கே தெரியும். இது தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளகத் தகவல்கள் தெரிவித்த பட்டியல்.

விடுதலைப் புலிகள் இன்று பலமுடன் இருந்திருந்தால் இவ்வாறு நிகழுமா?

விடுதலைப் புலிகள் இன்று பலமுடன் இருந்திருந்தால் இவ்வாறு நிகழுமா என பல தமிழர்கள் கேட்பது நியாயமான கேள்வி. அவர்கள் தற்போது பலமாக இல்லாத காரணத்தால் தோன்றியுள்ள வெற்றிடத்தை சாதகமாகப் பயன்படுத்தி சுயநல சாக்கடை அரசியலை நடத்துகின்றனர் சிலர். உண்மையில் புலம்பெயர் தமிழர்களும் சரி ஈழத்தில் வசிக்கும் தமிழர்களும் சரி ஒன்றையே எண்ணுகின்றனர், எமக்கு எதிரியான சிங்களவனுக்கு பாடம் புகட்டவேண்டும் என்று. சிங்கள வல்லாதிக்கத்தில் இருந்து விடுதலை பெறவேண்டும் என்று,

எமது 33,000 மாவீரச் செல்வங்கள் மடிந்த மண்ணில் நின்றுகொண்டு சாக்கடை அரசியல் நடத்தவேண்டாம்! அவர்கள் சுவாசித்த காற்றைச் சுவாசிக்கும் நீங்கள் சிங்களவனுக்கு விலைபோக வேண்டாம், விடுதலைக்காய் இன்னுயிர் ஈந்த தன்னலமற்றவர்கள் வாழ்ந்த இடத்தில் இருந்து சுயநலத்திற்காய் வாழவேண்டாம்! புலிகளும் அதன் தலைமையும் தமிழர்கள் ஒற்றுமையாக வாழவேண்டும் என்பதை காட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பை உருவாக்கினர் என்பதை எவராலும் மறுக்க முடியாது, அவர்கள் விட்டுச் சென்ற இடத்தில் இருந்து நாம் தொடரவேண்டும்! எனவே ஒற்றுமையாய் வாழ இனியாவது தமிழன் முன்வரவேண்டும். சுய கௌரவத்தை விடுத்து இந்தியாவிடம் பல்லிளித்து அரசியல் நடாத்தும் தேவை எமக்கு இல்லை. அது எப்போது உணரப்படுகிறதோ, ஒற்றுமை எப்போது உருவாகிறதோ அப்போது தமிழன் விடிவு பிறக்கும்!

அதிர்வு

Comments