நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், கனடியத் தமிழர் தேசிய அவை இணைந்தது

கனடிய தமிழர் தேசிய அவைக்கு யூன் 12 இலும், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு மே 2 இலும் தேர்தல்கள்

Posted  Image

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், கனடியத் தமிழர் தேசிய அவை ஆகிய அமைப்புகளை உருவாக்குவதற்காக இயங்கும் இரு செயற்குழுக்களும் இத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக புரிந்துணர்வின் அடிப்படையில் ஒரு உடன்பாட்டுக்கு வந்துள்ளன என்பதனை கனடா வாழ் தமிழீழ மக்களுக்கு அறியத் தருவதில் பெரு மகிழ்வடைகிறோம்.

இந்த இரு திட்டங்களும் தமிழீழ மக்களின் அரசியல் பெருவிருப்பான சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழத் தனியரசினை அமைப்பதனை நோக்காகக் கொண்டவை. மக்கள் மத்தியிலிருந்து நேரடியாய்த் தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகளைக் கொண்டு உருவாக்கப்படுவவை.

இவ் இரு அமைப்புக்களுக்குமான பிரதிநிதிகளைத் தெரிந்தெடுப்பதற்கான இரு நேரடித் தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்துவது தொடர்பான முயற்சிகளை நாம் மேற்கொண்ட போதும், சில நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக அது கைகூடிவரவில்லை.

இதனால் மே மாதம் 2ஆம் நாள் நடைபெறும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான தேர்தலுக்கு கனடியத் தமிழர் தேசிய அவையின் தேர்தலுக்கான செயற்குழுவும், யூன் 12 ஆம் நாள் நடைபெறும் கனடியத் தமிழர் அவைக்கான தேர்தலுக்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைப்பதற்கான கனடியச் செயற்பாட்டுக்குழுவும் ஒன்றுக்கொன்று ஆதரவாகவும் ஒத்துழைப்பாகவும் இயங்குவது என நாம் முடிவு செய்துள்ளோம்.

கனடாவாழ் தமிழ் மக்களின் வலுக்கட்டமைப்புகளான இவ்விரண்டிற்கும் முழு ஆதரவை வழங்கி நிற்குமாறு நாடு கடந்த அரசாங்கத்தை அமைப்பதற்கான கனடிய செயற்பாட்டுக் குழுவும், கனடிய தமிழர் தேசிய அவை தேர்தலுக்கான செயற்க்குழுவும் இணைந்த வண்ணம் கனடியத் தமிழ் மக்களை உரிமையுடன் வேண்டிக்கொள்கிறோம்.

இவ்விரண்டு அமைப்புக்களுக்குமான இரண்டு தேர்தல்களையும் வெற்றிகரமாக நடத்தி முடிக்க கனடாவாழ் அனைத்துத் தமிழ் மக்களின் ஆதரவையும் இரண்டு செயற் குழுக்களும் வேண்டி நிற்பதோடு தமிழரின் ஒற்றுமையும், ஒருமைப்பாடும் எந்தவொரு தளத்திலும் பேணப்படுதலே தமிழீழ விடுதலையை வென்றெடுப்பதற்கு அவசியமானது என்ற உணர்வின் அடிப்படையில், நாம் ஒன்று சேர்ந்து நிற்பது இம் முயற்சிகளின் வெற்றிக்கு உறுதுணையாக அமையும் என நாம் உறுதியாக நம்புகிறோம், என இரு அமைப்புக்களும் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

சங்கதி

Comments