கூட்டமைப்பின் தீர்வுதிட்டம் என்ன? ஏன் இவ்வாறான பிளவு ஏற்பட்டது? – விளக்குகிறார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

தமிழ் தேசிய கூட்டமைப்பு கூறும் சமஸ்டி அடிப்படையிலான தீர்வு என்பதற்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னனி முன்வைக்கின்ற இரு தேசங்கள் ஒரு நாடு என்ற தீர்வுதிட்டத்திற்கும் என்ன வேறுபாடு என்பது பற்றியும் எவ்வாறு தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒற்றுமையை குலைக்ககூடாது என்பதற்காக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என்பது பற்றியும் கஜேந்திரகுமார் ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளித்தார்.

அவர் கூறிய கருத்துக்கள் வருமாறு:

சமஸ்டி அடிப்படையிலான தீர்வை புறக்கணிப்பதுடன் இரண்டு தேசங்கள் ஒரு நாடு என்ற கொள்கை அடிப்படையில் தீர்வு முன்வைக்கவேண்டும் என்பதே எமது தீர்வு யோசனையாகும். சமஸ்டி அடிப்படையிலான தீர்வென்பது தந்தை செல்வா காலத்திலேயே பொருத்தமற்றது என முடிவெடுக்கப்பட்டது

அதனை தொடர்ந்த முப்பது வருடகால ஆயுதபோராட்டத்தில் 150 000 இற்கும் மேற்பட்ட மக்களையும் போராளிகளையும் இழந்திருக்கிறோம். எனவே மீண்டும் பழைய இடத்திற்கே – 35 வருடங்களுக்கு முன்னே – செல்லமுடியாது. இந்தியா விரும்புகிறது என்பதற்காக நாம் எமது கொள்கைகளை மாற்றமுடியாது. ஆனால் இந்தியாவுடனும் மேற்குலகுடனும் இதனை விளக்ககூடிய பொருத்தமான கலந்துரையாடல்களை ஆரம்பிப்போம்.

எமது அடிப்படைக்கொள்கைகளை மாற்றாமல் நடைமுறைச் சாத்தியமான வழிமுறைகள் ஊடாக தமிழர்களுக்கான தீர்வுக்காகவும் தமிழர்களின் அபிவிருத்தி தொடர்பாகவும் சிந்திக்கவேண்டும்.

அதிகாரபகிர்வு என்பதும் சுயநிர்ணய உரிமை என்பதும் வெவ்வேறானவை. அதிகாரபகிர்வு என்று கூறிக்கொண்டு சுயநிர்ணய உரிமையை கதைக்கமுடியாது. சுயநிர்ணய உரிமை என்பது ஒரு தேசத்திற்கான உரிமை. கூட்டமைப்பானது சுயநிர்ணய உரிமை என்ற கோசத்தை பயன்படுத்திக்கொண்டு அதிகாரபகிர்வு பற்றித்தான் சொல்லிக்கொண்டிருக்கிறது.

கூட்டமைப்பில் பிளவு வருவதை தடுப்பதற்காக இரண்டு முக்கிய முயற்சிகள் மேற்கொண்டோம். முதலாவதாக அரசியல் தீர்வு தொடர்பாக முன்வைக்கப்படும் தீர்வுதிட்டம் எதுவும் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நான்கு கட்சி தலைவர்களின் ஏகமனதான ஆதரவுடன்தான் முன்வைக்கப்படவேண்டும் என்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும் என கேட்டோம். அதனை கூட்டமைப்பின் தலைமை ஏற்றுக்கொள்ளவில்லை.

இரண்டாவது முயற்சியாக அரசியல் தீர்வு திட்டம் பற்றி தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறாமல் விடுவோம். தேர்தல் முடிந்தவுடன் தீர்வுதிட்டம் பற்றி ஆராய்வோம் என கேட்டோம். அதற்கும் அவர்கள் உடன்படவில்லை. வேண்டுமானால் தேர்தலின் பின்னர் தீர்வுதிட்டம் முன்வைக்கும் போது நீங்கள் விலகிக்கொள்ளலாம் என கூறப்பட்டது. தேர்தல் காலத்தில் அவர்கள் சொல்லும் கருத்துக்களுக்கு மௌனமாகவிருந்துவிட்டு அதன்பின்னர் அவர்கள் தவறாக நடக்கிறார்கள் என்று சொல்வது சரியானதாகவிருக்காது.

இவ்வாறு அடிப்படை கொள்கைகளிலிருந்து அவர்கள் விலகிபோகிறார்கள் என்பதை தெளிவாக அறிந்துதான் நாம் விலகி தேர்தலில் போட்டியிடுகின்றோம். இதன்மூலம் அவர்களை மீண்டும் சரியான பாதைக்கு கொண்டுவரமுடியும் எனநம்புகின்றோம்.

- என தெரிவித்தார்.

தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் திருகோணமலையில் வைத்து வெளியிடப்பட்டுள்ள நிலையில், அங்கு இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் கூறிய கருத்துக்கள், தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் பற்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் கூறிய கருத்துக்கள் என்பன ஒலிவடிவில் இணைக்கப்பட்டுள்ளன.

Comments