ரமேஷ் சிவரூபனின் கொலைக்கு யாழ் இணையத்தை குற்றம் சாட்டும் ஈழம் ஈ நியூஸ்


பிரான்சில் வாழ்ந்து வந்த எழுத்தாளர் ரமேஸ் சிவருபன் அவர்கள் கடந்த 02.06.2010 அன்று பாரிஸ் நகரில் சக தமிழர்கள் சிலரினால் தாக்கப்பட்டு மரணமடைந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ரமேஸ் சிவருபன் மேற்படி சம்பவத்தை அடுத்து கைது செய்யப்பட்டுள்ள நபர்களுடன் உரையாடிக்கொண்டிருந்த நிலையில் வாய்த்தர்க்கம் முற்றி வன்முறையாகி ரமேஸ் சிவருபன் இவர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டதாகவும் பின்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி மரணமடைந்ததாகவும் தெரியவருகிறது.

திட்டமிட்டே கூட்டிச்சென்று தாக்கினார்களா அல்லது தற்செயலான தாக்குதலில் மரணமடைந்தாரா என்பது குறித்தும் மற்றும் இக் கொலையில் வேறு யாருக்கும் தொடர்பிருக்கின்றதா என்பது குறித்தும் பிரெஞ்சு காவல்துறையினர் புலன் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

இக் கொலையை அடுத்து செய்தி வெளியிட்டுள்ள ஒரு இணையத்தளம் தனது கவலையை பின்வருமாறு பதிவு செய்துள்ளது:

“புகலிட சூழலில் வன்முறைக் கலாச்சாரம் என்பது ஈழத் தமிழ் மக்கள் மத்தியில் வெகு ஆழமாக புரையோடிப்போய் உள்ளமைக்கு இம்; மரணம் சாட்சி பகர்கின்றது.

சாதாரண உரையாடல்களைக்கூட சகித்துக்கொள்ளமுடியாத வன்முறைச் சமூகமாக ஈழத்த தமிழர்கள் உருமாற்றம் அடைந்துவருகின்றனர் என்பது மிகவும் அதிர்ச்சிக்குரிய வேதனையான விடயமாகும். இது தொடர்பாக சமூக அக்கறையாளர்கள் கவனம் கொள்ளவேண்டியது அவசிய கடமையாகும்.” அர்த்தம் பொதிந்த வாசகங்கள் அவை.

ரமேஸ் சிவருபன் ஒரு படைப்பாளியாக இருந்தபோதும் அரசியல்தஞ்ச கோரிக்கை ஆவணங்களை தயார் செய்தல் மற்றும் மொழிபெயர்ப்பு போன்ற பணிகளில் ஈடுபட்டுவந்தவர் ஆவார். மேற்படி அவரது மரணத்தை சிறீலங்கா ஆதரவு ஊடகங்கள் சில திரித்து வெளியிட்டுள்ளன. அதாவது புலத்தில் விடுதலைப்புலிகளின் உட்பூசல் காரணமாக இவர் ஒரு தரப்பினால் கொல்லப்பட்டதாக பொய் செய்தியை வெளியிட்டுள்ளன. இதற்கு நம்மவர்களின் பொறுப்பற்ற போக்குகளும் ஒரு காரணம் ஆகும். ஆதாரமற்ற செய்திகளை வெளியிடுவது. ஒருவரையொருவர் குற்றம் சுமத்தி போலி அறிக்கைகளை வெளியிடுவது போன்ற ஆரோக்கியமற்ற ஊடகச் செயற்பாடுகளின் பின்விளைவே இந்த கொலையின் பின்னணியும் புலிகள் மீது குற்றம் சுமத்தும் பொய் செய்தியும் ஆகும்.

ரமேஸ் சிவருபன் ஒரு சிலரின் சில பொய்யான தகவல்களின் அடிப்படையில் அவதூறுக்குள்ளாகியதாகவும் அதன் நிமித்தம் வேறு சிலரால் வெருட்டப்பட்டதாகவும் தற்போது இந்த மரணம் நிகழ்ந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. ஆதாரமற்ற பொய்யான தகவல்களும் கருத்தை கருத்தால் எதிர்கொள்ள முடியாத சிறுபிள்ளைத்தனமும் ஒரு எழுத்தாளனின் பேனாவை நிரந்தரமாக முடக்கியிருப்பது வேதனைக்குரியது.

கடந்த வாரம் “யாழ்” இணையத்தளம் பல தமிழ் ஊடகவியலாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள் மீது பொய் குற்றம் சுமத்தி சம்மந்தபட்டவர்களின் உயிருக்கு அச்சுறுத்தலை தோற்றுவித்தமை தெரிந்ததே.

இந்த நேரத்தில் இப்படியொரு படுகொலை நிகழ்ந்திருப்பது சம்பந்தபட்ட ஊடகவியலாளர்களை மேலும் அச்சத்திற்குள்ளாக்கியிருக்கிறது.

“யாழ” இணையத்தினால் அச்சுறுத்தலுக்குள்ளாகிய சம்பந்தபட்ட உடகவியலாளர்கள் குறிப்பாக பிரான்சில் வாழும் ஊடகவியலாளர்கள் உடனடியாக காவல்துறையில் ஒரு முறைப்பாட்டை மீண்டும் பதிவு செய்வது நல்லது என்றே தோன்றுகிறது. மேற்படி கொலை எமக்கு தரும் முன் எச்சரிக்கை இது.

கருத்தை கருத்தால் எதிர்கொள்ளும் பக்குவமின்மையும் சகிப்புதன்மையின்மையும் ஒரு வகை வன்முறை வெறியாட்ட தன்மையுமே “யாழ்” இன் அச்சுறுத்தலில் புதைந்திருந்ததை பல மனிதஉரிமையாளர்களும் உளவியலாளர்களும் எமக்கு சுட்டியிருந்தனர். நிலமையின் விபரீதத்தை உணர்ந்தே நாம் சட்ட நடவடிக்கையில் இறங்கியிருக்கிறோம்.


பிரெஞ்சு பலனாய்வுத்துறை அதிகாரி திரு பஸ்கால் அவர்கள் இலங்கை புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு விலைபோய் தமிழ் ஊடகவியலாளர்களை குறிவைத்திருப்பதாகவும் விலைக்கு வாங்க முற்படுவதாகவும் தன்னிடம் போதிய ஆதாரமிருப்பதாகவும் வெளிப்படையாக “DAM” என்ற மர்ப நபர் “யாழ” இல் முன்வைத்திருக்கும் கருத்து மிகவும் பயங்கரம் நிறைந்ததும் நிகழப் போகும் படுகொலைகளுக்கு பிரெஞ்சு காவல்துறையையும் சமம்பந்தபட்ட ஊடகவியலாளர்களையும் பழிகாரர்களாக்கும் முயற்சியும ஆகும்.

எனவே உடனடியாக சம்பந்தப்பட்ட நபரை நீதிக்கு முன் நிறுத்துவதனூடாகவே நிகழப்போகும் பயங்கரங்களை தடுக்க முடியும். தமிழ்ச்சமூகம் வன்முறைச் சமூகம் என்ற பழிச்சொல்லிலிருந்து தப்புவது மட்டுமல்ல ஜனநாக முறையில் நாம் விடுதலையை புலத்திலிருந்து முன்னெடுப்பதற்கும் இந்தகைய தீய சக்திகள் அடையாளங் கண்டு அகற்றப்பட வேண்டியது அவசியம்.

எமது சட்ட நடவடிக்கைகளுக்கு முன்பாக ஊடகவியலாளர்கள் கொலைசெய்யப்பட்டாலோ தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டாலோ “யாழ்” இணையமே பொறுப்பேற்க வேண்டும் என்பதை நாம் இந்த இடத்தில் நினைவுறுத்த விரும்புகிறோம்.

நாடுகடந்த அரசின் இடைக்கால பொறுப்பாளர் திரு உருத்திரகுமாரனின் கவனத்திற்கு மேற்படி “யாழ்” இணையத்தின் கொலை அச்சுறுத்தலை கொண்டு சேர்த்திருக்கிறோம். அவரிடம் சட்ட ஆலோசனைகளை பெறுவதற்கும் காத்திரமான பங்களிப்புக்களை நல்குவதற்கும் ஈழம்ஈநியூஸ் தொடர்ந்து உரையாடலில் ஈடுபட்டுள்ளதை பாதிக்கபட்ட உடகவியலானர்களுக்கு கூறவிரும்புகிறோம்.

மற்றும் தமிழர் மனித உரிமைகள் மையம், உலகத் தமிழர் பேரவை , புலம்பெயர் ஊடக அமைப்புக்கள் என்பற்றுடனும் கலந்தாலோசித்து ஒரு கூட்டறிக்கையை கொண்டு வருவதற்கு ஈழம்ஈநியூஸ் களத்தில் இறங்கியுள்ளது. புலத்தில் எந்த வடிவத்திலும் எதேச்சதிகார போக்கை வன்முறையை ஈழம்ஈநியூஸ் ஆதரிக்காது. எமது உயிரைக்கொடுத்தாவது ஈழம்ஈநியூஸ் தனது கடமையைச் செய்யும். இந்த இடத்தில் மரணமடைந்த படைப்பாளி ரமேஸ் சிவருபனுக்கு “ஈழம்ஈநியூஸ்” தனது அஞ்சலியை செலுத்துகிறது.

நன்றி: "ஈழம்ஈநியூஸ்"

----------

ரமேஸின் கொலைச் செய்தியை அறிந்தவுடனேயே ‘ரமேஸ் புலிகளால் அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கிறார்’ என இலங்கை அரசு சார்பான ஊடகங்கள் ‘அவசர’ச் செய்தியை வெளியிட்டுள்ளன.

‘இனியொரு’, ‘தமிழரங்கம்’ ஆகிய இணையங்கள் நண்பர்களுக்குள் நடந்த சண்டையின்போதுதான் ரமேஸ் அடிக்கப்பட்டுப் பின் இறந்திருக்கிறார் என்று சொல்கின்றன. அவ்வாறு நடந்திருக்கத்தான் வாய்ப்பு உள்ளதாக நானும் கருதுகிறேன்.

-ஷோபாசக்தி-

Comments