கனடிய நாடாளுமன்றில் நடைபெற்ற வன்னிப் படுகொலைகளை நினைவுகூரும் மே நினைவேந்தல் நிகழ்வு

கனடிய நாடாளுமன்றத்தின் உள்ளே கனடிய தமிழர் பேரவை மே நினைவேந்தல் அனுட்டிப்பு இலங்கையில் இடம்பெற்ற போரில் உயிரிழந்த பல்லாயிரக்கணக்கான மக்களின் நினைவாக மே 11, 2010 அன்று நடத்தப்பட்ட நினைவேந்தல் நிகழ்ச்சியில் எலலா அரசியல் கட்சிகளையும் சேர்ந்த கனடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.

முள்ளிவாய்க்கால் போரின் கடைசிக் கட்டத்தில் படுகொலை செய்யப்பட்ட மக்களை நினைவு கூரும் இந்த நினைவேந்தல் நிகழ்ச்சியை கனடிய தமிழர் பேரவை ஒழுங்கு செய்திருந்தது.

எல்லா சமயத்தையும் சேர்ந்த குருமார்கள் பிரார்த்தனை வழிபாடு நடத்தினார்கள். புதிய மக்களாட்சிக் கட்சித் தலைவர் யக் லேய்டன், லிபரல் கட்சியின் வெளியுறவு அமைச்சின் விமர்சகர் பொப் றே, பற்றிக் பிரவுண் நா.உ. (Barrie - பழமைவாதக் கட்சி) பன்னாட்டு மனிதவுரிமைகள் அமைப்பின் உபகுழுவின் துணைத் தலைவர் ஜேன் டோறியன் நா.உ. (Longueuil—Pierre-Boucher புளக் கியூபெக்வா) ஆகியோர் தங்கள் கட்சி சார்பாக சிற்றுரை நிகழ்த்தினார்கள்.

போர்க்குற்றங்கள் பற்றிப் பக்கச்சார்பற்ற விசாரணையின் அவசியம் மற்றும் மறுவாழ்வு உதவிகள் தமிழர் பகுதிகளுக்கு அனுப்பப்பட வேண்டிய தேவை போன்றவை உள்ளிட்ட பல விடயங்கள் பற்றிப் பேசினார்கள்.
அன்று காலை பிறம்ரன் மேற்கு நா.உறுப்பினர் அன்றூ கானியா போர்க்குற்றங்கள் பற்றி பன்னாட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் விண்ணப்பம் ஒன்றை கனடிய நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார். டொன் வலி மேற்கு நா.உறுப்பினர் பொப் ஒலிபந்தும் பேசினார்.

கனடிய நாடாளுமன்றத்துக்கு உள்ளே நடந்த இந்த நினைவேந்தல் நிகழ்ச்சியில் 30 ற்கும் கூடுதலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள். பல பிரமுகர்கள் படுகொலைகளை நினைவு கூரும்முகமாக சிவப்பு நாடாக்களை அணிந்து கொண்டு சிவப்பு நாடா பரப்புரையில் கலந்து கொண்டார்கள்.

இந்த நினைவேந்தல் நிகழ்ச்சியில் கனடாவுக்கு விரைவில் வருகை தர இருக்கும் ஐ.நா.சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் அவர்களை போர்க்குற்றங்களை விசாரிக்க ஒரு ஆணைக்குழுவை நியமிக்குமாறு கனடிய அரசு வேண்டுகோள் விடுக்க வேண்டும் என்று கனடிய தமிழர் பேரவை கனடிய அரசைக் கேட்டுக் கொண்டது.

"பன்னாட்டு குற்றங்களை இளைத்தவர்கள் அவர்களது செயலுக்கு பொறுப்பேற்க வேண்டும் என்பதை கனடா நிச்சயப்படுத்த வேண்டும்" என கனடிய தமிழர் பேரவையைச் சேர்ந்த திரு குபேஸ் நவா கேட்டுக்கொண்டார்.

Comments