ஐ.நா.வின் நடவடிக்கை குறித்து சந்தேகம் வெளியிட்டுள்ள "இன்னர் சிற்றி பிரஸ்"

சரணடைந்த புலித்தலைவர்களுடன் நம்பியார் பேசவில்லையா?

ban1nambyஇறுதி யுத்தத்தின்போது வெள்ளைக் கொடியுடன் சரணடையச்சென்ற விடுதலைப் புலிகளுடன் ஐ.நா. செயலரின் பிரதம அதிகாரி விஜய் நம்பியார் நேரடித் தொடர்பு வைத்திருக்கவில்லை என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. "இன்னர் சிற்றிப் பிரஸ்" இச்செய்தியை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் இன்னர் சிற்றிப் பிரஸுக்கு ஐ.நா. செயலர் பான் கீ மூனின் பேச்சாளர் மாட்டின் நெஸிர்கி தெரிவித்ததாவது, சரணடையுமாறு கோரப்பட்ட புலிகளுடன் தனக்கு நேரடித் தொடர்பு இருக்கவில்லை என விஜய் நம்பியார் தெளிவுபடுத்தியுள்ளார்.

அவர் இலங்கை அரசின் உயர் மட்டத்தினருடன் பேசி தமிழ்ச்சமூகத்தின் பிரதிநிதிகள் வெளியிட்ட கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.வேறு எதனையும் அவர் மேற்கொண்டி ருக்கவில்லை என ஐ.நா. செயலரின் பேச்சாளர் மேலும் தெரிவித்ததாக "இன்னர் சிற்றிப் பிரஸ்" தெரிவித்துள்ளது.

இதேவேளை, சிறிலங்காவில் போர் இடம்பெற்ற காலப்பகுதியில் ஐ.நா. செயற்பட்ட விதம் குறித்து இன்னர் சிற்றி பிரஸ் தனது பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

அதாவது -

ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற போரை அடுத்து, பொதுமக்கள் உயிரிழப்பு விவரங்களை வெளியிட்ட ஐ.நா., சிறிலங்காவில் இடம்பெற்ற போரில் உயிரிழந்த பொதுமக்களின் விவரங்களை வெளியிடாதது ஏன்?

போர் இடம்பெற்ற கடைசி காலப்பகுதியில் சிறிலங்கா அரசின் உத்தரவுக்கமைய கிளிநொச்சியிலிருந்து ஐ.நா. அமைப்புக்களை நீக்கிக்கொண்டது ஏன்?

போர் இடம்பெற்ற கடைசி காலப்பகுதியில் விடுதலைப்புலிகளின் தலைவர்கள் சரணடைவதற்கு மேற்கொள்ளப்பட்ட பேச்சுக்களில் முக்கியஸ்தராக பங்குபற்றியிருந்த ஐ.நா. செயலாளர் நாயகத்தின் ஆலோசகர் விஜய் நம்பியார் பகிரங்க ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு இறுதிப்போரின்போது ஐ.நா. மேற்கொண்ட நடவடிக்கை குறித்த விளக்கத்தை தராதது ஏன்?

போன்ற கேள்விகளை தொடுத்துள்ளது.

Comments