பாரிஸ் - லா சப்பல் வர்த்தகர் பிரதேசத்தின் தமிழீழ ஆதரவுத் தளத்தைச் சிதைப்பதற்கான முயற்சியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது!

விடுதலைப் புலிகளின் களமுனைத் தோல்விக்குப் பின்னர், சிங்கள தேசத்தின் முழுக் கவனமும் புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தின் பக்கம் திரும்பியுள்ளது. ஈழத் தமிழர்களைத் தோல்வி மனப்பான்மைக்குள் நிரந்தரமாக வைத்து மேலாதிக்கம் செய்வதை மட்டுமே தீர்வாக வைத்திருக்கும் சிங்கள தேசத்திற்கு, புலம்பெயர் தமிழர்களின் எழுச்சியும், போர்க் குணமும் அதைத் தோற்கடிக்க வேண்டிய அவசியத்தை உருவாக்கியுள்ளது.

முள்ளிவாய்க்காலில் விடுதலைப் புலிகளின் ஆயுத பலத்திற்கு முடிவுரை எழுத எப்படியான தந்திரோபாயம் பிரயோகிக்கப்பட்டதோ, அதே விதமான தந்திரோபாய முன்னெடுப்புக்கள் புலம்பெயர் தேசங்களிலும் பிரயோகிக்கப் படுகின்றன. 'பிளவுகளை உருவாக்குவது', 'நம்ப வைத்துக் கழுத்தறுப்பது' என முள்ளிவாய்க்காலில் வெற்றிக்கு வழி கோலிய அதே தந்திரம் புலம்பெயர் தேசங்களிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதை நிறைவேற்றுவதற்குப் பெரும் தொகையான நிதியும் ஒதுக்கப்பட்டு, அதற்கான வழங்கல்களும் நடைபெற்று வருகின்றன.

புலம்பெயர் தேசத்தின் அரசியல் தளங்களாக உருவாகிவரும் மக்கள் அமைப்புக்கள் சிங்கள தேசத்தின் முதல் இலக்காகக் குறி வைக்கப்பட்டது. மக்கள் பேரவை, நாடு கடந்த தமிழீழ அரசு ஆகிய இரு அமைப்புக்களிடையேயும் பிளவுகளை உருவாக்கி மோத விடுவதன் மூலம் தனது இலக்கை அடைவதற்கான பல முயற்சிகள் சிங்கள அரசால் தொடர்ந்தும் மேற் கொள்ளப்பட்டு வருகின்றது. அதற்காகப் பலர் இந்த அமைப்புக்களினுள் ஊடுருவ விடப்பட்டுள்ளனர். இந்த இரு அமைப்புக்களும் ஒன்றை ஒன்று எதிர்க்கவும், ஒன்றுக்கெதிராக மற்றொன்றைப் போராடவும் தேவையான கருத்துருவாக்கங்களை இவர்கள் மூலமாக சிங்கள அரசு மேற்கொண்டு வருகின்றது. விடுதலைப் புலிகளிடமிருந்து கருணாவை விலைபேசி வாங்கிக் கொண்டது போல், இந்த அமைப்புக்களில் ஒன்றைச் சுவீகரிப்பதன் மூலம் புலம்பெயர் தமிழர்களின் நம்பிக்கையையும், தமிழீழ விடுதலைக்கான போராட்ட உணர்வையும் அழித்தொழித்து விட முடியும் என்ற நம்பிக்கையுடன் சிங்கள தேசத்தின் காய் நகர்த்தல்கள் அரங்கேறி வருகின்றன.

மேற்குலகின் ஜனநாயக முறைமைகளைப் பின்பற்ற முயலும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களான மக்கள் பேரவை, நாடு கடந்த தமிழீழ அரசு ஆகியவற்றால் மேற்கொள்ளப்படும் தேர்தல்களின்போதும் இந்த ஊடுருவல்களுக்கான சாத்தியப்பாடுகள் இலகுவாக்கப்பட்டுள்ளன. இதில், புலம்பெயர் தமிழர்கள் விழிப்பாக இருப்பது மிக, மிக அவசியமானதாகும். இலட்சியத்திற்கான பாதைகளில், துரோகிகளின் ஊடுருவல் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தியது என்பதை முள்ளிவாய்க்கால் பேரழிவு எமக்கு நன்றாகவே உணர்த்தியுள்ளது. அத்தகைய ஊடுருவல்கள் புலம்பெயர் தமிழர்களின் இலட்சியப் பயணத்திலும் ஏற்பட்டு விடக் கூடாது என்ற விழிப்புணர்ச்சி நம் அனைவருக்கும் ஏற்பட வேண்டும்.

இலங்கைத் தீவில், யார் ஆட்சிக்கு வந்தாலும், யார் மக்கள் பிரதிநிதியாக சிங்கள நாடாளுமன்றம் சென்றாலும் அங்கு ஈழத் தமிழர்கள் வாழ்வில் எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை. தமிழர்களுக்கான எந்தத் தீர்வுக்கும் சிங்கள அரசு உடன்படப் போவதும் இல்லை. சிங்களச் சட்டத்தின் துணை கொண்டு பிரிக்கப்பட்ட கிழக்கு வடக்குடன் மீண்டும் இணைக்கப்பட முடியாது என்று மகிந்தவால் அறிவிக்கப்பட்டு விட்டது. வடக்கே சிங்கள மேலாதிக்கமும், சிங்களக் குடி பரம்பலும் மிக வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. சிங்கள சிறி எழுத்தை எதிர்த்துப் போராடிய ஈழத் தமிழர்கள் தங்களது ஊர்களின் கோவில் விளம்பரப் பலகையிலும் சிங்களத்தை மட்டுமே பார்த்து, எந்தக் கருத்தும் தெரிவிக்க முடியாதவர்களாக மௌனமாக்கப்பட்டுள்ளனர்.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலை முன் நிறுத்தி, புலம்பெயர் தமிழர்களுக்கும் ஈழத் தமிழர்களுக்கும் இடையே சுவர் எழுப்பும் சிங்கள தேசத்தின் சதித் திட்டத்திற்கும் நம்மில் சிலர் விலை போயுள்ள கொடுமைகளையும் நாம் பார்க்கின்றோம். ஈழத் தமிழர்களின் விரக்தியும் மௌனமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 14 பிரதிநிதிகள் சிங்கள நாடாளுமன்றம் செல்லும் அதிர்ஸ்டத்தைப் பெற்றுக் கொடுத்துள்ளது. சிங்கள - இந்திய அழுத்தங்கள் மத்தியில் தமது பயணத்தை ஆரம்பித்துள்ள இவர்கள் இப்போதாவது புலம்பெயர் தமிழ் மக்களது பலத்தையும் தம்முடன் இணைத்துக் கொள்வதே ஈழத் தமிழர்களின் இலட்சியங்களை வென்றெடுப்பதற்கான ஒரே தெரிவாக உள்ளது. தமிழீழ மக்களுக்கான சக்திகள் ஒன்றிணைவதைத் தடுக்கும் சிங்கள தேசத்தின் சதிகளையும் நாம் தகர்க்க வேண்டியவர்களாக உள்ளோம். தமிழீழ விடுதலைத் தளத்தில் பணி புரியும் புலம்பெயர் தமிழ் சக்திகளுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உடனடியான தொடர்பாடல்களை உருவாக்கி, ஒருமித்த பாதையில் பயணிக்க வேண்டும் என்பதே புலம்பெயர் தமிழர்களின் அவாவாக உள்ளது.

தமிழீழ மக்களுக்கும் புலம்பெயர் தமிழர்களுக்கும் இடையே சுவர் எழுப்ப முயன்ற சக்திகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் புலம்பெயர் சமூகத்திடமிருந்து விலக்கி வைக்கவே முற்படுகின்றனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதனைப் புரிந்து கொண்டு தனது பயணத்தை நேர்படுத்த வேண்டும். புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தின் போராட்ட வியூகங்களின் பெறு பேறுகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் விடுதலைப் பயணத்திற்கு உரம் சேர்ப்பதாக அமைய வேண்டும். இல்லையேல் சிங்கள - இந்திய நிகழ்ச்சி நிரலுக்குள் தமிழ்த் தேசியம் சிதைக்கப்படுவதைத் தடுக்க முடியாது போய்விடும்.

நாங்கள் எதிரியின் பலத்தைப் புரிந்து கொள்வதுடன், எங்களது பலவீனங்களையும் சரி செய்து கொண்டால் மட்டுமே தமிழ்த் தேசியத்தைச் சிதைவின்றி வென்றெடுக்க முடியும். புலம்பெயர் தேசத்தைப் பொறுத்தவரை சிங்கள தேசம் தமிழர்களின் ஒற்றுமையைச் சிதைப்பதில் முழுக் கவத்தையும் செலுத்துகின்றது. தமிழர்களுக்கான அமைப்புகளில் ஊடுருவுவதன் மூலம் அந்த அமைப்புக்களின் விடுதலை ஆதரவுத் தளத்தை சிதைப்பதற்கான நிதியூட்டல்களும் நடைபெற்று வருகின்றன. பாரிஸ் - லா சப்பல் வர்த்தகர் பிரதேசத்தின் தமிழீழ ஆதரவுத் தளத்தைச் சிதைப்பதற்கான முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழ்த் தேசியத்திற்கெதிரான கருத்துருவாக்கங்களை மேற்கொள்வதற்கும், தமிழ்த் தேசியத்திற்கான ஜனநாயகக் கட்டமைப்புக்களுக்கான நிதி மூலங்களைத் தடுத்து நிறுத்துவதற்குமான சில முயற்சிகள் வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த அபாயகரமான நிலமைகளை நாம் அனைவரும் புரிந்து கொண்டு, எமக்காக வகுக்கப்பட்ட பாதையில் தொடர்ந்து பயணிப்பதே எமது வரலாற்றுக் கடமையாக உள்ளது. தமிழீழ மண்ணில் சிங்கள தேசத்தால் தோற்கடிக்கப்பட்டு, உரிமைகள் மறுக்கப்பட்டு, அடிமைகளாக்கப்பட்டுள்ள எமது மக்களை மீட்கும் கடமையிலிருந்து எங்களில் யாரும் தவறிவிட முடியாது. அப்படித் தவறிச் செல்ல முற்படுபவோமானால், எம்மை வரலாறு மன்னிக்காது.

- பாரீஸ் ஈழநாடு.

Comments