தனிநாட்டுக் கோரிக்கையை தமிழர்கள் கைவிட்டுவிட்டனராம்!-சுரேஸ் பிரேமச்சந்திரன்

தமிழர்கள் தனி நாட்டுக்கோரிக்கையை கைவிட்டுவிட்டதாக சுரேஸ் பிரேமச்சந்திரன் வெளிப்படையாக ஒரு கருத்தை இன்று பி.பி.சி தமிழ் சேவைக்குத் தெரிவித்துள்ளார். அதாவது நடந்து முடிந்த தேர்தலில் ஈழ மக்கள் அந்த ஆணையை தமக்கு வழங்கியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். நடந்து முடிந்த தேர்தலில் இலங்கையில் 53 வீதமான மக்கள் வாக்களித்துள்ளனர். அதிலும் தமிழர்கள் குறிப்பாக 19 வீதமே வாக்களித்துள்ள நிலையில்,

புலம்பெயர் தமிழர்களையும் ஈழத் தமிழர்களையும் பிரிக்கும் வஞ்சக நோக்கில் இவ்வாறு அடிமுட்டாள் தனமான கருத்தை முன்வைத்துள்ளார் சுரேஸ் பிரேமச்சந்திரன் எம்.பி. அதாவது இவர் கருத்துப்படி பார்த்தால், தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களித்த 18% தமான வாக்காளர்களின் கருத்துகளையே அவர் பிரதிபலித்துள்ளார்.

ஈழ மக்கள் மத்தியில், மற்றும் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் மத்தியில் தனி நாடுவேண்டுமா? இல்லை வேண்டாமா?

என ஒரு பொதுத் தேர்தலை நடத்தி முடித்தவர் போல இவ்வாறான சிறுபிள்ளைத் தனமான கருத்துக்களை தெரிவித்துள்ளார் சுரேஸ் பிரேமச்சந்திரன் அவர்கள்.

இவர் தனது சொந்தக் கருத்துக்களை தமிழ் தேசிய கூட்டமைப்பின் கருத்துக்கள் போலக் கூறிவருவதாலேயே, தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீது மக்கள் சிலர் அதிருப்தி அடைந்துள்ளனர். தொடர்ந்து கருத்துத் தெரிவித்த சுரேஸ் பிரேமச்சந்திரன், தமது தேர்தல் விஞ்ஞாபனத்திற்கே மக்கள் ஆணை கிடைத்துள்ளதாக கூறி, தாம் அரசுடன் இணைந்து செயல்பட விரும்புவதாகவும் தெரிவித்துள்ளமை, அப்பட்டமாக தமிழர்களின் அபிலாஷைகளை குழி தோண்டிப் புதைப்பதாகும்.

33,000 மாவீரர்கள் கண்ட கனவை புதைப்பது மட்டுமல்லாது அவர்களையும் அவமதிக்கும் செயலாகவே கருதவேண்டியுள்ளது. சுரேஸ் பிரேமச்சந்திரன் கருத்துகள் தொடர்பாக பல சர்ச்சைகள் தற்போது கிளம்பியுள்ளன.இவர்களைப் போல நுனிப் புல்லை மேயும் கறுப்பாடுகள் மந்தையில் உள்ளவரை, சுயநிர்ணய உரிமை மட்டுமல்ல நாம் சிங்களத்திடம் இருந்து எதனையும் பெறப் போவது இல்லை.

இன்று தனி நாட்டுக் கொள்கையை விட்டுக்கொடுத்த சுரேஸ் பிரேமச்சந்திரன் நாளை எதை எல்லாம் விட்டுக் கொடுக்கப் போகிறார், அல்லது விலைபேசப் போகிறார்?

தமிழ் மக்களின் தன்மானத்தை சந்தி சிரிக்கவைக்க இவர் இலங்கை அரசுடன் சேர்ந்து இயங்கும் காலத்தை தமிழர்கள் காணநேர்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

Comments