கனடிய நாடு கடந்த தமிழீழ அரச பிரதிநிதிகள் வேண்டுகோள்

நாடு கடந்த தமிழீழ அரசிற்காக கனடாவில் நடைபெற்ற தேர்தலில் உங்கள் பிரிதிநிதிகளாக எம்மை தெரிவு செய்தமைக்கு எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம். உங்கள் விருப்பிற்கும், நம்பிக்கைக்கும் உரிய வகையில் நாம் நடந்து கொள்வோம் என உறுதி கூறும் அதேவேளை எமது உயரிய இலட்சியமாம் தாயகம், தேசியம், தன்னாட்சி என்ற அடிப்படையில் சுதந்திரமும், இறைமையுமுள்ள தமிழீழ தனியரசு அமைய முழுமையாக உழைப்போம் எனத் தமிழ் தாயின் மீது சபதம் எடுக்கின்றோம்.

மே மாதம், தமிழர் தம் வாழ்வில் வலி சுமந்த மாதம். ஆயிரத்தில் எம் உறவுகள் கொத்துக் கொத்தாக கொன்றொழிக்கப்பட்ட மாதம். 21ம் நூற்றாண்டில் ஒரு மனிதப் பேரவலத்தை ஈழத்தமிழ் மக்கள் மீது சிங்களப் பேரினவாத அரசு ஏற்படுத்தியபோது அவ்வரசிற்கு ஆதரவு வழங்கி சர்வதேசம் துணைபோன மாதம். சர்வதேசத்தின் வீதிகள் எங்கும் எம் உறவுகளின் சாவைத் தடுக்க மாட்டீர்களா என நாம் கதறித்திரிந்த மாதம். கடந்த ஆண்டு சர்வதேசம் எம் உறவுகளைக் கைவிட்டது. இவ்வாண்டு நாமே அதைச் செய்யப் போகின்றோமா? வெளியே மீண்டும் வாருங்கள். நட்டாற்றில் நிற்கும் எம் உறவுகளுக்காக தொடர்ந்தும் குரல் கொடுப்போம். வலிசுமந்த மாத நிகழ்வுகளில் பெரும் எண்ணிக்கையில் கலந்து கொள்ளுங்கள். மே 18ஆம் நாள், போர் குற்ற நாள் நிகழ்வில் மீண்டும் வரலாறாகி முழுமையாகத் திரளுங்கள் என அறைகூவல் விடுக்கின்றோம்.

உங்கள் பிரதிநிதிகளாக நாடு கடந்த தமிழீழ அரசின் அமர்வில் விரைவில் நாம் கலந்து கொள்வோம். அதன் செயற்பாடு மேன்மையுறும் வகையில் நடந்து முடிந்த தேர்தலில் தேசிய இலட்சியத்தை மனதில் சுமந்து வெற்றி வாய்ப்பைத் தவற விட்டவர்களையும் முழுமையாக தொடர்ந்த செயற்பாட்டில் அணைத்துக் கொள்வோம். எம் வழிகாட்டிகளாகிய மக்கள், உங்கள் அனைவரையும் தொடர்ந்தும் சந்திக்கும் வாய்ப்புக்களை உருவாக்கி உங்கள் ஆக்கபூர்வமான கருத்துக்களைப் பெற்றுக் கொள்ளும் அதேவேளை எம் தொடர்ந்த செயற்பாடுகள் குறித்த விளக்கங்களை உங்களுக்கு அளிப்போம் எனவும் உறுதி தருகின்றோம். ஏற்கனவே வெற்றி பெற்றவர்களுடன் தொடர்பைப் பேணி, ஒற்றுமைப்பட்ட ஒரு குழுவாக எமது தொடர்ந்த செயற்பாட்டிற்கு ஏதுவாக செயலணிக் குழுக்களை அமைத்து செயற்திட்டவாக்கத்திற்கான முன்னெடுப்புகளில் ஈடுபட்டுள்ளோம் என்ற மகிழ்ச்சியான செய்தியையும் உங்களிடம் பகிர்ந்து கொள்கின்றோம்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்

உங்கள் நாடு கடந்த தமிழீழ அரச கனடியப் பிரதிநிதிகள்

ஜோ அன்ரனி

பொன் பாலராஐன்

எம்.கே. ஈழவேந்தன்

தாரணி பிரபாகரன்

எஸ். திருச்செல்வம்

ஈசன் குலசேகரம்

வனிதா ராண்ஐந்திரம்

சுரேஸ் ரட்ணபாலன்

வரன் வைத்திலிங்கம்

மரியாம்பிள்ளை அன்ஐலோ

சுரேன் மகேந்திரன்

பாலன் ரட்ணராஐக்

சாம் சங்கரசிவம்

ஐயம்பிள்ளை சண்முகநாதன்

ராம் சிவலிங்கம்

கந்தையா தெய்வேந்திரன்

மகாராஐக் (நந்தன்) நந்தகுமார்

நிருதன் நாகலிங்கம்

லக்சன் சிவப்பிரகாசபிள்ளை

புவனேந்திரா நடராஐக்

Comments