திரு. உருத்திரகுமாரன் அவர்களை முன்நிறுத்தி 'காமடி' பண்ண முயற்சிக்கிறார் தொல்காப்பியன்!

யார் தொல்காப்பியன்...? தெரியாது!, அவர் எங்கே இருக்கிறார்...? தெரியாது!, அவர் போராளியா...? தளபதியா...? புதிய தலைவனா...? தெரியாது! அவர் மனிதனா...? மாயாவியா...? தெரியாது!

தெரியாது...! தெரியாது...! தெரியாது...!

யாரிடம் கேட்டாலும் அதுதான் பதில்!

முகம் தெரியாது! முகவரி தெரியாது! பெயர் தெரியாது! எதுவுமே தெரியாது!

"தமிழீழத் தேசியத் தலைவரின்" "இலட்சியத்தை" விலைபேசத் துணிந்துள்ள: “அனைத்துலகத் தொடர்பகம்”.................. ?


-தொல்காப்பியன்-
இன்போ தமிழ்
ஆனாலும் தொல்காப்பியன் என்ற பெயரில் புலம்பெயர் தமிழர்களைக் குழப்ப முயல்கிறார். குழப்பங்கள் தெளிந்து ஒரு தீர்மானத்திற்கு வந்துவிட்ட திரு. உருத்திரகுமாரன் அவர்களையும் குழப்ப முயல்கிறார். அவரை முன்நிறுத்தி 'காமடி' பண்ண முயற்சிக்கிறார்.

''நாடு கடந்த தமிழீழ அரசும், மக்கள் பேரவையும் சிங்கள இனவாதத்தைக் குறிபார்க்கும் இரட்டைக் குழல் துப்பாக்கி'' என்று நாடு கடந்த தமிழீழ அரசின் இணைப்பாளர் திரு. உருத்திரகுமாரன் அவர்கள் ஆணித்தரமாகத் தெரிவித்த மறுநாள், தொல்காப்பியனின் உளறல்கள் இரு இணையத் தளங்களில் வெளிவந்துள்ளது.

இவரது முதலாவது குறி மக்கள் பேரவையா? நாடு கடந்த தமிழீழ அரசா? என்பதே குழப்பமாக உள்ளது. தமிழீழ மக்களது தேசிய ஆன்மாவும், நேசிப்பிற்குரிய தேசியத் தலைவரும், தமிழீழத்தின் சூரியத் தேவனுமாகிய பிரபாகரன் அவர்களது இருப்பை மறுதலித்து மக்கள் பேரவையினர் மீது தாக்குதலைத் தொடுத்துள்ள இவர், அடுத்து 'ராஜபக்ஷ சகோதரர்கள் கைகளில் உள்ள கே.பி. அவர்களே ஈழத் தமிழர்களின் ஒரே தலைவன்' என்று நாடு கடந்த தமிழீழ அரசின் இணைப்பாளர் திரு. உருத்திரகுமாரன் அவர்களது தலைமைக்கும் குறி வைத்துள்ளார்.

தேசியத் தலைவர் அவர்களது கட்டளையையும் வழிகாட்டலையும் ஏற்றே விடுதலைப் புலிகள் களத்தில் போராடினார்கள். இன்று, புலம்பெயர் தமிழர்கள் புலத்தில் போராடி வருகின்றார்கள். இந்த இரண்டு தளங்களிலும் தேசியத் தலைவர் குறித்த விமர்சனங்கள் எங்கே முக்கியப்படுகின்றது? தேசியத் தலைவர் அவர்களது ஆணையை மீறி யார் செயல்படுகிறார்கள்? தேசியத் தலைவர் அவர்களது இலட்சியக் கனவு எங்கே சிதைக்கப்படுகின்றது? அனைத்தும் தொல்காப்பியனுக்கே வெளிச்சம்.

கடந்த வருடம் மே மாதம் 24 ஆம் திகதி விடுதலைப் புலிகளின் அனைத்துலகங்களுக்கான தொடர்பாளரான கே.பி. என்று அழைக்கப்பட்ட குமரன் பத்மநாதன் அவர்கள் ''தமிழீழ மக்களின் விடுதலைக்காகவும், செழுமையான எதிர்காலத்திற்காகவும் தனது வாழ்நாளை அர்ப்பணித்து போராடிய தமிழீழ தேசியத் தலைவரும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவரும் தலைமைத் தளபதியுமாகிய மேதகு வே.பிரபாகரன் அவர்கள் சிங்கள ஆதிக்கப்படைகளுடனான போரில் வீரச்சாவினை தழுவியுள்ளார் என்பதை அனைத்துதமிழீழ மக்களுக்கும், தமிழக மக்களுக்கும், புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களுக்கும், சர்வதேச சமூகத்திற்கும் தாங்கொண்ணா துயருடன் அறியத்தருகின்றோம்'' என்று ஒரு வெடிகுண்டைத் தூக்கிப் போட்டவர், தன்னைத் தானே விடுதலைப் புலிகளின் தலைவராகவும் அறிவித்துவிட்டார். அந்தத் தகவல்களை, அவரது நிதி வழங்கலில் உருவாக்கப்பட்டதாக நம்பப்படும் ஜி.ரிவி கண்ணீர் அஞ்சலியாக ஒளிபரப்பியது. புலம்பெயர் தமிழ் மக்கள் இதனை நம்பவில்லை. ஆத்திரம் கொண்ட மக்கள் ஜி.ரிவி. தொலைக்காட்சி நிலைய அலுவலகங்களைத் தாக்க ஆரம்பித்தார்கள். நிலமையின் விபரீதத்தைப் புரிந்துகொண்ட ஜி.ரிவி., அந்தச் செய்தி தவறானது என மக்களிடம் மன்னிப்புக் கோரிய பின்னரே மக்களது ஆவேசம் அடங்கியது.


இந்த நிகழ்வு தொல்காப்பியன் குறிப்பிடும் அனைத்துலகத் தொடர்பகத்தாலோ, அப்போது உருவாகியிருக்காத மக்கள் பேரவைகளாலோ நடாத்தப்படவில்லை. அது மக்களிடம் இயல்பாக எழுந்த கோபாவேசம். அது, தேசியத் தலைவர்மீது சிறு துரும்பு வீழ்ந்தாலே தாங்கிக்கொள்ளும் இதயம் இல்லாத தமிழ் மக்களது பேரெழுச்சி. தேசியத் தலைவர் அவர்களை மரணிக்க வைக்கவும், மறைய வைக்கவும் சிங்கள தேசத்தாலும், ஒட்டுக் குழுக்களாலும் மட்டுமே சாத்தியமாகலாம். தேசிய சக்திகளால் அது எப்போதுமே முடியாது. எங்கள் சூரியத் தேவனை எவனும் தன் கரம் கொண்டு மறைக்க முடியாது. தமிழீழ மக்கள் மட்டுமல்ல, உலகத் தமிழ் மக்களும் காத்திருக்கிறார்கள், எங்கள் சூரியத் தேவனின் மீள் வருகைக்காக. அது புரியாமல் யாரும் அவர்களது காத்திருப்பைக் கலைக்க நினைத்தால், அவர்கள் தீயாகி எரித்து விடுவார்கள்.

தொல்காப்பியன் அவர்களே.., மறைந்திருந்து அம்பெய்தும் மாவீர இராமனே...! வெளியே வாருங்கள்... உங்களால் முடிந்தால் இதை எமது மக்களிடம் நீங்களே, உங்கள் முகம் காட்டி எடுத்துச் சொல்லுங்கள்... அப்போது உணர்வீர்கள் எங்களது சூரியத் தேவனின் பலத்தை. தமிழ் மக்கள் தங்களுக்குள் தேடும் சூரியத் தேவனை நீங்கள் எங்கெங்கெல்லாமோ தேடுகிறீர்கள்... நாங்கள் யாரும் தேடவில்லை... நாங்கள் தொலைத்தால்தானே தேடுவதற்கு... நாங்கள் காத்திருக்கிறோம்... எங்கள் சூரியத் தேவனின் வருகைக்காகக் காலம் முழுவதும் காத்திருப்போம்...! மரணமே இல்லாத மாபெரும் சக்திக்கு மனிதர்களால் மரணச் சான்றிதழ் வழங்கிவிட முடியாது. இப்போதும் தவிக்கின்றன... சிங்களம், இந்தியா... என அத்தனை தேசங்களும் இப்போதும் தங்களைக் கிள்ளிப் பார்த்துக் கொள்கின்றன. ஆனாலும், உங்கள் தாகம் தீரவில்லை... ஆம்! கே.பி.ஐ தலைவனாக்குவதற்கு எங்கள் தேசியத் தலைவனுக்கு அஞ்சலி செலுத்தும் உங்கள் ஆசை தீரவில்லை...!

எங்கள் தேசியத் தலைவருடன் அணிவகுத்து நிற்கும் எங்கள் தமிழர்களின் ஒற்றுமையை யார் குலைத்தார்கள்...? நாங்கள் எப்போது பிரிந்து நின்றோம்...? உங்களில் சிலரைத் தவிர... நாங்கள் யாரும் அன்னியமாகி நிற்கவில்லையே... பாருங்கள்... வரும் மே 18 ஐ... எங்கள் பலம் புரியும் உங்களுக்கு...

நீங்கள் எங்கே போனீர்கள்...? முள்ளிவாய்க்கால் போர்க்கள நாட்களில் நாங்கள் வீதிகளில் இறங்கி, குளிரிலும், பனியிலும், மழையிலும், குடும்பம், குடும்பமாக நின்று கூவி அழுதோமே... அப்போது எங்கே போனீர்கள்...? வீதி மறியல் செய்து இந்த நாடுகளின் சிறைக் கூடங்களை நிரப்பினோமே... நீங்கள் எங்கே போனீர்கள்..? இன்றும், உங்கள் முகம் காட்டாமல்... பெயர் கூறாமல்... இடம் காட்டாமல்... ஏதேதோ எல்லாம் எழுதுகிறீர்களே... வாருங்கள் மே 18 இற்கு... நாங்கள் யார் என்பது புரியும்... எங்கள் தலைவனின் ஆணையை ஏற்றுக் களம் நிரப்பும் தமிழர் படையின் பலம் தெரியும்...!

நீங்கள் யார்... எங்கே இருக்கின்றீர்கள்...? தேசியத் தலைவர் அவர்களால் பதவியிறக்கம் செய்யப்பட்டவர்களும், பதவி நீக்கம் செய்யப்பட்டவர்களும்... பதவி குறைப்புச் செய்தவர்களுமாகக் கூடி நின்று என்ன கதைத்தீர்கள்...? என்ன முடிவை எடுத்தீர்கள்...? எங்கள் காவல் தெய்வத்திற்குக் கல்லறை கட்டுவதற்கு நிலம் தேடி அலைந்தீர்களா...? புரியவில்லையே... நீங்கள் யார் என்று எங்களுக்குப் புரியவில்லையே...? மாவீரர்களுக்கு தாய் மண்ணிலும், தன் நெஞ்சிலும் கோவில் கட்டிக் கௌரவித்த எங்கள் தலைவனுக்கு... புலம்பெயர் தேசங்களில் நின்று பால் வார்க்க உங்களுக்கு எப்படித்தான் மனம் வந்தது...? சிங்கள தேசம் காட்டியதை உங்கள் தலைவன் ஒப்புக்கொள்ளலாம்... தமிழர்கள் எப்படி ஒப்புக் கொள்வார்கள்...? சிங்களம் காட்டிய காட்சிகள் அத்தனையும் உண்மை என்றால்... தமிழ்த் தேசியத்தின் ஆன்மா மீது நிகழ்த்தப்பட்ட அத்தனை கொடூரங்களையும், அத்தனை அவலங்களையும், அத்தனை அவமானங்களையும், அத்தனை கேவலங்களையும் நீங்கள் ஒப்புக் கொள்வதானால்... அதன் பின்னரும் உயிரோடு வாழும் உங்களை எப்படி அழைப்பது...?

வாழ்வது ஒரு தடவை... நாங்கள் வாழவதற்காய் எத்தனை இளம் குருத்துக்கள் தங்களை தமிழீழக் கனவுக்காக சிதை மூட்டிக்கொண்டார்கள்...? வெடித்துச் சிதறினார்கள்...? குப்பி கடித்து, உயிர் மூச்சை நிறுத்தினார்கள்...? நாம் அவர்களை விடவும் எதில் உயர்ந்தவர்கள்...? நீங்கள் சொல்வது உண்மையானால்.... நீங்கள் அழுவது உண்மையானால்... நீங்கள் தலைவரையும், தமிழீழத்தையும், அந்த மக்களையும் நேசிப்பது உண்மையானால்... மாவீரர்களையும்ஈ அவர்களது தமிழீழக் கனவையும் சுவாசிப்பது உண்மையானால்... வாருங்கள் தமிழீழத்திற்கு... நாங்களும் வருகின்றோம்... அங்கே தேசியக் கொடியை ஏற்றி எங்கள் தேசியத் தலைவருக்கு வீர வணக்கம் செலுத்துவோம்... அதன் பின்னர் சாவது நாமாகவும் இருக்கட்டும்... அதை விட்டுவிட்டு, கோழைகளாய் தேசம் தேசமாய் அலைந்து... கோப்பை கழுவிய காசுகளை வாங்கி, தேதி குறித்து... வரவேற்று... வாடகை மண்டபத்தில்... எங்கள் தேசியத் தலைவனுக்கு அஞ்லியா...? வெட்கமாய் இருக்கிறது...

விடுதலைப் புலிகள் அமைப்பும், அதன் புலம்பெயர் கட்டமைப்புக்களும் விமர்சனத்திற்கப்பாற்பட்டவை. இது எம் தலைவன் காட்டிய பாதை... அவர் கட்டிய கோட்டை. அங்கே, தவறு இருப்பது தெரிந்தால் உள்ளே சென்று... உடனிருந்து... மாற்றங்களை உருவாக்குங்கள். யாரும் தடுக்க முடியாது. தட்டிக் கேட்க முடியாது. அதை விட்டு, கூலிக்கு மார் அடிப்பது போல், யாரோ ஏவிவிட... குழவிக் கூட்டுக்குக் கல் எறியாதீர்கள். தலை தெறிக்கத் திரும்பி ஓடினாலும் தப்பிவிட முடியாது. அப்போதும் முகவரியில்லாமல் எங்கேயோ வீழ்ந்து கிடப்பீர்கள்...

எங்களிடமும் கேள்விகள் அதிகம் உண்டு... கே.பி. அவர்கள் குறித்து ஆயிரம் சந்தேகங்களும் உண்டு... எதிரியிடம் உயிரோடு பிடிபட்ட காரணத்தை எப்படிக் கேட்பது என்று எங்களிடம் மனக் குமுறல்களும் உண்டு... இரகசியம் காக்க என்று எல்லப் புலி வீரர்களிடமும் சயனைற் குப்பிகளைக் கொடுத்த தலைவரின் தோழன்... தலைவன் தானென்று உறுதியாகச் செல்லிவிட்டு... எப்படி உயிரோடு கொழும்பு சென்றார்...? இன்னமும் பல கேள்விகள்... இல்லாத மனிதனிடம் கேட்பது அநாகரிகம் என்பதால்... கேட்காமலே தொடர்கின்றோம்....

தமிழீழ விடுதலைப் போராட்டம் இன்று அதிகமாகச் சம்பாதித்திருப்பது நண்பர்களையல்ல... எதிரிகளையும் துரோகிகளையும் தான். உண்மைதான் உங்கள் கூற்று. இல்லையென்றால்... காடுகளுக்குள் பரவி, கரந்தடி வீரர்களாக மாறவேண்டிய களப் புலிகள், வீதிகள் வழியாக முள்ளிவாய்க்கால் வரை நகர்த்தப்பட்டிருக்க மாட்டார்கள்... யார், யாரெல்லாமோ பாவிகளாய் மாறிப் பறித்தெடுத்து விட்டார்கள்... எங்கள் தேசத்தின் சொத்துக்களை. அந்தத் துரோகத்தின் சூத்திரதாரி யார்...? யார்...? சாட்சிகள் இல்லாமல் தமிழர்களை அழித்தது சிங்கள அரசு மட்டுமல்ல... அது எங்களுக்குப் புரிகின்றது... இன்றுவரை முகம் காட்டாத அந்த யூதாஸ் யார்...?

நாங்கள் நொந்து போயிருக்கிறோம்... துரோகத்தால் வெந்து போயிருக்கிறோம்... மீண்டும் ஒரு மே 18 ஐ எதிர் கொள்ள முடியாமல் கரைந்து போயுள்ளோம்... வேண்டாம்... தலைவனாய், தளபதியாய், பிரிகேடியராய்... எந்தப் பதவி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள்... எங்கள் தலைவரை மட்டும் எங்களிடம் விட்டுவிடுங்கள். காணாத கடவுளைக் கை கொண்டு தொழுகின்றோம், எங்கள் காவியத் தலைவனை இதயத்தில் நிறைத்துள்ளோம். சூரியன் நாளை உதயமாவது உண்மையானால்... எங்கள் சூரியத் தேவனும் நாளை வருவான். அதுவரை... எங்கள் விழிகளை எங்களிடமே விட்டுவிடுங்கள்... நாங்கள் தரிசிக்க வேண்டும் எங்கள் தலைவனை...

'நாடு கடந்த தமிழீழ அரசு' அதைச் சொன்னது யார் என்பது எங்களுக்குத் தேவையற்றது... செய்பவர் உருத்திரகுமாரன். அவர்மீது நாங்கள் நம்பிக்கை வைத்தே, அவர் வேண்டுகோளை ஏற்று தேர்தல் களத்திலும் குதித்துள்ளோம். நாடுகள் தோறும் பலமாக உருவாகிவிட்ட மக்கள் பேரவைகள் உருத்திரகுமாரன் அவர்களது பயணத்திற்கு உறுதுணையாகுவார்கள். அவரது துப்பாக்கியின் தோட்டாக்களாக நாம் மாறுவோம். இனிமேலும், அவரை வைத்துக் 'காமடி' பண்ண முயல வேண்டாம்.

நேற்றும் கோத்தபாய புலம்பெயர் தேசத்துத் தமிழர் பலம் குறித்து அச்சம் வெளியிட்டுள்ள நிலையில், தொல்காப்பியனுக்கு எப்படி சித்தம் கலங்கியது? ''இன்று புலத்துத் தமிழர்கள் பற்றி சிங்கள தேசத்துக்கு கொஞ்சமும் அக்கறையோ கலக்கமோ கிடையாது. இதற்குக் காரணம் தமிழீழ விடுதலைப் போராட்டத்தைச் சிறுமைப்படுத்தும் வகையில் நமக்குள் நாமே போட்டுக் கொள்ளும் சண்டைதான்'' என்று கண்ணீர் விடும் தொல்காப்பியன் தமிழர் ஒற்றுமைக்காகச் சிறிய நேரத்தையாவது செலவிடலாமே...?

தொல்காப்பியனல்ல... அகத்தியர் வந்தாலும் 'நாடு கடந்த தமிழீழ அரச' அமைவதை யாராலும் தடுத்து நிறுத்திவிட முடியாது. அங்கே, உங்களைப் போன்ற குழப்பவாதிகள் சிலர் வந்தாலும்... எங்களைப் போன்ற தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் அதிகம்பேர் வருவார்கள்... அங்கேயும் உங்கள் ஆசைகள் தடுத்து நிறுத்தப்படும்... எங்கள் தலைவரை மீண்டும் மீண்டும் நீங்கள் கொல்வதை நாங்கள் அனுமதிக்கமாட்டோம்!

இத்தனை வருடங்களாக என்ன செய்தோம் என்பதல்ல... இப்போது என்ன செய்துகொண்டு இருக்கிறோம் என்பதே முக்கியம். முப்பது ஆண்டுகப் விடுதலைக்காகப் போராடியவர்கள் எல்லாம் உத்தமர்கள் என்றால்,

கருணாவும் அந்த வரிசையில் உள்ளே வந்துவிடுவார். டக்ளசும், பிள்ளையானும் கூட தியாகிகள் ஆகிவிடுவார்.

துரோகிகளைத் துரோகிகள் என்று சொல்லாமல் எட்டப்பன் என்று சொல்லாமா...? அல்லது, கருணா என்று அழைக்கலாமா...? பழம் புளிக்கின்றதா தொல்காப்பியனுக்கு?

விழ விழ எழுவோம்...! விழ விழ எழுவோம்...!! ஒன்று விழ நாங்கள் ஒன்பதாய் எழுவோம்...!!!

களத்தில் வீழ்ந்தவர்கள், புலத்தில் எழுந்து நிற்கின்றோம்!

- அகத்தியன்-

http://www.eelanadu.info/

Comments