கே.பி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன் மகிந்தவிற்கு ஆதரவாக களமிறங்கியுள்ளார்

சிறிலங்காவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் கே.பி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன், உலகின் பல நாடுகளிலும் உள்ள தனக்கு நெருக்கமானவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி வருவதாக தெரியவருகின்றது.

தொலைபேசியூடாக தொடர்புகளை ஏற்படுத்தி வரும் இவர், மகிந்தவிற்கு ஆதரவான செயற்பாடுகளில் ஈடுபடுமாறு தனது ஆதரவாளர்களுக்கு கூறி வருவதாகவும், மகிந்தவின் சகோதரர் பசில் ராஜபக்சவுடன் இணைந்து பல நடவடிக்கையில் இவர் ஈட்டுபட்டு வருவதாகவும் தெரியவந்துள்ளது.

தற்போது புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள தனது முன்னாள் ஆதாரவளர்களை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், இவர்கள் மூலமாக மகிந்த ராஜபக்சவிற்கு எதிராக சர்வதேச ரீதியாக வலுப்பெற்றுவரும் எதிர்ப்பலைகளை தணித்து, புலம்பெயர்ந்த தமிழர்களின் மகிந்த அரசிற்கு எதிரான செயற்பாடுகளை தடுத்து நிறுத்தும் பணி ஒப்படைக்கப்பட்டிருப்பதாகவும் தெரியவருகின்றது.

அத்துடன், எதிர்வரும் சிறிலங்கா நாடாளுமன்றத் தேர்தலில் தமிழத் தேசியக் கூட்டடைப்பு சனாதிபதி தேர்தலைப் போன்று ஒருமித்து நின்றால், மகிந்த ராஜபக்சவிற்கு வடக்கு கிழக்கு மாநிலங்களில் வெற்றிவாய்ப்பு கிடைக்காது என்பதால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்தவர்களை அதிலிருந்து பிரித்தெடுப்பதுடன், சுயேட்சையாகப் பலரைக் களமிறக்கி, வாக்குகளை சிதறிடித்து வெற்றிவாய்ப்பை மகிந்தவிற்கு சாதகமாக திருப்புவதற்கும் இவர் நடவடிக்கையில் இறங்கியுள்ளதாகவும் தெரியவருகின்றது.

சுயேட்சையாக தேர்தல் களத்தில் குதிக்குமாறு இவர் தனக்கு நெருக்கமான பலருக்கு தொலைபேசி எடுத்து அழைப்பு விடுத்துள்ளதாகவும் அறியவந்துள்ளது. சிறிலங்கா இராணுவத்தின் உச்ச பாதுகாப்பில் இருப்பதாகக் கூறப்படும் ஒருவர் இவ்வாறு வெளிப்படையாக தொலைபேசி ஊடாகத் தொடர்பு கொள்ளத் தொடங்கியிருப்பது இவர் கடத்தப்பட்டது மற்றும் கைதானது தொடர்பான பலத்த சந்தேகங்களை தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

Comments