உலகப் பந்தி(யி)ல் தமிழீழம் – பாகம் 1

‘நாம் எவ்வளவு தியாகங்கள் செய்கிறோம் என்பது அல்ல முக்கியம். அத் தியாகங்கள் யாருக்கு சேவை செய்கின்றன என்பதுதான் முக்கியம்’ 1980 களின் பிற்பகுதியில் கைக்குக் கிடைத்த புத்தகம் ஒன்றின் முன்னுரையில் இவ்வாக்கியங்களைப் படித்த ஞாபகம். இது ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு அவர்கள் எழுதிய புத்தகமாக இருக்க வேண்டும்.

1987 ஆம் ஆண்டு யூலை மாதம் 29ம் நாள் இந்திய-இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு இந்திய இராணுவம் அமைதி காக்கும் படை எனும் பெயரில் தமிழீழ மண்ணில் நிலை கொண்டிருந்த காலத்தில்தான் இந்தப் புத்தகம் வெளியாகியிருந்தது.

நாம் செய்யும் தியாகங்கள் எமக்குச் சேவை செய்ய வேண்டும். அவை அந்நிய சக்திகளின் நலன்களுக்கு சேவை செய்பவையாக அமைந்து விடக்கூடாது என இம் முன்னுரை சுட்டி நின்றது.

எமது தியாகங்கள் எமக்குரிய சேவையினைப் புரிந்தவாறு ஏனையோருக்கும் சேவை புரியுமாயின் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ எனப் பரந்த மனப்பான்மையுடன் இதனை ஏற்றுக் கொள்ளும் பண்பு தமிழர் சமூகத்திடம் உண்டு.

ஆனால் எமது அளப்பரிய தியாகங்கள் ஏனைய சக்திகளின் நலன்கள் என்ற பூதத்தினால் விழுங்கப்படுமாயின் அதனை எவ்வாறுதான் சகித்துக் கொள்ள முடியும்?

இதேசமயம், பூதம் விழுங்குவதற்கு வாய்ப்புக்களைக் கொடுத்து விட்டு, விழுங்கிய பூதத்தின் வாய்க்குள்ளோ, வயிற்றுக்குள்ளோ நின்று ‘ஐயோ! எம்மைப் பூதம் விழுங்கி விட்டதே’ என்று அவலக்குரல் எழுப்புவதோ அல்லது ஆத்திரத்துடன் உறுமுவதோ என்ன பயனைத்தான் தந்து விட முடியும்?

தனது குஞ்சுகளைக் கொத்திச் செல்ல முயலும் பருந்திடமிருந்து அவற்றைப் பாதுகாக்கப் போராடும் தாய்க்கோழி; போலத்தான் வல்லரசுப் பருந்துகளையும் வல்லூறுகளையும் எதிர்த்துப் போராடும் சிறிய தேசங்களின் நிலையும் இருக்கும்.

இப் போராட்டத்தில் குஞ்சுகளைப் பாதுகாப்பதுதான் தாய்க்கோழியின் முதற்குறி. பருந்துக்கு ஏற்படுத்தும் சேதம் அல்ல. பல வேளைகளில் ஒரிரு குஞ்சுகளைப் பறிகொடுத்த போதும் ஏனைய குஞ்சுகளைத் தாய்க்கோழி எவ்வாறாயினும் பாதுகாத்து விடும். ஆர்ப்பரித்தெழுந்து போராடி, தனது இறக்கைகளால் குஞ்சுகளைப் பாதுகாத்து, பெரும் குரல் எழுப்பி மனிதர்களைத் துணைக்கழைத்து, பருந்தினைத் துரத்தி விடத் தாய்க்கோழி போராடும் விதம் இருக்கிறதே – இது சிறிய தேசங்களுக்கு தாய்க்கோழி கற்றுத் தரும் ஒரு இராணுவ, அரசியல், இராஜதந்திரப் பாடம்.

பருந்தும் தாய்க்கோழியும் கை கோர்த்ததை நிஜவாழ்வில் நாம் பார்த்ததில்லை. ஆனால் சர்வதேச அரசியலில் பருந்தும் தாய்க்கோழியும் கை கோர்ப்பதும் நடக்கும்.

தமிழீழத் தேசத்தின் சர்வதேசப் பரிமாணம் ஒரு வகையில் தாய்க்கோழியின் நிலைதான்.

தமது நலன்களுக்காக எமது நலன்களைப் பறித்துக் கொள்ள முயன்ற அனைத்துலகச் சக்திகளுடன்தான் தனது நலன்களுக்காக தமிழீழ தேசம் மோத வேண்டியிருந்தது. அதே சமயம் உறவும் வைத்துக் கொள்ள வேண்டியிருந்தது.

முள்ளிவாய்க்காலில் எமக்கு விழுந்த அடி, சிங்கம் அடித்த அடி மட்டுமல்ல. உலகப்பூதம் அடித்த அடியும் கூட.

சிங்கள இனவாத ஆட்சியாளர்களால் உலகை எவ்வாறு தன்வசப்படுத்த முடிந்தது? நாம் ஏன் தனித்து விடப்பட்டோம்?

உலகமெங்கும் வாழும் 80 மில்லியன் தமிழர்களை விட, 18 மில்லியன் சிங்களவர்கள் ஏன் உலகுக்கு முக்கியமாய்ப் போனார்கள்?

ஏன் எம்மால் நாம் கட்டி வளர்த்த நடைமுறை அரசைப் பாதுகாக்க முடியாமல் போனது? எமது விடுதலை இயக்கம் ஏன் முள்ளிவாய்க்காலில் மூச்சிழந்து போனது?

இதற்கெல்லாம் விரிந்த பரிமாணத்தில் உலகப்பந்தைப் புரட்டியும்தான் பதில் தேட வேண்டியுள்ளது. இதற்கு உலகப்பந்தில் தமிழீழத்தைப் பொருத்திப் பார்க்க வேண்டியுள்ளது.

1987 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் இரண்டாம் திகதி பிற்பகல்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், தளபதி கிட்டு, யாழ் மாவட்ட அரசியல் பொறுப்பாளர் திலீபன் உள்ளடங்கலான விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைமைக் குழுவினர் இந்திய இராணுவ விமானத்தில் பலாலி விமானத்தளத்தை வந்தடைகிறார்கள்.

இவ்வாறு வந்தடையும் இவர்களை களத்தில் விடுதலைப்புலிகளின் பிரதித் தலைவர் மாத்தையாவின் பொறுப்பில் இயங்கிக் கொண்டிருந்த விடுதலைப்புலிகள் அமைப்பிடம் சேர்ப்பிக்க வேண்டும் என்பதுதான் ஏற்பாடு.

இந்த நிகழ்வு சுதுமலையில்தான் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 1987 ஆம் ஆண்டு யூலை மாதம் நடுப்பகுதியில் சுதுமலையில் வைத்துத்தான், இந்தியப்பிரதமர் ராஜீவ் காந்தியின் அழைப்பின் பேரில் இவர்களை இந்தியாவின் வானூர்தி ஏற்றிச் சென்றது.

இந்திய-இலங்கை ஒப்பந்தம் தொடர்பாக ஏற்பட்ட முரண்பாடுகளால், பிரபாகரன் புதுடில்லியில் அசோகா விடுதியில் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்ற ஒரு தகவலும் பரவியிருந்தது.

இச் சமயம், ஒப்பந்தம் கையெழுத்தாகி இந்திய இராணுவம் அமைதிகாக்கும் படையாக வந்திறங்கத் தொடங்கியிருந்தது.

தலைவர் திரும்பி வரும்வரை இந்திய இராணுவத்துடன் ஒத்துழைக்க மாத்தையா மறுத்து விட்டார்.

‘எங்கு வைத்து ஏற்றிச் சென்றீர்களோ அந்த இடத்தில் வைத்தே தலைவரை எம்மிடம் ஒப்படையுங்கள். அதன் பிறகு பேசுவோம்’ எனத் தீர்க்கமாகக் கூறிவிட்டார்.

விடுதலைப்புலிகள் அமைப்பில் பிரதித் தலைவர் எனும் பொறுப்பு முன்னர் இருக்கவில்லை. இந்தியாவின் அழைப்பின் பேரில் இந்திய-இலங்கை ஒப்பந்தம் தொடர்பான பேச்சுக்களுக்குப் போக வேண்டிய சூழல் ஏற்பட்டு, தமிழீழ மண்ணை விட்டுப் புறப்படும் போதே பிரபாகரன் மாத்தையாவை பிரதித்தலைவராக நியமிக்கிறார்.

சில வேளைகளில் திரும்பிவர முடியாமல் போகலாம் என அவரது உள்ளுணர்வு கூறிக் கொண்டதே இதற்குக் காரணமாக இருக்கலாம். இந்தியாவின் அழுத்தங்களில் இருந்து தப்ப வேண்டும் என்பதற்காகவே 1987 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் இரகசியமாகப் படகு மூலம் தமிழ்நாட்டிலிருந்து பிரபாகரன் தமிழீழம் வந்திருந்தார். ஆனால் இந்தியா இவரை விடவில்லை.

தனது யுத்த விமானங்கள் மூலம் உணவு வீசும் ‘ஒப்பிறேசன் பூமாலை’ எனும் மென் இராணுவ நடவடிக்கையினை மேற்கொண்டு, சிறிலங்கா ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனாவைப் பணிய வைத்து, இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை இந்தியா தீர்மானித்தது. ஈழத் தமிழரின் முதன்மை விடுதலை இயக்கமாக இருந்த விடுதலைப் புலிகளுக்கு அதனைத் தெரிவித்து இவ்வொப்பந்தத்தை பின்பற்றுமாறு அறிவுறுத்த முனைந்தது. இதற்காகப் பிரபாகரன் ராஜீவ் காந்திக்குத் தேவைப்பட்டார்.

இந்தியாவின் அழைப்பை ஏற்றுச் சென்றால் தன்மீது மிகப் பெரிய அழுத்தம் வரும் என்பதும், போகாவிட்டால் அதன் விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கும் என்பதும் பிரபாகரனுக்கு நன்கு தெரியும். விடுதலைப்புலிகள் இந்தியாவை நிராகரிப்பதை என்ன காரணத்துக்காகவும் ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் தமிழ் மக்கள் அப்போது இருக்கவில்லை. களநிலையும் சாதகமாக அமையவில்லை.

‘ஒப்பிறேசன் லிபரேசன்’ எனும் பெயரில் வடமராட்சி ஆக்கிரமிப்பினை சிறிலங்காப்படைகள் மேற்கொண்டிருந்தன. நெல்லியடி இராணுவ முகாம் மீதான மில்லரின் தற்கொலைத் தாக்குதலுடன் கூடிய எதிர்த்தாக்குதல்களை விடுதலைப்புலிகள் நடத்தியிருந்தாலும்கூட சிறிலங்காவின் இராணுவபலம் மேலோங்கியிருந்த நிலை. இச் சூழலில், இந்தியாவின் கோபத்திற்கு ஆளாவதனைத் தவிர்க்க, இந்தியாவின் அழைப்பை ஏற்பதென்ற முடிவைப் பிரபாகரன் எடுக்கிறார். மாத்தையாவினைப் பிரதித் தலைவராக அறிவிக்கிறார்.

இந்தியாவில் நடந்த பேரங்களும் மாத்தையாவின் இறுக்கமான நிலைப்பாடும் இணைந்து தொழிற்பட பிரபாகரனை மீண்டும் தமிழீழத்திற்கு அனுப்பி வைக்கும் முடிவை இந்தியா எடுக்கிறது. இப் பின்னணியிலேயே இவர்கள் இந்திய இராணுவ விமானத்தில் பலாலிப் படைத்தளத்திற்கு வந்திறங்குகின்றனர்.

சுதுமலையில் பிரபாகரன்

பலாலித் தளத்திலிருந்து பிரபாகரன் சுதுமலைக்கு வந்து சேரும் பாதையின் இரு மருங்கும் விடுதலைப் புலிப் போராளிகள் அணிவகுத்து நிறுத்தப்படுகின்றனர். இப் பாதைப் பகுதியில் ஊரடங்கு உத்தரவும் விடுதலைப் புலிகளால் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. அனுதிப்பத்திரமின்றி போராளிகள் உட்பட எவரும் நடமாட முடியாது. பொட்டம்மான் கூட அனுமதிப்பத்திரம் இல்லாத காரணத்தால் தடுத்து நிறுத்தப்படுகிறார். இப்படி ஏற்பாடுகள் இறுக்கமாக இருந்தன.

பிரபாகரனின் பாதுகாப்புக்காகவே இந்த எற்பாடுகள் என்று கூறப்பட்டாலும் விடுதலைப் புலிகளின் முன்னெச்சரிக்கையை, போராளிகள் பலத்தை இந்திய இராணுவத்திற்கு உணர்த்த வேண்டும் என்பதும் புலிகளின் நோக்கமாக இருந்தது. பாதுகாப்புக் கவச வாகனங்களுக்குள் பிரபாகரனையும் ஏனையோரையும் உள்ளிருத்திக் கொண்டுவந்து சுதுமலையில் வைத்து புலிகளிடம் ஒப்படைத்தது இந்திய இராணுவம்.

தளம் திரும்பிய பிரபாகரன் அன்று மாலை முக்கியமான பொறுப்பாளர்களையும் போராளிகளையும் சந்திக்கிறார். இந்தியப் பிரதமருடன் நடைபெற்ற பேச்சுக்களையும் அங்கு நடைபெற்ற விடயங்களையும் சுருக்கமாக எடுத்துக்கூறுகிறார்.

‘எனக்கு முன்னால் இருக்கும் தெரிவு வளைவதா அல்லது முறிவதா என்பதே. நான் வளைவது என்ற முடிவை எடுத்துள்ளேன்’.

என இலங்கை இந்திய ஒப்பந்தத்துடன் இணைந்து போக தான் எடுத்திருந்த முடிவைக் கூறுகிறார்.

பல போராளிகளால் இம்முடிவினை ஜீரணிக்க முடியவில்லை. இலங்கை இந்திய ஒப்பந்தம்தான் தற்போது பேசப்படும் 13ம் திருத்தச் சட்டத்தின் அடிப்படை. இது தமிழீழ மக்களின் அரசியல் அபிலாசைகளை எந்த வகையிலும் எட்ட முடியாத வகையிலேயே வடிவமைக்கப்பட்டிருந்தது. இன்னும் முக்கியமாக இவ்வொப்பந்தத்தின்படி விடுதலைப் புலிகள் இயக்கம் தனது ஆயுதங்களைக் கையளித்து, சிறிலங்கா வழங்கும் பொதுமன்னிப்பை ஏற்று அரசியல் பாதைக்குத் திரும்ப வேண்டியிருந்தது.

இவை எல்லாவற்றிற்கும் பிரபாகரன் ஒப்புக் கொண்டார்.

சுதுமலையில் நடைபெற்ற கூட்டத்தில் ’இந்த ஒப்பந்தத்தை இனவாதப் பூதம் விழுங்கும் நாள் வெகு தொலைவில் இல்லை. தமிழ் மக்களின் பாதுகாப்பை இந்தியாவிடம் ஒப்படைத்து எமது ஆயுதங்களைக் கையளிக்கிறோம்’ என 1987 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 4ம் நாள் பிரகடனப்படுத்தியபோது கூடியிருந்த மக்கள் கைதட்டி வரவேற்றார்கள்.

ஓகஸ்ட் 5ம் திகதி ஆயுதங்களும் பலாலித் தளத்தில் வைத்து கையளிக்கப்படுகின்றன. ஜே. ஆரின் பொதுமன்னிப்புப் பட்டயத்தை யோகி பெற்றுக் கொள்கிறார்.

இம்முடிவை ஜீரணிக்க முடியாத மூத்த போராளி ஒருவர் பிரபாகரனிடம் செல்கிறார். மிகவும் உணர்ச்சிவசப்பட்டவராக இந்த முடிவோடு தன்னால் ஒத்துப் போக முடியவில்லை எனக் கூறுகிறார். அரசியல்ரீதியாகவும் உணர்வுரீதியாகவும் பல்வேறு காரணங்களை எடுத்துச் சொல்கிறார்.

பிரபாகரன் பொறுமையாக அதனைக் கேட்டுக் கொண்டிருந்துவிட்டு ‘அப்ப என்ன செய்யலாம்? நீ சொல்லு’ என உரிமையுடன் சொல்கிறார்.

‘எனக்கு வழி தெரியேலை. ஆனால் இந்த ஒப்பந்தத்தோடை சேந்து போக என்ரை மனம் இடம் தரேலை’ என அந்த மூத்த போராளி சொல்ல பிரபாகரன் சொல்கிறார்.

‘நீ இதை என்னிட்டை சொல்லலாம். நான் உதை மக்களிட்டை சொல்லேலாது. நான் ஒரு முடிவை எடுக்க வேணும்’.

இந்திய-இலங்கை ஒப்பந்தக் காலம், தமிழீழவிடுதலைப் போராட்டம் புவிசார் பிராந்திய அரசியல் அழுத்தங்களை உச்சமாகச் சந்தித்த காலகட்டம்.

இவ் அங்கத்தின் நோக்கம் இக்காலகட்ட நிகழ்வுகளை விபரிப்பதல்ல.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அனைத்துலகப் பரிமாணங்களை, இப் பரிமாணங்கள் இப் போராட்டத்திற்கு வழங்கிய சவால்களை, முள்ளிவாய்க்காலில் விடுதலைப்புலிகள் இயக்கம் முறியடிக்கப்படுவதற்கு இப் பரிமாணங்கள் வழங்கிய பங்களிப்பை, இப் பரிமாணங்கள் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை நசுக்கி விடாமல் பாதுகாப்பதில் நாம் அடைந்த தோல்வியை பற்றி ஆராய்வதே இவ் அங்கத்தின் நோக்கம்.

பிரபாகரன் எவ்வித விட்டுக் கொடுப்புக்களுமின்றி இலக்கில் உறுதியாக இருந்தமையால் அனைத்துலமும் சேர்ந்து அழித்து விட்டது எனக் கூறுவது மிக எளிமைப்படுத்தப்பட்ட விளக்கமாக இருக்கிறது.

இந்திய இலங்கை ஒப்பந்தம் திணிக்கப்பட்டபோது பல போராளிகளின் அதிர்ப்தியையும் மீறி பிரபாகரனால் வளைந்து போக முடிந்திருக்கிறது. பின்னர் கடந்து போகவும் முடிந்திருக்கிறது.

ஒரு போராட்டத் தலைவன், போராட்ட இயக்கம் வளைந்து போவதற்கும் பின்னர் கடந்து போவதற்கும் அதற்குரிய அகப்புறச் சூழலும், வெளியும் (space) இருக்க வேண்டும். அல்லது உருவாக்கப்பட வேண்டும்.

இந்திய இலங்கை ஒப்பந்த காலத்தில் வளைந்து போக முடிந்த பிரபாகரனால் பின்னர் முடியாமல் போனது ஏன்?

தமிழீழ விடுதலைப்போராட்ட காலத்தில் உலக ஒழுங்கில் ஏற்பட்ட மாற்றங்கள் போராட்டத்தின் போக்கை, அதன் வெற்றியின் சாத்தியப்பாட்டை எவ்வாறு பாதித்தன?

இவ்வுலக ஒழுங்கில் எமது போராட்டத்தைப் பாதுகாத்துக் கொள்ள முடியாமல் எம்மைத் தடுத்தவை எவை?

இவை எல்லாம் குறித்து நாம் ஆராய வேண்டியுள்ளது.

தொடரும்…

- தாமரை காருண்யன்

Comments