வன்னி படுகொலையை சுனாமியாக்க திட்டம்

வன்னியில் இறுதி யுத்தத்தின் போது கொல்லப்பட்ட அப்பாவி தமிழ் மக்களின் படுகொலைகளை மூடிமறைப்பதற்கான முயற்சிகள் அரசாங்கத்தினால் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

வன்னியில் புதுமாத்தளன் முதல் முள்ளிவாய்க்கால் வரையான பகுதிகளில் முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா.சபைத் தகவல்கள் உறுதிப்படுத்தியிருந்தன.

இந்த நிலையில் அந்தப் பகுதிகளில் கொல்லப்பட்ட மக்களது உயிரிழப்புக்களை சுனாமி பேரலைத் தாக்கத்தின் போது கொல்லப்பட்டதாக பதிவினை மேற்கொள்ளுமாறு மக்கள் நிர்ப்பந்திக்கப்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வவுனியா நலன்புரி நிலையங்களில் உள்ள அனைத்து அதிகாரிகளுக்கும் இதற்கான கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், முகாம்களுக்கு பொறுப்பான குறிப்பிட்ட அதிகாரிகள் கிராம அலுவலர்கள் மூலம் மக்களது உயிரிழப்புக்களைப் பதிவு செய்யும் போது சுனாமியின் போது உயிரிழந்தாக பதிவினை மேற்கொள்ளுமாறு நிர்ப்பந்தித்து வருவதாகவும் முகாம்களில் உள்ள மக்கள் தெரிவித்திருக்கின்றனர்.

சர்வதேச ரீதியாக நெருக்கடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற இன்றைய சூழலில் வன்னிப் போர்க்குற்றங்களை மூடி மறைப்பதற்கான முனைப்புக்களில் இதனையும் ஒன்றாக இலங்கை அரசு மேற்கொள்வதாக அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

Comments