செங்கல்பட்டு ஏதிலிகள் மீதான தாக்குதல் – இந்திய சிறிலங்கா கூட்டுச்சதி

செங்கல்பட்டு ஏதிலிகள் முகாமில் இன்று காலை கலவரம் ஏற்பட்டிருக்கிறது. இந்த கலவரத்தின் போது காவற்துறையினர் கண்மூடித்தனமாக தாக்கியதில் 18 க்கும் மேற்பட்ட மக்கள் படுகாயமடைந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

ஆடியோ கேட்க இங்கே அழுத்தவும்

நன்றி: தமிழன் கலைக்கூடம்

தமிழகத்தில் இலங்கை அகதிகள் முகாமில் அண்மையில் அதாவது 02 /01 /2010 இல் நடத்தப்பட்ட காட்டு மிராண்டித்தனமாக தாக்குதல் மிகுந்த மன வேதனையை தமிழர்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது. இது தமிழகத்தில் உள்ள செங்கல்பட்டு இலங்கை அகதிகளுக்கான சிறப்பு முகாமில் நடைபெற்ற சம்பவம்.

இந்த சம்பவத்தை கண்டித்து, நாம் தமிழர் இயக்கத்தின் சீமான் மற்றும் பழ நெடுமாறன், இன்னும் சில இந்திய அரசியல்வாதிகளும் கண்டனங்களை தெரிவித்துள்ளதோடு பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன உதவி நடவடிக்கை எடுக்க முடியுமோ அதை உடனடியாக மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. இந்த சம்பவம் பற்றி பி பி சி மற்றும் சில சர்வதேச ஊடகங்களும் இது பற்றி செய்தி வெளியிட்டிருந்தன.

இந்த சம்பவம் நடக்க காரணம் என்ன? இதன் பின்னணி என்னவாக இருக்கின்றது, என்று எமது தமிழக உறவுகளின் உதவியோடு அறிய முயற்சி எடுத்தோம். இதன் பின்னணி சாதாரணமாக இருக்கவில்லை. இதன் பின்னணி இந்திய, இலங்கை கூட்டு சதியாக இருப்பது போல் இருக்கின்றது. இதற்கு கருணாநிதியின் அரசும் கூட்டாக இணைந்து கைகொடுப்பதாய் உணர்த்தும் இந்த தாக்குதல் தமிழகத்தின் மீது இருக்கும் இலங்கை தமிழர்களின் கொஞ்ச நம்பிக்கையும் இழந்து போக இது வழி வகுக்குமோ என்று எண்ணத் தோன்றுகின்றது.

உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது அதுவும் இரவில் இரண்டு பட்டாலியன் பொலிஸார் ஏவப்பட்டு முப்பத்திமூன்று தமிழர்கள் துவைத்து எடுக்கப்பட்டிருக்கின்றனர். அவர்களில் பதின்மூன்று பேர் படுகாயமுற்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஒரு ஜனநாயக நாட்டில் உண்ணாவிரதம் இருப்பது மாபெரும் குற்றமாக கணிக்கப்படுமா? சத்தியாக்கிரகங்களின் மூலமே இந்தியாவுக்கு சுதந்திரம் பெற்றுக் கொடுத்த மகாத்மா காந்தி பிறந்த நாடு. காந்தியின் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கின்றது. இங்கு அமைதியான முறையில் தமது கோரிக்கையை நியாயப்படுத்த உண்ணா நோன்பு இருந்தால் தடியடி நடத்தப்படுமா? ஏன் இந்தியாவின் ஜனநாயகத்திற்கு என்ன ஆகிவிட்டது. மாபெரும் ஜனநாயக நாட்டில் இது ஜனநாயகமா? என்னதான் அங்கே நடக்கின்றது?

உண்மையில் அந்த முகாமில் அடைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை. சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டவர்களே அங்கு அடைக்கப்பட்டுள்ளதாக சில மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். இவர்களை இன்னும் மன உளைச்சலுக்கு ஆளாக்காமல் பொது முகாம்களுக்கு மாற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

ஆனால் இந்த விடயங்களுக்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரி கூறுகையில், இவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களை பொது முகாங்களுக்கு வழக்குகள் முடிவடையும் முன்னர் மாற்ற முடியாது என்றும், செவ்வாய்க்கிழமை அதாவது மூன்றாம் திகதி கலகத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு பதின்மூன்று பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், மற்றையவர்கள் தொடர்ந்து அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். அவரின் கூற்றுப்படி அங்கிருந்து மக்கள் தப்பிக்க முயற்சித்த வேளை பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் மோதல் வெடித்ததாகவும் கூறியுள்ளார்.

ஆனால், உண்மையில் முகாமில் இருந்த மக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டதாகவும், அந்த போராட்டத்தை கைவிடும்படி பொலிஸாரினால் கேட்கப்பட்டதாகவும், ஆனால் மக்கள் தங்களின் கோரிக்கைகளுக்கு கியூ பிரிவு பொலிஸ் உத்தரவாதம் அளிக்கும் வரை தங்களின் போராட்டத்தை கைவிட மறுத்து விட்டதாகவும் அதன் பின்னர் மாலை ஆறு மணியளவில் பொலிஸ்துறையைச் சேர்ந்த இருநூறு பேர் முகாமுக்குள் புகுந்து அகதிகளை அடித்து துன்புறுத்தப்பட்டதாக முகாமில் எஞ்சியிருக்கும் அகதிகளுடன் நேரடியாக பேசியவர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை அரசின் விருப்பத்துக்கு அமைய காங்கிரஸ் ஆட்சிப்பீடம் கருணாநிதி அரசாங்கத்துக்கு அழுத்தங்களை பிரயோகித்து இந்த காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கையை இலங்கை தமிழர்கள் மீது தொடுக்கப்பட்டதாகவும், இது ஒரு உளவியல் ரீதியாக இலங்கையின் அரசாங்கத்தால் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பேசப்படுகின்றது.

அதன் காரணம் இந்தியாவில் இருக்கும் அகதிகளை மீளப் பெற இந்திய இலங்கை கூட்டு நடவடிக்கையின் ஒரு கட்டமே இது என்றும், இனிவரும் எதிர்காலங்களில் இன்னும் அதிகமான அழுத்தங்களை இலங்கை அகதிகள் மீது பிரயோகிக்கப்படலாம் என்று மக்கள் மத்தியில் அச்சம் நிலவுவதாய் சொல்லப்படுகின்றது…

இது எல்லாம் இருக்க தமிழக முதல்வர் கருணாநிதி இலங்கை தமிழர்களுக்காக மசோதா ஒன்றை இயற்றப்போவதாகவும், அதில் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு வழங்க இலங்கையிடம் மத்திய அரசு மூலமாக அழுத்தங்களை கொடுக்க தீர்மானித்திருப்பதாகவும் பி பி சி தமிழோசைக்கு செவ்வி ஒன்றில் கூறியிருக்கின்றார்.

ஆடு நனைகின்றது என்று ஓநாய் அழுகின்ற கதையாக உள்ளது.

இலக்கியன்

Comments