அலெக்ஸ் கடத்தப்பட்டாரா அல்லது காணமல் போயுள்ளாரா ?: சர்ச்சை

இந்தோனேசியாவின் மெரேக் துறைமுகத்தில் உள்ள படகில் உள்ள இலங்கை அகதிகளின் பேச்சாளர் அலெக்ஸ், கடந்த 2 நாட்களாகப் படகில் இல்லை என தெரிவிக்கப்படுகிறது. இவர் தலைமறைவாகியுள்ளார் எனச் சிலர் தெரிவிக்கின்றனர். இருப்பினும் இவர் இந்தோனேசிய அதிகாரிகளால் கடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகமும் வெளியிடப்பட்டுள்ள நிலையில், நாம் அவர்களை தொடர்புகொண்டு கேட்டபோது எடுத்த நேர்காணல் இணைக்கப்பட்டுள்ளது.



இந்தோனேஷியாவில் ஈழ அகதிகள் உண்ணாவிரதப் போராட்டம்


இந்தோனேஷிய தடுப்பு முகாமிலுள்ள ஈழ அகதிகள் 10 பேர் பெப்பிரவரி 22 ஆம் திகதியிலிருந்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த ஒரு வருடமாக தடுப்பு முகாமிலேயே அடைத்து வைக்கப்பட்டுள்ள இவர்கள் தங்களையும் கூடிய விரைவில் வேறு ஒரு நாட்டில் குடியேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர். இவர்களுக்குப் பின்னர் இந்தோனேஷிய கடலில் ஓஷியானிக் வைக்கிங் கப்பலில் தடுத்துவைக்கப்பட்ட 78 அகதிகளையும் வேறு நாட்டில் மீளக்குடியமர்த்துவதற்கு உலக நாடுகள் காட்டிய அக்கறை தற்போது இந்தோனேஷியாவில் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதிகள் மீது காட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது உண்ணாவிரதமிருந்து வருபவர்கள் உண்மையில் அகதிகள் தான் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஒருவர் பி.பி.சிக்கு பேட்டி வழங்கியபோது, தாம் கடந்த 22 ஆம் திகதியிலிருந்து உணவோ, நீரோ அருந்தாமல் உண்ணாவிரதம் இருப்பதாகவுன் இதனால் சிலரின் உடல்நிலை மோசமடைந்துள்ளதாகவும் கூறியதோடு, இதுகுறித்து தாம் தடுப்பு முகாம் அகதிகளுக்குத் தெரிவித்தும்கூட, சிகிச்சை அளிப்பதில் அக்கறை காட்டவில்லை என்றார். எனவே இன்றுமுதல் தாம் நீரை மட்டும் அருந்தி உண்ணாவிரதத்தைத் தொடர இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

Comments