தலைவராக உருத்திரகுமாரன் ஏகமனதாகத் தெரிவு ????

ஈழத்தமிழினத்திற்கு இலங்கை அரசு பேரழிவை ஏற்படுத்திய முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் முதலாம் ஆண்டு நினைவு தினமான இன்று தமிழீழ மக்களின் விடுதலைக்கான புதிய அத்தியாத்தை ஏற்படுத்திய நாடு கடந்த தமிழீழ அரசின் தலைவராக விஸ்வநாதன் உருத்திரகுமாரன் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

வேற்றினத்தை பிரபல்ய பேரறிஞர்கள், சட்ட ஆய்வாளர்கள் போன்ற கற்றறிந்த அறிஞர்களைக் கொண்ட குழாமை ஆலோசனைக் குழுவாக வைத்து அமைக்கப்பட்ட இத் தமிழீழ அரசு இலங்கை அரசை பலத்த பீதிக்கு உள்ளாக்கிய நிலையிலேயே ஈழத்தமிழினத்தின் புதிய தலைமையை மக்களின் பிரதிநிதிகள் திரு. உருத்திரகுமார் விஸ்வநாதனிடம் கையளித்துள்ளனர்.

ஜனநாயக முறைப்படி புலம்பெயர்ந்த தமிழர்கள் வாழும் நாடுகளில் தேர்தல் மூலம 115 பிரதிநிதிகளைச் தேர்வு செய்வதற்கான யாப்பை வரைந்து அதனை நடைமுறைப்படுத்தி தேர்தல்களில் வெற்றியீட்டியோரை முதலாவது நினைவு நாளிலேயே தமிழீழ அரசின் முதலாவது அரச அமர்வை நடத்தியதின் மூலம் ஈழத்தமிழினம் விடுதலையடையும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியவர் திரு. உருத்திரகுமாரன் விஸ்வநாதன் ஆவார்.

இனப்படுகொலையின் கோரத்தால் நாணிக்குறுகி, கூனிப் போயிருந்த ஈழத்தமிழினத்தின் வாழ்வில் விளக்கையேற்றி வைத்துள்ள இந்த வரலாற்றுச் செயற்பாடு ஈழப்போர் ஐந்து - அரசியற் போராக அமையப் போவதை புடம்போட்டுக் காட்டி நிற்கிறது.

ஈழத்தமிழினம் இனித் தலையெடுக்க முடியாது என இறுமாந்திருந்த இலங்கை அரசின் எண்ணத்தைத் தவிடுபொடியாக்கி நாடுகடந்த அரசை உருவாக்குவதில் முழு மூச்சாக உழைத்த திரு. விஸ்வநாதன் உருத்திரகுமாரனை மேற்குலகில் வதியும் தமிழீழ மக்களின் பிரதிநிதிகள் தமது இரண்டாம் நாள் பாராளுமன்ற ஒன்று கூடலில் ஏகோபித்த முறையில் தெரிவு செய்துள்ளனர்.

அமெரிக்காவின் பிடடெல்பியாவில் 87 பிரதிநிதிகள் நேரடியாகக் கலந்த கொள்ள ஏனைய பிரதிநிதிகள் சுவிஸின் ஜெனிவா, இங்கிலாந்தின் லண்டன் மாநகரங்களில் இருந்து நேரடித் தொலைக்காட்சித் தொடர்பினூடாகக் கலந்து கொண்ட இரண்டாம் நாள் நிகழ்வில் இடம்பெற்ற தமிழீழத்தின் தலைமைக்கான தெரிவில்,

திரு. உருத்திரகுமாரன் விஸ்வநாதனிற்கு எதிராக லண்டனில் இருந்து திரு.எஸ்.ஜெயானந்தமூர்த்தி தலைமைக்காகப் போட்டியிட முன் வந்திருந்தாலும்

திரு. உருத்திரகுமாரன் அமெரிக்க மற்றும் ஜெனிவாப் பிரதிநிதிகள் ஆகியோரின் ஏகோபித்த ஆதரவையும் லண்டனில் இருந்து கலந்து கொண்ட ஒரு பகுதி உறுப்பினர்களையும் தேர்தலிற்கு முன்பே பெற்றுக் கொண்டதால் திரு. ஜெயானந்தமூர்த்தி போட்டியிடுவதைத் தவிர்த்து திரு. விஸ்வநாதன் உருத்திரகுமாரனைத் நாடுகடந்த அரசின் ஏகமனதான தலைவராக்கினார்.
அமெரிக்க துணை இராஜாங்கச் செயலர் புலம்பெயர்ந்த தமிழர்களுடன் இலங்கை அரசு பேச்சுக்களை நடத்த வேண்டும் என்ற பகிரங்க வேண்டுகோளை விடுத்த போது அதற்கான தலைமை தமிழர்களிடைய இல்லையே என்ற ஆதங்கத்தில் இருந்த மக்களிற்கு ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுத்த இத்தலைமை அதற்கான கனதியைக் கொடுக்கும் என்ற நம்பிக்கை ஆணித்தரமாக ஏற்பட்டுள்ளது.
போரின் மூலம் பெற்ற வெற்றிகளினால் சமதரப்பாக பேச்சுக்களில் விடுதலைப்புலிகள் கலந்து கொண்ட காலம் போய், எந்த ஒரு பலமுமற்ற நிலையிலிருந்த ஈழத்தமிழினத்தின் வரலாற்றில்,

தற்போது பேச்சுப்பலமற்று இருக்கும் தமிழர் தரப்பின் இரண்டு காத்திரமான பேசுசக்திகளாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு களத்திலும் நாடுகடந்த அரசு புலத்திலும் செயற்பட்டு ஈழத்தமிழர்களிற்கு விடிவை பெற்றுத் தரும் என்ற நம்பிக்கை முள்ளிவாய்க்காலின் முதலாண்டு நினைவு தினத்திலேயே ஏற்பட்டுள்ளது தமிழீழ வரலாற்றின் ஒரு மைல்கல்லாகும்.

இதேவேளை தேசியத் தலைவர் அவர்களால் தமிழ்த் தேசியம் சார்ந்த செய்திகளை வெளியுலகிற்கு எடுத்துச் செல்வதற்காகவெனப் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட தமிழுலகின் ஆங்கிலம் சார் ஊடகம் திரு. உருத்திரகுமாரன் விஸ்வநாதன் சம்பந்தப்பட்ட செய்திகளையும், நாடுகடந்த அரசு தொடர்பான செய்திகளையும் இருட்டடிப்பு செய்வதை நிறுத்தி தேசியத்திற்கு ஆதரவான ஊடகமாக மாறவேண்டுமென புலம்பெயர்ந்த தமிழர்கள் உரிமையோடு வேண்டிக் கொள்கின்றனர்.

TamilWin.

-----------------------
தேசியத்திற்கான தலைமையே ஒருவர்தான், மேதகு வே.பிரபாகரன் மாத்திரமே: ஜெயானந்தமூர்த்தி

அண்மையில் அமெரிக்காவில் கூடிய நாடு கடந்த அரசு, உருத்திரகுமாரனை தமிழீழத்தின் தேசியத் தலைவர் என அறிவித்திருந்தது.

இதற்கு முன்னாள் சிறீலங்கா நாடாளுமன்ற உறுப்பினரும், பிரித்தானியாவில் நாடு கடந்த அரசில் போட்டியிட்டு பெரும்பான்மை ஆதரவு வாக்குகளைப் பெற்றவருமான எஸ்.ஜெயானந்தமூர்த்தி ஆதரவு வழங்கியது போன்றும் பிரச்சாரங்களை கட்டவிழ்த்துவிட்டுள்ளது.

இந்நிலையில், இதுதொடர்பாக ஜெயானந்தமூர்த்தி அவர்கள் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது,

‘நாடு கடந்த அரசின் தலைவராக உருத்திரகுமாரன் ஏகமனதாகத் தெரிவு' என்ற தலைப்பில் வெளியான செய்தியில் நான் உருத்திரகுமாரனுக்கு எதிராக போட்டியிட்டதாகவும் பின்னர் போட்டியில் இருந்து ஒதுங்கி அவரைத் தேசியத்திற்கான தலைவராக்கினேன் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் இச்செய்தியில் உண்மைக்குப் புறம்பான சில தவறுகள் எழுதப்பட்டுள்ளன.

உருத்திரகுமாரனை அமெரிக்காவில் இருந்து சிலர் தலைவராக பிரேரித்தபோது என்னை லண்டனில் இருந்து சிலர் பிரேரித்தனர்.

ஆனால் ஒரு பதவிக்கு இருவர் போட்டியிடுவதென்றால் ஐனநாயக முறைப்படி வாக்கெடுப்பு நடத்தப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால் அமெரிக்காவிலும் ஜெனிவாவிலும் வாக்கெடுப்பு நடைபெறவில்லை.

லண்டனில் மாத்திரம் மூவர் தவிர ஏனைய 11 பேர் எனக்கு ஆதவவாக வாக்களித்தனர்.

எனவே ஐனநாயக முறைப்படி இத்தலைவர் தெரிவு இடம் பெறவில்லை.

அப்படி இடம் பெறுவதென்றால் ஏனைய இரு இடங்களான அமெரிக்கா, ஜெனிவா போன்ற இடங்களிலும் லண்டனைப் போன்று உறுப்பினர்களின் வாக்களிப்புக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.

எனவே இத்தலைவர் பதவி என்பது உத்தேச இடைக்கால பணிக்குழுவுக்கானதே தவிர தேசியத்திற்கானதல்ல.

தேசியத்திற்கான தலைமை ஒன்றுதான் என்பதில் நான் உறுதியாக உள்ளேன்.

அது எமது தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் மாத்திரமே.

எனவே நான் தேசியத்திற்கான தலைவராக உருத்திரகுமாரனை தெரிவு செய்தாக குறிப்பிடப்பட்டுள்ளதை நான் மறுக்கின்றேன்.

நன்றி

எஸ்.ஜெயானந்தமூர்த்தி


------------------------------------

Comments