நாடு கடந்த தமிழீழ அரசு - தமிழர்களின் அடுத்த இலக்கு

uruthra_thalaivarதற்போது நாடு கடந்த தமிழீழ அரசுக்கான தேர்தல்கள் பெரும்பாலான நாடுகளில் எதிர்வரும் மேமாதம் இரண்டாம் திகதி நடைபெறவுள்ளது. தமிழீழ அரசுக்கான தேர்தல் என்பது நாடு கடந்தநிலையில் புலத்துவாழ் தமிழர்களால் நடத்தப்படுகின்றது. தமிழீழ விடுதலைப் புலிகளின் சட்ட ஆலோசகராக செயற்பட்ட வி. உருத்திரகுமாரன் அவர்களின் நெறிப்படுத்தலில் நாடு கடந்த தமிழீழ அரசுக்கான வேலைத்திட்டங்கள் நடந்துவருகின்றன.

புலத்து தமிழர்களிடையே நடத்தப்பட்டுவரும் வட்டுக்கோட்டை தீர்மானத்தின் வலுவுடமையை பரிசோதிப்பதுவும் நாடு கடந்த தமிழீழ அரசு என்பதுவும் ஒரு நேர்கோட்டில்தான் பயணிக்கின்றதா? நாடுகடந்த தமிழீழ அரசு என்ற கட்டமைப்பு தாயகத்தமிழர்களுக்கும் புலத்து தமிழர்களுக்கும் இடையில் எவ்வாறான மாற்றத்தை கொண்டுவரவுள்ளது? அவ்வாறான கட்டமைப்பு மூலம் தமிழர்கள் சாதிக்கப்போவது என்ன? என்பது போன்ற வினாக்களுக்கான விடைகளை தேடுகின்றது இப்பத்தி.



கடந்த வருடம் தமிழர்களின் நடைமுறை அரசு முற்றாக அழிந்து கொண்டிருந்தபோது தமிழர்களின் போராட்டத்தின் நியாயத்தையும் தமிழீழம் என்பது தனியே தமிழீழ விடுதலைப் புலிகளின் கோரிக்கையல்ல என்பதையும் அது ஒட்டுமொத்த தமிழர்களின் கோரிக்கை என்பதையும் வெளிப்படுத்துவதற்காக சனநாயக ரீதியாக சர்வதேச சமுதாயத்திற்கு வெளிப்படுத்தவேண்டிய தேவை எழுந்தது.

எனவேதான் 1976 இல் அனைத்து தமிழ் கட்சிகளாலும் முன்வைக்கப்பட்டு 1977 இல் அனைத்து தமிழ் மக்களாலும் மக்களாணை வழங்கப்பட்ட வட்டுக்கோட்டை தீர்மானத்தை மீளுறுதிப்படுத்தும் வாக்கெடுப்பு பற்றி ஆராயப்பட்டது. அதன் முடிவாக மேமாதம் 10 ஆம் திகதி நோர்வேயில் வட்டுக்கோட்டை தீர்மானத்திற்கான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து பத்து வரையான நாடுகளில் இவ்வாறான வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.

முன்னர் 1977 ஆம் ஆண்டில் தமிழ் மக்களால் வழங்கப்பட்ட மக்களாணையின் படி அன்றைய இளைய சமுதாயத்திடம் அதனை நிறைவேற்றுவதற்கான பொறுப்பு வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து முப்பதாண்டுகளுக்கு மேலாக தொடர்ந்த ஆயுத போராட்டமும் அதனூடாக கட்டமைக்கப்பட்ட நடைமுறை தமிழீழ அரசையும் தமிழ் மக்கள் கண்டு மகிழ்ந்தார்கள்.

ஆனாலும் அவ்வாறு கட்டமைக்கப்பட்ட தமிழீழ அரசு அழிக்கப்பட்ட நிலையில் மீளவும் அதே நோக்கத்தை அடைவதற்காக சனநாயக ரீதியான போராட்டங்களை முன்னெடுக்கும் இன்னொரு பரிணாமத்தில் நாம் இப்போது புகுந்துள்ளோம்.

அவ்வாறான கட்டமைப்புக்களை நிறுவும்போது அதனை மக்களிடமிருந்து ஆணையாக பெற்று நிறுவும்போது அதற்கான வலுவுடமை பாதுகாக்கப்படுவதோடு சர்வதேச சமூகத்தின் முன்கொண்டுசெல்வது இலகுவாக்கப்படும்.

எனவே ஆரம்பத்தில் தனித்தனியாக சமாந்தரமாக பயணித்த வட்டுக்கோட்டை தீர்மானத்தை மீளுறுதிப்படுத்தும் தேர்தல் பணிகளும் நாடு கடந்த தமிழீழ அரசுக்கான கட்டமைப்புக்களும் ஒரு நேர்கோட்டில் வருவது தவிர்க்கமுடியாதது.

வட்டுக்கோட்டை தீர்மானத்தை மீளுறுதிப்படுத்தும் தேர்தலை தொடர்ந்தே நாடுகடந்த தமிழீழ அரசுக்கான கட்டமைப்புக்கள் உருவாக்கப்படவேண்டும். அதுவே அதற்கான வலுவுடமையை பெற்றுத்தரும். அதுவே அக்கட்டமைப்பானது குறித்த நாட்டிலும் செயற்படுவதற்கான சனநாயக அடித்தளத்தை, சனநாயக உரிமையை தரும்.

வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை மீளுறுதிப்படுத்தி அதன் அடித்தளத்தில் நாடு கடந்த தமிழீழ அரசுக்கான தேர்தல்களை நடத்தி குறித்த எண்ணிக்கையான பிரதிநிதிகளை தெரிவுசெய்வதுபோல நாடு தழுவிய ரீதியில் உள்நாட்டு அலுவல்களை மேற்கொள்ள தமிழர் அவைகள் உருவாக்கப்படவேண்டும். அவ்வாறான தமிழர் அவைகளும் நாடுகடந்த தமிழீழ அரசுக்கான பிரதிநிதிகளும் ஒன்றோடு ஒன்று இணைந்ததாக ஒன்று மற்றொன்றின் பகுதியாக அமையவேண்டும். அப்போதுதான் வினைத்திறனுள்ள கட்டமைப்பாக, சர்வதேச ரீதியாக திட்டமிடும் பணிகளை நிறைவேற்றக்கூடிய வலுவைக் கொண்டதாகவும், மக்களின் கருத்துக்களை மேல்மட்டத்திற்கு கொண்டுசெல்லும் கருவியாகவும் அது அமையும்.

அதேவேளை நாடு கடந்த நிலையில் அமைக்கப்படும் அரசானது சொந்த நாட்டில் வாழும் மக்களின் விருப்புக்களையும் பிரதிபலிப்பதாக இருக்கவேண்டும். அடக்கப்பட்ட மக்களாக இருக்கின்ற தாயகமக்களின் விருப்புக்கள் என்பது வெளியில் சுதந்திரமாக சொல்லமுடியாத சூழ்நிலை இருக்கின்றமையால்தான் நாடு கடந்த அரசுக்கான தேவையே எழுகின்றது.

எனவே நாடு கடந்த தமிழீழ அரசை பொறுத்தவரை புலத்தில் வாழும் பெரும்பாலான மக்களின் அபிலாசைகளை பிரதிபலிக்கின்ற ஒரு கட்டமைப்பாகவும் தமிழர்களின் அடையாளத்தை சர்வதேச சமூகத்திற்கு கொண்டுசெல்லும் ஊடகமாகவும் இருக்கவேண்டும். இக்கட்டமைப்புக்கு சர்வதேச அங்கீகாரத்தை பெற்றுக்கொள்வதன் ஊடாகவே தாயக மக்களின் வெளிப்படையான ஆதரவையும் பெற்றுக்கொள்ளமுடியும்.

நாடு கடந்த தமிழீழ அரசு என்ற அடிப்படையானது புதுமையான விடயமல்ல. உலகில் ஏற்கனவே தமது சொந்த நாட்டில் இறையாண்மையை நிலைநிறுத்தமுடியாத தேசங்கள் இவ்வாறு நாடு கடந்த நிலையில் அரசுக்கான கட்டமைப்புக்களை வரித்துக்கொண்டுள்ளன. அவற்றின் பல பொதுப்பண்புகளை உள்ளடக்கியதாகவே நாடு கடந்த தமிழீழ அரசும் அமையவுள்ளமை சர்வதேச நியமங்களை உள்வாங்கிய கட்டமைப்பாக மிளிர உதவும்.

ஈழத்தமிழர்களின் இனஅடையாளங்களை வெளிப்படுத்துகின்ற அதேவேளை தேசிய அடையாளங்களையும் உறுதியாக அடையாளப்படுத்தவேண்டும். அப்போதுதான் அது புலத்துதமிழர்களின் ஆதரவைபெற்ற முழுமையான நாடு கடந்த அரசாக அமையும்.

ஈழத்தமிழர்களின் மூன்றிலொரு பகுதியினர் புலத்து தேசத்தில் வாழ்கின்ற வேளையில் புலத்திலே அமைக்கப்படுகின்ற இவ்வாறான கட்டமைப்பு தாயகத்திலே இருக்கின்ற குரலடங்கிப்போயுள்ள மக்களின் குரலை உயர்த்துவதற்கும் உறுதிப்படுத்தவும் வாய்ப்பாகவும் அமையவேண்டும்.

நாடு கடந்த தமிழீழ அரசுக்கான கொள்கைகளில் மாறுபாடான கருத்துக்களை அலசி ஆராய்ந்து விவாதித்து அனைவரும் இணைந்து முழுமையான கட்டமைப்பாக்க உழைக்கும்போதே அதன் உண்மையான பரிணாமத்தை நாடு கடந்த தமிழீழ அரசு பெற்றுக்கொள்ளும். அதனைவிடுத்து எடுத்தோம் கவிழ்த்தோம் என சிறிய விடயங்களை பெரிதாக்கி சேறு பூசுவது தமிழர்களின் ஒருமுகப்பட்ட சக்திக்கு சவாலாக அமைந்துவிடும்.

எனவே அனைத்து தமிழர்களும் கூடி, அலசி ஆராய்ந்து, தமிழர்களுக்கு அவசிய நகர்வாக உள்ள நாடு கடந்த தமிழீழ அரசை உருவாக்கும் பணியில் இணைந்துகொண்டு தமிழீழ இலட்சியத்தில் பயணிப்பதே தாயகத்தில் உள்ள மக்களின் ஏக்கங்களுக்கு ஓரளவு ஆறுதலை தரும்.

Comments