நாம் தமிழர் இயக்க கொடி அறிவிப்பு மாநாடு

இயக்குநர் சீமானின் நாம் தமிழர் இயக்க அரசியல் கட்சிக் கொடி அறிவிப்பு,​​ பேரணி மற்றும் பொதுக்கூட்டம் வரும் ஏப்ரல் 10-ஆம் திகதி தஞ்சாவூரில் நடைபெறவுள்ளதாக நாம் தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சாகுல் ஹமீது தெரிவித்துள்ளார்.




இதுகுறித்து அவர் தெரிவித்தது:

ஈழத் தமிழர்களுக்கு பேரழிவு நடைபெற்றபோது இங்குள்ள பெரும்பாலான தமிழர்கள் அதைத் தடுக்க ஏதாவது செய்ய வேண்டும் என்று உணர்வுடன் இருந்தனர்.​ ஆனால்,​​ இங்குள்ள ஆளும்,​​ எதிர்க் கட்சிகள் தமது சொந்த நலனுக்காக நம்மை நம்பவைத்துக் கழுத்தறுத்து விட்டன.

உலகம் முழுவதும் தமிழர்களுக்கு இன்னல் ஏற்படும்போதெல்லாம்,​​ அதைத் தட்டிக் கேட்பதற்கு வலிமையான ஒரு இயக்கம் இல்லாத நிலை தமிழ்நாட்டில் உள்ளது.​ வேறு எந்த மாநிலத்திலும் இந்த நிலை இல்லை.

நாதியற்ற தமிழர்கள் என்ற குறையைப் போக்க தமிழ்நாட்டிலும்,​​ ஐரோப்பிய நாடுகள்,​​ கனடா மற்றும் உலக நாடுகளில் உள்ள தமிழர்கள் அனைவரையும் நாம் தமிழர் இயக்கத் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒன்றிணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

நாம் தமிழர் இயக்கத்தை அரசியல் இயக்கமாக அறிவிக்கும் மாநாடு மதுரையில் மே.​ 18-ல் நடைபெறவுள்ளது.​ அதன் முன்னோட்டமாக,​​ சீமான் தலைமையில் தஞ்சாவூரில் ஏப்ரல் 10-ல் இயக்கத்தின் கொடி அறிமுகம்,​​ பேரணி-​ பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.

இயக்கத்தின் கொடியாக இந்தியாவிலும்,​​ கடல்கடந்தும் பெருவெற்றியீட்டிய சோழப் பேரரசின் சின்னமான புலிக் கொடி,​​ அவர்களின் தலைநகராக இருந்த தஞ்சாவூரில் அறிமுகப்படுத்தப்படுகிறது.

எதிர்காலத்தில் தேர்தலில் நிச்சயமாகப் பங்கெடுப்போம்.​ ஆனால்,​​ வரும் தேர்தலில் போட்டிய எண்ணம் இல்லை.​ தமிழகம் முழுவதும் கட்சியின் அடித்தளத்தைப் பலமாக்கிய பின்னர்,​​ தேர்தலில் போட்டியிடுவோம்.

சாதிக் கட்சிகளிடம் பிரிந்து கிடக்கும் தமிழர்களை ஒண்றிணைக்கும் விடியலாக இவ் இயக்கம் இயங்கும் என்றார் சாகுல் ஹமீது.

மாநில ஒருங்கிணைப்பாளர்கள் வழக்குரைஞர் ஏ.​ நல்லதுரை,​​ மணி செந்தில்குமார்,​​ மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் வழக்குரைஞர்கள் வீரக்குமார்,​​ கருணாநிதி,​​ கும்பகோணம் வட்ட ஒருங்கிணைப்பாளர் தமிழ்வேந்தன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Comments