தமிழீழக் கோரிக்கையை உருத்திரகுமாரன் நிச்சயம் கைவிடுவார். சிறீலங்கா அரசு உறுதி!

தமிழீழக் கோரிக்கையைக் கைவிட்டு தங்களுடன் வி.உருத்திரகுமாரன் நிச்சயம் சமரசம் செய்துகொள்வார் என்று சிறீலங்கா அரசு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

இது குறித்து கருத்துரைத்திருக்கும் சிறீலங்கா ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல, தமிழீழ விடுதலைப் புலிகளின் தவறான பரப்புரைகள் காரணமாகவே நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை அமைக்கும் முயற்சிகள் இடம்பெறுவதாகவும், எனினும் இது தொடர்பாக வி.உருத்திரகுமாரனுடன் பேசி இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்ள முடியும் என்றும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

தமிழீழக் கோரிக்கையில் உறுதியாக உள்ள புலம்பெயர்வாழ் தமிழ் மக்களை அரசியல் ரீதியில் பலவீனப்படுத்துவதற்கு வி.உருத்திரகுமாரனுடன் சிறீலங்கா அரசாங்கம பேசுவது பொருத்தமாக இருக்கும் என்று, ஏற்கனவே சிறீலங்கா அரசாங்கத்தின் ஆலோசகரான பேராசிரியர் றோஹான் குணரட்ண ஆலோசனை வழங்கியிருந்த நிலையில் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவின் இந்தக் கருத்து வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே கே.பி. ஊடாகவும், கருணா மூலமாகவும் வி.உருத்திரகுமாரன் உட்பட நாடுகடந்த அரசாங்கத்தின் மதியுரைக் குழுக்களின் உறுப்பினர்களுடன் இரகசிய தொடர்புகளை சிறீலங்கா அரசாங்கம் பேணி வருவதாக அரசல்புரசலாகத் தகவல்கள் கசிந்திருந்த நிலையில் கெஹெலிய ரம்புக்வெலவின் அறிவிப்பு வெளியாகியுள்ளமை, புலம்பெயர்வாழ் தமிழீழ மக்களிடையே பல்வேறு கேள்விகளைத் தோற்றுவித்துள்ளது.

குறிப்பாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான தேர்தலில் வெற்றியீட்டிய தமிழ்த் தேசிய உணர்வாளர்களை ஓரங்கட்டும் நடவடிக்கையில் நாடுகடந்த அரசாங்கத்தின் மதியுரைக் குழுக்களும், தேர்தல் ஆணையங்களும் ஈடுபடுவது மக்களின் சந்தேகங்களை பலப்படுத்தும் வகையில் அமைந்திருப்பதாக ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

Comments