நமது அடையாளம் தமிழரா? அல்லது திராவிடரா?- சென்னைமுதல் கருத்தரங்கம்

நமது அடையாளம் தமிழரா? அல்லது திராவிடரா? என்ற தலைப்பில் சென்னையில் முதல் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கத்திற்கு மருத்துவர் க.கிருஷ்ணசாமி தலைமையில் நடைபெற்றது.

இதில் புலவர் புலமைபித்தன், மா.இலெ.தங்கப்பா இயக்குனர். புகழேந்தி தங்கராஜ், இதழாளர் அய்யநாதன் உட்பட தமிழ் ஆர்வலர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

இக்கருத்தரங்கை துவக்கி வைத்தும், இறுதியிலும் உரையாற்றிய புதிய தமிழகம் கட்சித் தலைவர் மருத்துவர் க.கிருஷ்ணசாமி, நாம் திராவிடரா அல்லது தமிழரா என்ற விவாதத்தை நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்பதற்காகவே இந்தக் கருத்தரங்கம் நடத்தப்படுவதாகத் தெரிவித்தார்.

"தமிழர் என்கிற நமது அடையாளத்தை முற்றிலும் அழிக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது, அதனை தமிழக முதல்வரே செய்து வருகிறார். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று வரலாற்றில் செழித்திருந்த தமிழினம், அன்னிய இன ஊடுவல்களால் சாதிய நோய்வாய்ப்பட்டுள்ளது.

இதனை திராவிட கோட்பாடுகள் மேலும் வலிமைபடுத்துவதாகவே உள்ளது. திராவிடம் என்பது தமிழரின் வரலாற்றில் இடையில் திணிக்கப்பட்டது, அது இடையிலேயே போய்விட வேண்டும்.

தமிழன் என்கிற அடையாளம் மட்டுமே தமிழினத்தைத் சூழ்ந்துள்ள பிரச்சனைகளக்கு தீர்வு காண உதவும். உலகமெல்லாம் பிரிந்து போவதற்குச் சண்டை போட்டுக் கொண்டிருக்கின்றன, நாம் மட்டுமே இணைந்து வாழ்வதற்கு சண்டை போட்டுக் கொண்டிருக்கிறோம்.

சாதியால் நாம் ஒருவரை ஒருவர் தாழ்த்திக்கொண்டிருக்கின்றோம். தமிழன் என்கிற உணர்வால் அதனை நாம் வென்றிட முடியும். கண்டதேவி கோயில் தேர் வடம் பிடித்தது, சாதியை ஒழித்து எல்லோரும் ஒன்றுபட வேண்டும் என்பதற்கே. ஈழத்தில் நம் இனத்தை அழித்த போரை நிறுத்த நாம் எப்படியெல்லாமோ போராடினோம், ஆனால் போர் நிற்கவில்லை. நமது போராட்டங்களுக்கு எந்த அங்கீகாரமும் கிடைக்கவில்லை.

6 கோடி பேர் தமிழ்நாட்டில் இருந்தும் நம்மால் ஈழத்தில் நம் இனத்தைக் காக்க முடியாமல் போனதற்கு நாம் தமிழர் என்ற ஒரே அடையாளத்துடன் ஒற்றுமையாக போராடததே காரணம் ஆகும்.

ஒரு பக்கம் திராவிடம் என்ற அடையாளம், மறுபக்கம் சாதியம் என்கிற நம்மை பிரிக்கும் சமூக அடையாளம். ஈழ விடுதலைக்கு எதிராக நடந்த துரோகத்திற்கு திராவிடமும் ஒரு காரணம். நாம் எப்படி திராவிடர் என்று அடையாளப்படுத்தப்படுகிறோம்? இந்த உலகில் உள்ள மனித இனங்கள் மூன்றாக வகைபடுத்தப்பட்டுள்ளன.

ஒன்று காக்கசாய்ட் எனும் வெள்ளையினம், இரண்டாவதாக மங்கோலாயிட் எனும் மஞ்சள் இனம், மூன்றாவதாக நீக்ராய்ட் என்கிற கருப்பினம். நம்மை கருப்பினத்திற்கு கீழ் ஆஸ்ட்ராய்ட் என்று துணை இனமாக பிரித்துக் காட்டுகின்றனர். இதையே அடிப்படையாகக் கொண்டு நம்மை திராவிடர் என்றும், நாம் தொன்று தொட்டு வாழ்ந்த இடம் திராவிடம் என்றும் கூறுகின்றனர்.

ஆனால் திராவிட இனம் என்ற ஒன்று இருந்ததாக சான்றுகள் ஏதுமில்லை. சிந்து வெளி நாகரிகத்தை திராவிட நாகரிகம் என்கின்றனர், அது அழிந்தததற்கு ஆரியப் படையெடுப்பு காரணமென்கி்ன்றனர். ஆனால் அவர்கள் கூறும் காரணங்களை ஆராய்ந்து பார்க்கையில் இவை எதற்கும் சான்றுகள் இல்லையென்பது தெரிகிறது.

இங்கு வந்துள்ளவர்கள் ஆரியர்களும் இல்லை, அவ்வாறு கூறுவது ஒருவித மாயை. அதுபோலவே நம்மை திராவிடர் என்று கூறுவதும் மாயையே. நம்மை திராவிடர் என்று அடையாளப்படுத்திவரும் தமிழக முதல்வர் விவாதத்திற்கு அழைக்கட்டும் நான் தயாராகவே இருக்கிறேன்.

எனவே திராவிடர் என்ற பொய் எப்படி நமது அடையாளமாக முடியும்? நம்மை திராவிடர் என்று அடையாளப்படுத்துவது, நமது பிரச்சனைகளுக்குத் தீர்வு காண அல்ல, தமிழினத்தை, அதன் அடையாளத்தை சிதைப்பதற்கே பயன்படுத்துகின்றனர்.

நாம் நம்மை தமிழர் என்று அடையாளப்படுத்திக்கொண்டால் தான் தமிழினத்தின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முடியும். ஈழத்தில் தமிழினத்தை அழிக்க நடந்த போர், இப்போது தமிழினத்தின் அடையாளத்தை அழிப்பதில் தொடர்ந்துகொண்டிருக்கிறது.

இதைத் தடுத்து நிறுத்த வேண்டுமானால், நமது அடையாளம் தமிழர் என்பதை உணர்ந்து நாம் ஒன்றிணைய வேண்டும். திராவிடம் பிரிக்கிறது. தமிழர் என்பது இணைக்கிறது" என்று மருத்துவர் கிருஷ்ணசாமி பேசினார்.

இக்கருத்தரங்கில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:

"எங்கள் குருதியோடு இரண்டரக் கலந்துள்ள தமிழ் மொழியின் வழி - எங்கள் தாய் மொழியின் வழி - ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாகத் தமிழர் என்றே எங்களை அடையாளம் காட்டுகிறது வரலாறு.

,இந்த நீ்ண்ட நெடிய பெருமிதத்திற்குரிய வரலாற்றைத் திரித்து, தங்களது சுய இலாபங்களுக்காக ‘திராவிடர்' என்று எங்களை அடையாளப்படுத்த நினைப்பவர்கள் எவ்வளவு உயர்ந்த பதவியில் இருந்தாலும், இந்தக் கருத்தரங்கம் அவர்களை வன்மையாகக் கண்டிக்கிறது.

நாங்கள் பிறப்பால் தமிழர், இறப்பாலும் தமிழர். எங்களது அடையாளம். அது மட்டுமே எங்கள் அடையாளம் என்று தமிழ் அறிஞர்களும், தமிழ் ஆர்வலர்களும் பங்கேற்கும் இந்தக் கருத்தரங்கம் வலியுறுத்துகிறது.

தமிழர் என்கிற எங்கள் அடையாளம் காக்க, தமிழராய் எழுவோம் என்று இக்கருத்தரங்கம் உறுதியேற்கிறது".

தமிழரா? திராவிடரா? எது நமது அடையாளம் என்பதை ஐயத்திற்கிடமின்றி உறுதிபடுத்த தமிழ்நாடு முழுவதும் இப்படிப்பட்ட கருத்தரங்கத்தை புதிய தமிழகம் கட்சி நடத்தும் என்றும் மருத்துவர் கிருஷ்ணசாமி கூறினார்.

Comments